சனி, 18 நவம்பர், 2017

வெத்தல பட்டி

கிழவன் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து ஊரே சிரித்துக் கொண்டிருந்தது.  பேருந்து நிறுத்தமாதலால் பொதுமக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். எல்லோரும் அவர் செய்வதைப்  பார்த்துக் கடந்துக் கொண்டிருக்க அவர் வளர்த்த நாய் மட்டும் “நான் இருக்கேன் வோய்... உம்ம கூட” என்பது போல் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.  சில சிறுவர்கள் தூரத்தில் நின்று, வேற்று கிரக வாசியை பார்ப்பதை போல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர்.  பைப்பு மூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த சில பெண்களும், வைத்த கண் வாங்காமல் கிழவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

கிழவன் எதையும் சட்டை செய்ததாக தெரியவில்லை. கண்கள் சிவந்து இருந்தது.  கொஞ்சம் தண்ணியடித்திருப்பார் போலும்.  கோவிலில் சாமிக்கு பூஜை செய்வதை போல், அகர்பத்தியை கவரிலிருந்து பிரித்து எம்ஜிஆர்  போட்டோவிற்கு காட்டிக்கொண்டிருந்தார்.  ரோட்டோரத்தில் இருந்த ஒரு மர நிழலில் போடப்பட்டிருந்த மேஜையின் மீது ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு தாம்பாளத்தில் திட்டுவிளை மஸ்தான் சாஹிப்பு கடையில் வாங்கிய திராட்சை, ஆரஞ்சு, வாழை பழங்களுக்கு நடுவே சிறிது கற்கண்டும், ஒரு ஓரத்தில் சிரித்த முகமாய் எம்ஜிஆர் போட்டோவும் வைக்கப்பட்டிருந்தது. எல்லா ஊரிலும் எம்ஜிஆர் இறந்த நாளன்றும் இந்த நடைமுறை பழக்கமானதுதான் என்றாலும், வருடம் தவறாமல் இதை தவறாமல் கண்ணியமாக, கண்ணீருடன்  செய்யும் துரை பாட்டாவை தான்  ஊரே நின்று வேடிக்கை பார்க்கிறது இன்று.

துரை பாட்டா அடிமைப் பெண் படத்தை ஐம்பத்து ஏழு தடவை பார்த்த எம்ஜிஆர் ரசிகர். சரியாக சொன்னால் எம்ஜிஆர் பக்தர். ஒல்லியான தேகம். ஒருகால் ஊனம்.  ஒருபுறமாய் சாய்த்து கிண்டி, கிண்டி நடந்தாலும், நல்ல கால்கள் வைத்திருப்பவர்களை விட வேகமாக நடப்பவர்.  மழைக் காலத்தில் மட்டும்  சட்டையணிபவர்.  மற்ற நேரங்களில் குற்றாலம் துண்டும், வடசேரி நெய்வு வேட்டியும் தான் முழு நேர உடை. எண்ணை தேய்த்து வழித்துவாரிய தலையும், நெற்றி நடுவே பெருவிரல் அகலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் அம்மன் கோவில் குங்குமமும் அவர் குளித்ததை பறை சாற்றும் அடையாளக் குறிகள்.  உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் ரேசன் கடையில் கிடைத்த அரசு சலுகை வேலையை, வேண்டாமென்று ஊதித் தள்ளிய ரோசக்காரர்.  “என் கழிவ பாக்காம, கால்ல..... இருந்த ஊனத்தை பார்த்து கிடைச்ச வேலை... மயிருக்கு சமானம் டே.,,- என்று இப்போதும், சில பேரிடம் உதார் விடுவதுண்டு. ஊர் பஸ்டாண்டில் இருக்கும் அரச மரமும் அதன் நிழலில் இருக்கும் கூரைவேய்ந்த பெட்டிக்கடையும்தான் அவர் உலகம். 

கடைச் சுவரில் இருக்கும் இரட்டை இலைச் சின்னத்தையும், எம்ஜிஆர் பெயரையும் பல ஆண்டுகளாக பொக்கிசமாக பாதுகாத்து வருபவர். “வீம்பு புடிச்சவண்டே..அந்த நொண்டி.”. என்று அவரை பிடிக்காதவர் மத்தியிலும், “ஊனமா இருந்தாலும் வைராக்கியம் உள்ளவண்டே...” என்று அவரை பிடித்தவர் மத்தியிலும் பெயர் வாங்கியவர்.  ஊரின் நுழைவாயிலில் உள்ள கடையாதலால், ஊரில் உள்ள அநேக பேருக்குப் பரிச்சயமானவராக இருந்தார் துரை பாட்டா.

அகர் பத்தியை கொளுத்தி பழச்சீப்பில் குத்தி வைத்து விட்டு, எம்ஜிஆர் போட்டோவை பய பக்தியோடு இரண்டு நிமிடம் கும்பிட்டுவிட்டு பெட்டிக்கடையை நோக்கி நடக்கலானார் துரை பாட்டா. அவர் நாயும் அவரைப் பின் தொடர்ந்து நடந்து, கடையை ஒட்டிய அரச மூட்டில் படுத்துக்கொண்டது.  வேடிக்கை பார்த்தவர்களெல்லாம் அவரவர் வேலைக்குத் திரும்ப, எம்ஜிஆர் போட்டோவின் முன்னாலிருந்த அகர்பத்தி புகையை உமிழ்ந்து பொடியாகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் காலை நேர பஸ் ஸ்டாண்ட் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கடை இருப்பதாகத் தெரியாத நிலையில் இருந்தது துரை பாட்டாவின் பெட்டிக்கடை. இடுப்பில் செருகி வைத்திருந்த சாவியை எடுத்து, துரு பிடித்த பூட்டை லாவகமாகத் திறந்தார்.  “இன்னும் என்னை நீ நம்புறாயே... துரை” என்று பூட்டு இவரிடம் கேள்வி கேட்டு, திறந்தது போலிருந்தது. 

கடையைத் திறந்து கைக்கு வசதியாக வியாபார பொருட்களை எடுத்துக் கடையின் முன் புறத்தில் அடுக்கி வைத்தார். ரத்த சிவப்பு நிற சர்பத் பாட்டில்கள், ஆரஞ்சு மிட்டாய் பாட்டில்கள், பார்த்தவுடன் எச்சில் ஊரும் தேன் மிட்டாய் பாட்டில்கள், சுத்து முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு பாட்டில்கள், சிகரெட்டை கொளுத்த, கரி பிடித்த எரியும் சிம்னி விளக்கு என ஒவ்வொன்றாக எடுத்து முன்புற மரப்பலகையில் அடுக்கினார். ஏத்தன், ரசகதளி, பூவன் பழ கொலைகளை எடுத்து வெளிப்புற கயிறுகளில் தொங்க விட்டார்.  மண் பானையில் சர்பத் அடிக்க கிணற்றுத் தண்ணீரை நிரப்பினார். பழைய தண்ணீரைக் கண்ணாடி குவளைகளைக் கழுவப் பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி வைத்தார்.   சிகரெட், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பாக்களை வைத்து முன்புற காலி இடங்களையும் நிறைத்த பிறகு, ஒரு கடைக்கான தோற்றம் வந்தது மாறி இருந்தது. 

பழைய ரேடியோவை ரெண்டு தட்டு தட்டி, பாடல்களை பிடித்து வைத்து, பின்பு சர்பத் போடும் கண்ணாடியை குவளைகளை கழுவ ஆரம்பிக்கும் போது தான் கேசவன் பிள்ளை ஆசிரியர் கடையை நோக்கி வந்திருந்தார்.  இருவரும் சமவயது நண்பர்கள் ஆகையால், பேச்சுகளில் நக்கலும் நையாண்டியும் நடனமாடும்.

“என்ன துர... தலைவரு பொறந்த நாளை அமக்களமா கொண்டாடுக போல” – என்று கூறிக்கொண்டே வெற்றிலையை கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிப் பேச்சை ஆரம்பித்தார் கேசவன் பிள்ளை.

“மறக்க கூடிய தலைவரா கேசவா... அவரு... மக்கள் திலகம்டே நம்மாளு...”

“அது சரி... உண்மைதான்... இப்பவும் அவரு முகத்தைப் போட்டுத்தானே... மொத்த கட்சியையும் நடத்துகானுகோ..” என்று சொல்லி வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு கலவையை வாயினுள் திணித்தார்.  மொத்தத்தையும் கடவாய் பற்கள் அருகே கொண்டு சென்று, கறாம் பசு, கோரை புல்லை சவைப்பதை போல “நறுக்..நறுக்..” கென்று கடிக்கலானார்.

“காலையிலேயே வெத்தலையை போடுக... வேற ஆகாரம் ஒண்ணும் இல்லையா...”

“ஆகாரம்லா தின்னாச்சுடே... கொஞ்சம் பல்லு வலி... இத போட்டா.. கொஞ்சம் இதமா இருக்கும்லா... அதான்.. – என்று சொல்லி வெற்றிலையை கடித்து குதப்பினார்.  சிறிது நேரத்தில் வாய் முழுதும், கோழி ரத்தம் குடித்த சாமி கொண்டாடியை போல் இரத்த சிவப்பாக மாறியிருந்தது.

பல்லு வலிக்கு ரெண்டு கிராம்ப.. தேன்ல தட்டி, பொடிச்சு.. வலி உள்ள இடத்துல வச்சா தீரும்லா... வெத்தல போட்டா எப்படி தீரும்...

துரை பாட்டா அப்படித்தான்.  சிறுவயது முதலே வைத்தியத்தில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம்.  கை வைத்தியம் சொல்வதில் கெட்டிக்காரர். அவர் சொல்லும் மருந்துகள் வித்தியாசமாகவும், விவகாரமாகவும் இருக்கும். கைவலி, கால் வலி, மண்டை கனம், ஆண்மை விருத்தி, தலை சுற்றல், நாய் கடி, நகச்சுற்று, கழுத்துவலி என ஒவ்வொன்றிற்கும் ஒரு மருந்து சொல்வார்.

“கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு மூணையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, இளம் சூட்டுல கொஞ்சம் கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள மூட்டுல தேச்சு பாரு.. வலி குறையலேன்னா என் சட்டையை புடிச்சு கேளு”..
“பூசணி வித்த எடுத்து, காய வைத்து, இடிச்சி பொடியாக்கி, தேனையும் இஞ்சியையும் சேர்த்து, பாலில் கலந்து குடிச்சிட்டு, மத்த(!) வேலையை செஞ்சு பாரு... அப்புறம் கட்டிலு உடைஞ்சு போச்சுன்னு.. என்ட வந்து சொல்ல கூடாது... பார்த்துக்கோ!...”.
“மூஞ்சில பருவுனா... எதுக்குல கண்ட மருந்தை போடுகியோ... கோமூத்ரத்துக்கு கூட சந்தனத்தை சேர்த்து.. மூஞ்சியில தேய்ச்சா.. போச்சு...
“மூணு கற்றாழை மடல, உப்பு கூட இடித்து நாய் கடிச்ச இடத்துல 3 நாளு கட்டினாநாய் கடி விஷம் குறையாம இருக்குமா!”

--- என்பது மாதிரியான மருந்துகள். 

அவர் மருந்துகள் சில பேருக்கு நிவாரணம் தந்தாலும்,  பலபேரைப் படாதபாடு படுத்தி விடும். அதனால் தான் கேசவன் பிள்ளை அவர் ஆரம்பிக்கும் போதே... நிராகரித்தார்.  வெற்றிலை குதப்பலை வெளியே துப்பி, தண்ணீரால் வாயை கொப்பளித்தார்.

“வேய்... துரை... உம்ம வைத்தியத்தை... ஊர்ல உள்ள பயக்கள்ட காட்டணும், கேட்டயா.. நம்மளுட்ட வேண்டாம்.. மண்டையில முடி வளரதுக்கு 25 வருசத்துக்கு முன்னாடி ஒரு வைத்தியம் சொன்னயே.. சண்டாளா.... இப்பவும் மறக்க முடியல என்னால.. உன் வைத்தியத்தோட லெட்சணம் அன்னைக்கே தெரிஞ்சு போச்சு....  மனுசனா நீ....” – என்று சொல்லி பழைய நினைவுகளை நினைந்தார் கேசவன் பிள்ளை.

ஆம்... அது ஒரு ரசனையான விஷயம்... இருவருக்கும் இருபத்தெட்டு, முப்பது வயது இருக்கும்.  முதல் குருத்து விட்ட தென்னம் பிள்ளைகளை போல், தள தளத்த பருவம்.  கேசவன் பிள்ளைக்கு வாத்தியார் வேலை கிடைத்து பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  கல்யாணத்தை நினைத்து, கனவு கண்டு கொண்டிருந்த கேசவன் பிள்ளைக்கு தலையில் முடி இல்லாது, வழுக்கையாக இருந்தது பெரிய குறையாக இருந்தது. நண்பன் துரையிடம் ஆலோசனை கேட்க, இளவயது துரை பாட்டா.. ஒரு வைத்தியம் சொன்னார்.

காலையில் தலையில் விளக்கெண்ணையை தடவி, தாமரை இலையை தீயில் வாட்டி, தலையைச் சுற்றிக் கட்டி, சாயங்கால நேரத்தில் கோவேறு கழுதையைக் கொண்டு வழுக்கை உள்ள இடங்களை நக்கச் செய்ய வேண்டும். இது தான் மருந்து.  பாவம் கேசவன் பிள்ளை.. என்னச் செய்ய.. துரை பாட்டாவை முழுதாக நம்பினார். முடி வளந்தாகணுமே.. கல்யாணம் வேற வருகிறதே.. சோதனைக்குத் தயாரானார்.  தலை முழுவதும் விளக்கெண்ணையைத் தடவி தாமரை இலை கட்டும் போட்டாயிற்று.  சாயங்காலம் வரை காத்திருந்தார்.  பணம் கொடுத்து கோவேறு கழுதையையும் வீட்டுப் பின் புறத்தில் வரவழைத்திருந்தார். கழுதைக்காரன் கழுதையோடும் ஆச்சர்யத்தோடும் காத்திருந்தான்.  தலையிலிருந்து தாமரை இலைக் கட்டு அவிழ்க்கப்பட்டது.  இப்போது கழுதை நக்க வேண்டுமே? என்ன செய்ய.. விளக்கெண்ணை தலையை கழுதையின் முகம் முன்னே  நீட்டிக்கொண்டு, கழுதையின் வாயைத் திறந்து, நாக்கை இழுத்து வழுக்கையில் தேய்த்தார்.  நடக்கும் நிலைமையை ஜீரணிக்க முடியாதக் கழுதை வித்தியாசமான ஒலி எழுப்ப, கேசவன் பிள்ளை விட்டப் பாடில்லை. கழுதை கண்ட இடத்தில் மிதித்து, முடிவளரும் சிகிச்சைக்கு பதிலாகக் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை நடந்து விடக்கூடாது என்ற பயமும்  கேசவன் பிள்ளைக்கு இருந்தது. 
நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கழுதை காரனுக்குச் சிரிப்புத் தாங்க வில்லை.  கழுதையும் நக்கின பாடில்லை.  ஆவேசத்தோடு கழுதைக்காரனிடம் கேட்டார். 
“லேய்.. உன் கழுதைக்கு, என்னல  நல்ல புடிக்கும்?
“உப்பு போட்ட கஞ்சி தண்ணினா…… நக்கி நக்கி குடிக்கும் பண்ணையாரா..! – சிரிப்பை அடக்கி கொண்டு கூறினான்.
என்ன நினைத்தாரோ... என்னவோ...அவரசரமாக அவரசரமாக வீட்டுக்குள் சென்று, கஞ்சித் தண்ணியில் உப்பை போட்டு கலக்கி, கழுதையின் முன் வந்து, ஆவேசமாகத் தலையில் ஊற்றினார்.  கழுதைக்காரன் சிரிப்பை அடக்க முடியாமல், தென்னை மரத்திற்கு பின்னால் ஓடி ஒளிந்தான்.
என்ன நினைத்ததோ.... என்னவோ... கழுதை - கேசவன் பிள்ளையின் வழுக்கையை  நக்கித் தொலைத்தது.  ஆனால் அத்தனை கஷ்டத்திற்கு பிறகும், முடி மட்டும் வளர்ந்த பாடில்லை. இப்போதும் பள்ளி கூடத்தில், மாணவர் மத்தியில் அவரின் வட்டப்பெயர் “வழுக்கை கேசவன்”தான்.
“கழுதையை ஒழுங்கா நக்க விட்டுருக்க மாட்ட... அதான்.. முடி வரல.. என்று சொல்லி சமாளிக்க பார்த்தார் துரை பட்டா.
“வாயில நல்லா வந்துரும் பார்த்துக்கோ.. என்று கேசவன் பிள்ளை ஆவேசப் படும் போது தான், நிறைமாத கர்ப்பிணி பெண் வருவதைப் போல் அருமநல்லூர் பஸ், ஆடி குலுங்கித் திருப்பத்தில் நின்றது.  இரண்டு மூன்று ஆட்களைத் தொடர்ந்து ஒரு வயதான பெண்ணும், 16, 17 வயதில் ஒரு பெண்ணும் இறங்கினர். இருவரின் முகச்சாயல்கள், அம்மாவும், மகளுமாக இருக்க வேண்டுமென்பதைச் சொல்லாமல் சொல்லியது.  இருவரும் நடந்து ஊருக்குள் செல்லும் போதுதான் துரை பட்டா கவனித்தார், அந்த இளம் பெண் லேசாக கிண்டி, கிண்டி நடப்பதை.

ஏதோ யோசனையோடு கேசவன் பிள்ளையிடம் கேட்டார்.
“கேசவா.. யாருடே இது.. எங்கயோ பார்த்த மாறி இருக்கு..”
“அதான் நானும் பாக்கேன்.. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு... வைத்திய சாலைக்கா இருக்கும்”-  தங்களுக்கு முடிந்த வரையில் இருவரும் ஆருடம் கணித்துக்கொண்டனர்.  இருவர் மனதிலும்  அவர்களை எங்கேயோ  பார்த்ததாய் ஒரு குழப்பம்.  துரை பாட்டா, வழக்கமான உரையாடல்களுக்குள்  திரும்பி இருந்தாலும் பின் மண்டையில் அந்த கேள்வி தொடர்ந்து உருத்திக் கொண்டேயிருந்தது.

அரை மணிநேரத்தில் வைத்திய சாலைக்கு சென்ற அம்மையும் மகளும் பஸ் ஸ்டாண்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  தூரத்தில் அந்த பெண்ணின் முகத்தை மீண்டும் கண்டதும், கேசவன் பிள்ளைக்கு சட்டென்று அந்த முகம் நினைவிற்கு வந்தது..
ஒரு வித சந்தோஷ உந்துதலோடு சற்று உரக்கக் கத்தலனார்.
“துரை.. இது மத்தவ தாண்டே..அவதான்.. அந்த கிழவீட்டுக்காரி”. 
“யாருடே... மனசிலாகலையே.....”
எழுத்தில் கொண்டு வர முடியாத ஒரு அசட்டு சத்தத்தை ஏற்படுத்தினார் கேசவன் பிள்ளை..
“துரை... மத்தவ டே.. சரக்க போட்டதும் விருட்டு, விருட்டு ஓடிவியே..
குழப்பத்துடனேயே பதில் சொன்னார் துரை பாட்டா... “ஒருத்திட்ட... போனா... சரி... எத்தனை எடம் ஏறி எறங்கியிருக்கோம்..”
கேசவன் பிள்ளைக்கு லேசாக கோபம் வந்தது.
இப்ச்ச்ஸ்.... ஏ...துரை..... மத்த மாங்குளத்து காரிடே ... “வெத்தல பட்டி”-ன்னு சொல்லுவியே...
“வெத்தல பட்டி”-ன்னு சொன்னதும் பட்டென்று துரை பட்டாவுக்கு பொறி தட்டியது..மீண்டும் அவர்களை உற்று நோக்கி....
அவளா... இல்லை டே...நல்ல பாரு...!
இப்ஸ்.... அவ தாண்டேன்னு... என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே.. அம்மையும் மகளும் கடையருகே வர ஆரம்பித்தனர்..
அருகில் நெருங்க நெருங்க துரை பாட்டாவிற்கு மனசிலாகியது.. அவள் “வெத்தல பட்டி” தான்.  எப்படி இருந்தாள்.... இப்ப ...எப்படி ஆகி விட்டாள்..
சட்டென்று நினைவுப் படகேறி, கால வெள்ளத்தில் பதினைந்து இருபது வருடங்கள்  பின்னோக்கினார் துரை பாட்டா.....

துரை பாட்டா இளம் பிராயத்தில் அழகாக இருப்பார்.  இளமையில் பெற்றோரை இழந்த, குடும்பமேதும் இல்லாத தனிக்கட்டை.   தன் ஊனத்தை நினைத்த ஒருவித தாழ்வு மனப்பான்மை மட்டும், எப்போதும் அவரை ஆக்கிரமித்திருந்தது. அதுனாலேயே தன்னை கோபக்காரராகக் காட்டிக் கொள்வார்.

தடிக்காரன்கோணம் எஸ்டேட்டில் காலையிலேயே ரப்பர் பால் வெட்டும் வேலை.  விடியற்காலை மூணு மணிக்குப் போனால் காலை பதினோரு மணிக்குள் நானூற்றிஐம்பது ரூபாயோடு திரும்பி விடலாம். வேலையின் விவரம் தெரிந்தவர்களுக்கு எளிதான, நாசுக்கான வேலை. வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வேலை. வேலை முடிந்தவுடன் கூலி. 

அந்நாட்களில் அவர் நண்பர்களிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தார். மொத்த ரூபாயையும் செலவழித்து ஊதாரித்தனமான வாழ்கையில் திளைத்தார்.  மது, மாது, என எல்லாவற்றிலும் காசை அள்ளி வீசினார்.  எதையும் விட்டு வைக்க வில்லை. அவர் ஊனத்தை பார்த்து அவர் மீது வீசப்படும் பரிதாபப் பார்வைகளை அவர் விரும்பவில்லை.. அல்லது அவருக்கு அது பிடிப்பதில்லை.  அவர் மீதின் மற்றவர்களின் அனுதாபங்கள் கூட, அவருக்கு ஏளன பேச்சுகளாகவே பட்டன.

அன்று அப்படிதான். கோவில் கும்பாபிசேக விருந்தில் டிரைவர் கண்ணன் தெரியாமல் ஒரு வார்த்தை சொல்ல, அவரைக் கேள்விகளால் படாத பாடு படுத்திவிட்டார் துரை பட்டா.  பொது மக்கள் கூட்டம் சாப்பாட்டிற்காக உட்கார்ந்திருக்க,  சோற்றுச் சிப்பலை கையிலெடுத்து விளம்பத் தயாரானார் துரை பட்டா. இதை பார்த்த கண்ணன் சட்டென்று வார்த்தைகளை உதிர்த்து விட்டான்.
“துரை.... நீ மொதல்ல உக்காந்து சாப்பிடு..டே.. இந்த காலை வச்சிட்டு விளம்பதுக்கு... நிக்க..” – என்று உண்மையான அனுதாபதில்தான் சொன்னான் கண்ணன்.
கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் துரை..

“லேய்.. நீ உன் சோலி மயிரை பாருல.. எப்பம் சாப்பிடனும்னு எனக்கு தெரியும்.. அத நீ ஒரு... குன்......யும் சொல்லாண்டாம். நான் உண்ட காலு வலிக்குன்னு சொன்னனா? இந்த படம், மயிரெல்லாம் வேற எவண்டயாவது வச்சிகிடணும்.. கேட்டயா?”

நார் நாராகக் கிழித்தெடுத்து விட்டார் துரைபாட்டா...  கண்ணனுக்குப் பெருத்த அவமானமாகப் போய் விட்டது. தன் ஊனத்தின் பொருட்டு அளிக்கப்படும் எந்த சலுகையும் அவர் எந்தக் காலத்திலும் ஏற்றதில்லை.  சொந்த பந்தம் ஏதும் இல்லாததாலும், நல்லது கெட்டது சொல்ல ஆள் இல்லாததாலும் மனம் போன போக்கில் வாழ்க்கையை ருசித்தார்.

இரவானால் தண்ணியடிக்காமலும் இருந்தததில்லை.  மாதம் நான்கைந்து முறை “பெண்” கூடுதலும் உண்டு.  அப்படி துரை பாட்டாவிற்கும், கேசவன் பிள்ளைக்கும் அறிமுகம் ஆனவள் தாள் இந்த “வெத்தலபட்டி”.  வறுமையில் பிறந்து, புத்தி குறைந்த கணவனுக்கு மனைவியாகி, பின்னர் வயிற்று பிழைப்புக்காக “உடல் தொழில்”-லுக்கு உட்பட்டவள்.   இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையை தவிர வேறென்ன இருக்க முடியும்.  காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன?  அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா.... ?

இருந்தாலும், உறவுகளா? மானமா? உயிரா? என்ற கேள்விகளில், உறவுகளுக்காக மானமிழந்து உயிர்வாழ்பவர்கள் என்று கூட சொல்லலாம்.  அறிவை விற்றுச் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில், உடலை விற்று சம்பாதிப்பவர்கள். அவ்வளவே.

வெத்தலபட்டியும் அப்படித்தான். குடும்பம் காக்க, உடம்பைக் கொடுப்பவள்.  காமம் தணிக்க வரும் யாரிடமும், வெத்தலபட்டி பெரிதாகப் பேசுவதில்லை.  யாரும் அவளிடம் பேசுவதும் இல்லை. கேட்ட கேள்விக்கு பதில். வெத்தலை சிகப்பான உதடுகளால் ஒரு அசட்டு புன்னகை.  முதலில் பணப்பரிமாற்றம். பின்பு  ஆசை தீரும் வரை உடல் சேவை.. அவ்வளவே. 

அரை போதையோடு  முதல் முதலாய் வெத்தலை பட்டிடம் வந்த போது, துரை பட்டா, அவள் வீட்டு வாசல் படுப்பனையில் உக்காந்திருந்தார்.
“உள்ள வாரும்.. கட்டிலு சரியில்லை.. அந்த பாயில உக்காரும்.. இப்ப வாரேன்.” - ஐந்தாறு நிமிட இடைவெளியில் அவளும் வந்து அருகே இருந்தாள்.
சட்டையை கழட்டிகொண்டே கேட்டார் துரை பட்டா.
“எவ்வளவு?
“நூத்தி அம்பது.”
ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு, வேட்டியை அவிழ்த்தார்.  கொடுத்தப் பணத்தைப் பாயுக்கடியில் வைத்து விட்டு, அவர் இயங்க ஏதுவாகப் படுத்தாள் வெத்தல பட்டி.  ஆசை வெறியோடு பதினைந்து நிமிடங்கள் இயங்கி,  சோர்ந்து பின்பு ஒருகளிந்துச் சாய்ந்தார் துரை பாட்டா. தேவை தீர்ந்திருக்குமோ?? இல்லையோ?? என்ற குழப்பத்துடனே அவள் அப்படியே படுத்திருந்தாள். துரை பாட்டா ,மூச்சு நிதானமடைந்ததும் சட்டையணிந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அடிக்கடி அவள் வீட்டுப் படுப்பனையில் துரை பாட்டாவைப் பார்க்க முடிந்தது.  அவளின் “அந்த” அணுகுமுறை துரை பாட்டாவிற்குப் பிடித்திருந்தது.  மற்ற எல்லா பெண்களும், இவரை ஏளனமாக பார்ப்பதுண்டு. இச்சையின் உச்சத்தில் அவரது கால்களை விகாரமாக பார்ப்பதுண்டு.  ஆனால் வெத்தல பட்டி அப்படி பார்த்ததில்லை.  ஏறி, ஆடி அடங்கும் வரை துரை பாட்டாவை ஒரு முழு மனிதனாகப் பார்த்தாள்.  அல்லது அவள் அப்படிப் பார்ப்பதாக இவருக்கு தோன்றியது. அது அவருக்கு பிடித்தும் இருந்தது.  அதனால் காமம் தலைக்கேறும் போதெல்லாம், வெத்தலபட்டியிடம் வந்து கொட்டி விடுவார்.  பதினைத்து, இருபது நிமிட ஆட்டத்தோடு, பைசா கொடுத்து விட்டு நகர்ந்தும் விடுவார்.  கடைசி வரை அவள் பெயரைக் கேட்டதில்லை.  அவளும் கூறிக்கொண்டதில்லை.  பின்னொருநாளில் அவள் ஊரை விட்டு எங்கோ சென்று விட்டதாக கூறிக்கொண்டனர்.  துரை பட்டாவும் தன் தாகம் தணிக்க மற்றொரு உடலைத் தேடிக்கொண்டார்.  இவ்வளவே வெத்தலைப்பட்டியை பற்றி, துரை பாட்டாவின் நெஞ்சகத்துள் பதிந்த நினைவுகள்.  அதன் பிறகு இப்போது தான் வெத்தலை பட்டியை மீண்டும் பார்க்கிறார்.
துரை பாட்டா சுய நினைவுக்கு வந்த போது அம்மாவும், மகளும் கடையருகே வந்திருந்தனர். பெயர் ஊர்ஜிதம் இல்லாத, அந்த “வெத்தலபட்டி”-யான வயதான பெண்தான் பேசினாள்.

“ரெண்டு சர்பத் தாரும்..” -என்றாள் துரை பாட்டாவிடம். 
கேசவன் பிள்ளை, ஏதோ அவசர பட்டவராய், “நான் பொறகு வாரேன் டேன்னு” -  கண்ணை காட்டி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்தார்.

எதையும் வெளிக்காட்டாமல் கண்ணாடிக் குவளைகளைக் கழுவி, சர்பத் போட ஆரம்பித்தார் துரை பட்டா.  இடையிடையே வெத்தலபட்டியையும் கவனித்துக் கொண்டார்.
ஆர்வ மிகுதியில், காமம் துளிர்க்கும் போதெல்லாம் ஏறி புணர்ந்த அந்த உடம்பா... இது.. அவதான்.. காதுக்கு கிழே இருந்த, கொஞ்சமாய் முடி வளர்ந்த அந்த மருவு மட்டும் அதனை ஊர்ஜிதப் படுத்தியது.. வயதான உடல் கிழடுத் தட்ட ஆரம்பித்திருந்தது.  ஏதேதோ நினைவுகள் துரை பாட்டாவை என்னென்னவோ செய்தன.

அவளுக்கு இவரைப் பற்றிய நினைவு இருப்பதாவே தெரிய வில்லை. சகஜமாக இருந்தாள்.

துரை பாட்டாவிற்கு இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திடாத ஒரு தவிப்பு இருந்தது.  பெயர் தெரிந்தாலாவது “அவளாமோ நீ?” – ன்னு ஆரம்பித்து பேச்சை தொடரலாம்.  அதுவும் தெரியாது.  ஏதாவது செய்து “நான் தான் உன்னை ஆசையோடுப் புணர்ந்தவன்” - என்பதைக் காண்பிக்க வேண்டுமென்று இருந்தது. ஒரு வித ஏகாந்தமான ஏக்கம் மனதிற்குள் அலைந்தோடியது.  ஒரு வேளை நம்ம காலை பார்த்தா அவளுக்கு ஞாபகம் வரலாம் – என்று பலவாறு எண்ணிக்கொண்டே, சர்பத்தைக் கலக்கிக் கொண்டிருந்தார்.

அந்த பெண் துரை பாட்டாவை கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை.
வியர்வை வடிந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு, பர்சைத் திறந்து சர்பதிற்கானக் காசினை எடுத்து வைத்துக் கொண்டாள் வெத்தல பட்டி.
சட்டென்று மகளிடம் திரும்பி,
“அந்த பஸ்சூ எப்ப திரும்பி வரும்னு சொன்னான்....... மக்கா..”
“முக்கா மணிக்கூர்ல வரும்னுனான்... இப்ப சரியாய் இருக்கும்..”- மகள் அழகாகப் பேசினாள்.  நடக்காமல் நிற்கும் போது அவள் கால் ஊனம் என்பது யாருக்கும் தெரியாமலிருந்தது.
“இப்ப வலி இருக்கா மக்கா..”
“பரவா இல்லமா.. கொஞ்சம் கேட்டிருக்கு..”
“ரெண்டு பழம் கூட சொல்லட்டா... ??
“ இல்லமா.. வேண்டாம்.. இப்பதான் வீட்டுக்கு போயிரோவோம்லா”
----அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
சர்பத்தை போட்டு முடித்து இரண்டு கிளாசையும் எடுத்து முன் வைத்து,
“இந்தாங்..குடிங்கோ” – என்றார் துரை பட்டா.

இருவரும் எடுத்துக் குடிக்கத் தொடங்கினர்.


“வெயில்ல யாம்மோ நிக்க.... உள்ள தள்ளி நின்னு குடிம்மோ”-ன்னு அந்த சின்னப் பெண்ணிடம் குசலம் கொண்டாடினார் துரை பாட்டா. அந்த பெண் அவரைப்பார்த்து லேசாக புன்னகைத்தாள்.  துரை பாட்டாவிற்கு அது பிடித்திருந்தது.
குடித்து முடித்ததும் வெத்தல பட்டி கேட்டாள்.
“எவ்வளவு ஆச்சு?”
“பத்து ரூபா..” என்றார் துரை பட்டா.
ருபாய் கொடுக்கும் போது அந்த பெண்ணின் கைகளைக் கொஞ்சம் உற்று நோக்கிக் கொண்டார்.  மனம் ஒருநிலையில் இல்லாது பலவாறு சிந்தித்தது. அவர்கள் கூட கொஞ்ச நேரம் அங்கேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது.

பணத்தைக் கொடுத்து விட்டு இருவரும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர்.  சிறிது நேரத்தில், வீட்டுக்குப் போன கேசவன் பிள்ளை மீண்டும் கடைக்கு வந்து சிரித்த படியே கேட்டார்.
“என்ன வேய்.. காமுகியையை வழியனுப்பியாச்சா? சர்பத்துக்கு பைசா வாங்குனையா?” 

“என்ன வேய் இப்படி சொல்லுகேரு?” -  என்றார் துரை பாட்டா.

“இல்ல துரை....வெத்தலபட்டின்னு சொன்னா உனக்கு ஒரு கிறக்கம்லா... அதான் கேட்டேன்...” பின்பு திரும்பி பஸ் ஸ்டாண்டை பார்த்துக்கொண்டே,  “அந்த பிள்ளை உன் மகளா கூட இருக்கலாம்டே”..- என்று காமெடிச் சிரிப்பு சிரித்தார் கேசவன் பிள்ளை.

கேவலமானக் கணிப்பாக இருந்தாலும் குடும்பம், சொந்தம் ஏதுமில்லாத துரை பாட்டாவிற்கு அது சுகமானதாக இருந்தது.

“ஊருக்கே காதலி தலா... உன் மகளா கூட இருக்கலாம்..” – சட்டென்று பதில் பேசினார் துரை பாட்டா.  ஆனால் முகத்தில் கோபம் இல்லை.

“அதில்லைடே... உன் மக தான்.  கால பார்த்தா தெரியலையா?”-.. சட்டென்று சொல்லி விட்டு, கேசவன் பிள்ளை உதட்டை கடித்தார். துரை பாட்டாவின் கோபத்தை நினைத்துக் கொஞ்சம் பயந்தார்.
பதிலேதும் பேசாமல் தூரத்தில் நின்ற அந்த பெண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் துரை பாட்டா.  அந்த நிமிடம் அவர் ஊனத்தை நினைத்துச் சந்தோஷப் பட்டது மாதிரி தெரிந்தது. வெத்தலபட்டி, அவள் மகள், துரைப்பாட்டா மூவரும் ஒரே வீட்டில், குடும்பமாய் வாழ்வதாக கற்பனை செய்து கொண்டார்.  சீ... பைத்தியக்கார அலைபாயும் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறது. தன் நினைவுகளை நினைத்து சலித்து கொண்டார்..  சிறிது நேரத்தில், நினைவுகளை உதறி தள்ளி, சட்டென்றுத் சுய நினைவு திரும்பி, அவர்கள் குடித்த சர்பத் கிளாசுகளோடு, அந்த நினைவுகளையும் கழுவ ஆரம்பித்தார்.

மேலத்தெரிசனம்கோப்பு திருப்பத்தில் அருமநல்லூர் பஸ் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.


வியாழன், 2 நவம்பர், 2017

மெழுகுவர்த்திகள்


இப்படி ஒரு பதிவை எழுதியே தீரவேண்டுமென்பது, பல நாட்களாக என்னுள் இருந்த உத்வேகம்.. ஆசிரியராக சில காலம் இருந்ததினாலேயோ அல்லது ஆசிரியர்களைக் கதாநாயகர்களாகப் பார்த்ததினாலோ என்னவோ, என் மனம் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.

ஆசிரியர் 1 - 

காக்கி நிக்கர் போடத் தொடங்கிய காலம்.  நிக்கரின் பின் புற ஓட்டையை “பெரிய அவமானமாக” நினைக்காத காலம். அவஸ்தையோடுப் பள்ளிக்குச் சென்ற மனம் மாறி, நண்பர்களை, விளையாட்டுகளை நினைத்துப் பள்ளிக்கு ஆர்வத்தோடு சென்ற காலம்.  அரசு நடுநிலைப்பள்ளி தெரிசனம்கோப்பு.  பள்ளி கொடிமரம் முதல், வேப்பமரம் வரை, உடைந்து கிடந்த செங்கலிருந்து, “ஒண்ணுக்கு” அடிக்கும் பாறைச் சுவர் வரை, ஒற்றை ஒவியமாய், மனதிற்குள் இன்னும் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.  முதல் காதல் ஏற்படுத்திய “டீச்சரின்” முகமும், முதல் தண்டனை ஏற்படுத்திய “முழங்கால் வடுவும்” நெஞ்சகத்துள் படபடக்கிறது.  “சின்னப் பையனாகவே இருந்திருக்கலாம்” என்ற ஏக்கம் வலுக்கிறது இதயமெங்கும் இப்போதும்......

அழகான பள்ளி.. இரண்டாம் வகுப்பென நினைக்கிறேன். முதல் முதலில் அவரைப் பார்க்கிறேன்.  ஒல்லியான நீண்டத் தேகம்.  வேஷ்டி சட்டையில் கொஞ்சம் அதிகமாக எண்ணை, பளப்பளக்கும் விரிந்த நெற்றி. கூர்மையான கண்கள்.  முத்து சார் அது.  ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பையனை மிரட்டிக் கொண்டிருந்தார்.  பயத்தோடு அவரைப் பார்க்கிறேன்.  நாளாக நாளாக அவருடைய வகுப்புகள், பேச்சுக்கள், என அவரின் மொத்த ரசிகனாகிப் போகிறேன்.  அவரின் செல்ல மணாவனாகிறேன். அப்பாவிற்கு அடுத்த படியாக அன்பையும், கண்டிப்பையும் ஓன்று சேர, சம விகிதத்தில் தந்தவர்.  முத்து சார் சொன்னால் “தாடகை மலையையும்” இழுத்து வர,  ஒரு “மாணவர் படை” எப்போதும் தயாராக இருக்கும். அழுத்தத்தோடு கதை சொல்வதிலும், உடல் மொழியோடு உறவாடுவதிலும் வல்லவர்.  “சிலரைப் பார்த்து சொல்லுவோம்லா.. அவர்ட என்னவோ இருக்குதுடேன்னு”.. அந்த “என்னவோ ஓன்று” அவரிடமும் இருந்தது.  மனதார ரசித்த முதல் ஆசிரியர். 

ஆசிரியர் 2

அதன் பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி, குறத்தியறை.  ஒன்பதாம் வகுப்பு. நிக்கர் பெண்டாகியிருந்தது.. மூக்குக்குக் கீழே புதிதாய் பூனை முடிகள். கழுத்தில் வெளித்தள்ளிய குரல்வளை தடிப்பு.  பையனா? இளைஞனா?- எனக் கணிக்க முடியாத ஒரு தோற்றம்.    “ஹெர்குலஸ் சைக்கிள்”, “லூனார் செருப்பு”, “கோனார் தமிழ் உரை”, “ரெனால்ட்ஸ் பெண்” என்பது போன்ற மறக்க முடியாத உன்னத தயாரிப்புகளினால் உலகை ரசித்தக் காலம்.  காதல் அதிகமாகவும், காமம் குறைவாகமும் ஆட்கொண்ட நேரம்.  கூட படிக்கும் பெண்ணிடம் பேனா வாங்கும் போது, எதிர்பாராமல் அவள் விரல் பட்ட, என் வலக்கையின் விரல்களை, தண்ணீர் படாமலும், சோப்பு போடாமலும், ஓரிரு வாரங்கள் “பாதுகாத்து” காதலில்(?) திளைத்தக் காலம்.

ஒரு ராஜா வேடத்திற்குரிய அனைத்துத் தகுதிகளோடும், முகப்பொலிவோடும் அவரைப் பார்க்கிறேன்.  வகுப்புள்  அவர் நுழைவது, ராஜாங்க தர்பாரில் “ராஜா” நுழைவது போலவே இருக்கும்.  அந்த மாதிரி ஒரு “சுருள் ஹேர் ஸ்டைல்”, “மீசை முறுக்கு”, “சபாரி டிரஸ்” என அனைத்திலும்.... தனித்துவம்.  முதுகு தண்டு வளையாத நிமிர்த்த நன் நடை.  கால் தடம் பதிந்த செந்நிற தோல் செருப்பு.  முகத்தின் ஒரு பக்கத்திலும் மட்டும் வழிந்தோடும் புன்னகை.  அம்மைஅப்பன் பிள்ளை சார். அவரின் கணித பாட விவரிப்பும், சாக்பீசைப் பிடித்து எழுதும் வேகமும், அழகான கையெழுத்தும், இடை இடையே தொடர்ச்சியான கேள்விகளும், சரியான பதிலுக்கு, அருமையானப் பாராட்டும், தவறானப் பதிலுக்கு, அவருக்கே உரிய பாணியிலான நக்கலான மறு படிகளும்.. அப்பப்பா..... சொல்லி மாளாது. அத்துணை இனிமையான நேரங்கள்.  “ஐம்பது நிமிட வகுப்பு, அதற்குள் முடிந்து விட்டதே” -என்று கவலைப்பட்ட காலங்களும் உண்டு.  அவ்வளவு நளினமும், நடிப்பும் கலந்த,  ஒரு விதமான ஏகாந்த கற்ப்பித்தல் முறை அவர் நடை முறை...  Hats off Sir.

ஆசிரியர் 3

தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோயில்.  இப்பெயரை எழுதி முடித்ததும் ஒரு வித புத்துணர்வை என்னுள்ளே உணர முடிகிறது.  வானுயர வளர்ந்த மரங்களும், கலர் கலரான சுடிதார்களும், சேலைகளும், கற்கட்டிடங்களும், ஓட்டுபுரை கேண்டீனும், இதுவரை வகைப்படுத்தப் படாத ஒரு இனிமையான மணம் வீசும் நூலகமும், செந்நிற விளையாட்டு திடலும், அடுத்தடுத்து நினைவிற்கு வந்து கொண்டே இருக்கின்றன. 

வாழ்வியலில் எது சரி.. எது தவறு என ஓரளவிற்கு கணிக்க தொடங்கிய காலம்.  சக மனிதர்களோடு ஒப்பிட்டு பார்த்து, நம் நிலை உயர வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்ட காலம்.  "வறுமை என்பது இழிவல்ல.. வாழும் நிலையே அடிப்படை" என்பதை அரைகுறையாய் புரிந்து கொண்ட நேரம்... 

வழுக்கை தலையோடும், நரைத்த தாடியோடும், வற்றாத புன்னைகையோடும் அந்த முகத்தை பார்க்கிறேன்.  அவரின் முதல் வகுப்பு அது.. ஒவ்வொருவராய் சுய அறிமுகப்படுத்த சொல்லுகிறார்.  என் முறையில் நான்,,

“சிவா, அரசு மேல்நிலை பள்ளி, குறத்தியறை, from தெரிசனம்கோப்புஎன்கிறேன்.

“தெரிசனம்கோப்பா????”- என்று ஆச்சர்யம் கலந்த மறுபதில் அவரிடமிருந்து வருகிறது. ஒரு வேளை இடம் தெரியவில்லையோ என்று நான் மேலும் விளக்குகிறேன்.

“ஆமா சார்.. பூதப்பாண்டி தெரியுமா?? அதற்கு அடுத்ததாக.. ஒரு மூணு கிலோ மீட்டர் வரும்” -  என்கிறேன்.

“ஓ.. அப்படியா.. தெரியலையே” – என்று கூறி நமட்டு சிரிப்பு சிரித்தார்.
பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் எங்களூரை சார்ந்தவர் என்று.

பின்னொருநாளில்  அவரே சொன்னார்.. “நீ.. எனக்கே.. தெரிசனம்கோப்பிற்கு வழி சொன்னவன்லா..”  கொஞ்சம் வெக்கமாக இருந்தது.

அவர் உமையொருபாகன் சார்... Listen first, then respond well என்பார்களே. அதற்கு சரியான எடுத்துக் காட்டாய் திகழ்பவர்.  ஐந்தாறு நிமிடங்கள் அவரோடுப் பேசிக்கொண்டிருந்தால், ஆண்களுக்கும், அவரோடு ஒரு மரியாதையை நிமித்தமான “காதல்” வந்து விடும்.   பேச்சு மொழியின் வீரியத்தை எனக்கறிய செய்தவர்.  அழகழாய் பாடங்களையும், அற்புதமாய் கதைகளையும் விவரிப்பவர்.  அழகான ஆங்கில உச்சரிப்புக்கு சொந்தக்காரர்.. ஆசிரியராக மட்டும் செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்தியில், மாணவர்கள் மனநிலையிலும் கருத்துக்களைத் தருபவர்.  சாதி, மதங்களைக் கடந்தும், “சகோதரத்துவம்” பாராட்டுபவர். இளமையாய் சிந்திப்பவர் அல்லது இளைஞர்களைப் போல் சிந்திப்பவர்.  இந்து இறையாண்மை மிக்கவர்.  பல வருடம் கழிந்த பின்பும் மாணவர்களின் பெயர்களை மறக்காது அழைக்கும் ஞாபகம் மிக்கவர். அவர் வகுப்பில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதலாம். 

மேல் கூறிப்பிட்டவர்கள், எனது எண்ணம் கவர்ந்த பல ஆசிரியர்களில், ஆகச் சிறந்தவர்களாக என் மனதிற்குப் பட்டவர்கள்.  அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆராயாமல், வகுப்பு நேரத்தில் என்னைக் கவர்ந்த நினைவுகளின் தொகுப்பே இது..

இறுதியாகச் சொல்ல விரும்புவது இதைத்தான்...

“இளைஞர்களே... ஆசிரியர்கள், சினிமா நடிகர்களை விட உயர்ந்தவர்கள், போற்றுதலுக்குரியவர்கள்”, முடிந்தால், மிகவும் பிடித்த ஒரு ஆசிரியருக்கு “ஒரு கட் அவுட்” வைத்து பாலாபிஷேகம் பண்ணுங்கள். அல்லது  வருடங்கள் கடந்திருந்தாலும் அவரைக் கண்டு பிடித்து, கட்டியணைத்து, கையாவது குலுக்குங்கள்.. உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும்”


----தெரிசை சிவா.

சனி, 20 ஆகஸ்ட், 2016

கும்பாட்டக்காரி

அந்த ஊருக்குச் சென்ற நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி. ஒரு மன நிறைவு. சொல்லில் புரிய வைக்க முடியாத ஒரு புளகாங்கித மன நிலை. மகிழ்ச்சி என்பதற்கும், சந்தோசம் என்பதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டதாய் ஒரு பேரானந்தம்.  அடுக்கு மாடிக் குடியிருப்பு, ஜன நெருக்கடி, வாகனப் புகை வீச்சம், மருந்துக்குக் கூட சிரிக்க மறந்த அல்லது சிரிக்க முயலாத மனித முகங்கள், என ஒருமாதிரியான மரத்துப் போன வாழ்க்கையை அனுபவித்த எனக்கு, அந்த கிராமத்து வாழ்க்கை ஒரு அசாதாரண சந்தோசத்தைத் தந்துக் கொண்டிருந்தது. 
 
என் அப்பாவின் சொந்த ஊர் இதுதானாம்.  அவர் அந்த காலத்து பி.ஏ.  இருபத்திரெண்டாம் வயதில் டில்லியில் அரசாங்க வேலை கிடைக்க, அவரின் பணி நிமித்தம் காரணமாக, நான் டில்லியிலேயே பிறந்து வளர வேண்டியச் சூழ்நிலை. சிறிய வயதிலேயே அம்மாவை இழந்து, அப்பாவாலேயே வளர்க்கப்பட்டேன். எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஒரு வாழ்க்கை. 

காலச் சக்கரம் சுழல, எனக்கும் அரசு வேலைக் கிடைத்து, திருமணம் முடிந்து, வாழ்க்கையின் முற்பகுதி, முழுதும் அயலூரிலேயே கழிந்தாகி விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் அன்பிற்கும், ஆசைக்கும் குறைவில்லாதிருக்க, அதற்குச் சாட்சியான “குழந்தைப்பேறு” மட்டும் இல்லாமலேயே இருந்தது. நமக்குப் பிடித்த உணவை அருகிலிருந்து மற்றவர்கள் சாப்பிடும் போது ஒரு “உணர்வு” வருமே... அதே உணர்வின் ஆயிரம் மடங்கு,  எங்கள் முன்னால் பெற்றோர்கள், அவர்கள் குழந்தையைக் கொஞ்சும் போதும். 

சொல்லிமாளாத நரக வேதனை. செய்ய வேண்டிய எல்லா மருத்துவ சோதனைகள் செய்தும் பலனில்லை.  இருந்தும் சோகத்தை மறந்து, நாங்கள் மகிழ்ந்த நாட்களுக்கும் குறைவில்லை. எனக்கும் என் மனைவிக்கும், பணவசதிக்குக் குறைவில்லாத போதும், புதியவர்களைச் சந்திக்கும் போது எதிர்கொள்ளவேண்டியச் “சராசரி கேள்விகளை” நினைத்து “அசுர  பயம்”. 

“எத்தர குழந்தைக உங்களுக்கு?” –என்ற கேள்விக் கேட்கப்படும் போதெல்லாம்.... சுக்கு நூறாய் உடைந்திருப்பேன்.. மனைவியோ சில்லுச் சில்லாய் சிதறியிருப்பாள்.

அப்பா அடிக்கடி இந்த கிராமத்திற்கு வருவதுண்டு. குடும்பத்தாரின் திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என, என் இளமைப்பருவத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். எல்லா முறையும் வருவதற்குப் பிடிக்காமலேயே வந்திருக்கிறேன்.  இங்குள்ள சொத்துப் பத்துகளை நிர்வகிக்கும் வேலைக்காரன் வெள்ளையன் மட்டுமே பேசிப்பழக்கம்.  ஆறு, குளம், வாய்க்கால், வரப்பு, கோவில், தேரோட்டம் என்பவை நாலைந்து நாளில் முடிய,  மீண்டும் டெல்லி நகர வாழ்க்கை.

வீட்டுக்கு ஒரே பிள்ளையான என்னிடம், இறக்கும் தருவாயில் என் அப்பா கேட்டு கொண்டது இந்த ஒன்றை மட்டும் தான்.  
“கணேசா... நான் கடைசி காலத்துல நம்ம ஊரோட ஒதுங்கனும்னு நினைச்சேன்.. நடக்கல.. நீ அத செய்யணும் மக்கா”- என்று சொல்லிய மூன்றாவது நாளில் இறந்து போய் விட்டார்.  மனைவியும் நானும் ஒரு மட்டுப்பட்ட மகிழ்ச்சியுடன், வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதாயிற்று. ஒரு பௌர்ணமி நாளில் எதிர்பாராத விதமாக மனைவியும் இறக்க.. நாப்பத்தைந்தாவது வயதில், தாங்க முடியாத பாரத்துடனான “தனிமை” மட்டுமே என்னை ஆக்ரமித்துக் கொண்டது.  

“இளைமையில் வறுமை” எவ்வளவு கொடுமையோ.. அதை விட கொடுமை “முதுமையில் தனிமை”.  தனிமையின் வெறுமையில் எனக்கும் என் அப்பாவைப் போல் சொந்த ஊரின் ஞாபகம்.  ஞாபகம் வந்த கையோடு வீட்டு வேலையை ஆரம்பித்து, ஒரு நல்ல நாளில் குடியேறி, வருகின்ற வெள்ளிக் கிழமை வந்தால் நாலு மாதம் முடிந்து விடும்.  ஆரம்பத்தில் ஒரு வெறுமையோடு இங்கு வந்தாலும் இப்போது இந்த கிராமத்தின், இந்த கிராமத்து மக்களின் “ஒட்டு மொத்த ரசிகன்” ஆகியிருந்தேன்.

ஆரம்ப நாட்களில் இந்த கிராமத்து தெருக்களில் இறங்கி நடக்கும் போது, எதிர்வரும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் தூவிக்கொண்டே இருக்கும் அந்த “குசலம்” எனக்கு பிடித்திருந்தது.

“ஊருக்கு புதுசா.. யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க..”

“பரமசிவ பாட்டாக்கு மகன் வந்தாச்சுன்னு.. வெள்ளையன் சொன்னான்...  அதான் பாக்கலாம்னு வந்தோம்..”

“நம்ம டெல்லி பரமசிவத்துக்கு மகனா? சரியா போச்சு... நீ எனக்கு மருமவன் முறைடே...”

“மகளுக்கு கல்யாணம்.... கண்டிப்பா வந்திரணும்..உங்களுக்கு யாரும் இல்லைங்கிற நினைப்பு வேண்டாம்.. நாங்க இருக்கோம்..”

“மாமோய்... வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்க... கைவசம் ஆள் இருக்கு..”

“வெளியயே நின்னா எப்படி... உள்ள வந்து ஒரு காப்பி சாப்பிடுங்க... அப்பா வந்தா இங்க சாப்பிடாம போகவே மாட்டங்க...”

6000 ரூபா... முன்னாடி பரமசிவம் பாட்டா வந்த போது கைமாத்தா வாங்கியிருந்தேன்.. அவரு போயிட்டாலும்.. அத உங்கள்ட தரது தானே முறை.. அதான் கொண்டு வந்திருக்கேன்..”

“ஏழாம் கொடை மலர் அலங்கார உபயம் எல்லா வருசமும் அப்பாதான்..பண்ணுவாங்க.. இந்த வருஷம் நீங்க பண்ணனும்..”

சாம்பலும், புளியும் போட்டு தேய்த்த “செப்பு பாத்திரமாய்” ஜொலித்தார்கள் ஒவ்வொரு மனிதர்களும்.  கள்ளம் கபடமற்ற “வெள்ளை நிற” பேச்சுக்கள்.  அன்பான உபசரணைகள்.  ஆசையை தூண்டும் சம்பாஷனைகள்.  சுற்றம் சூழ சொந்த பந்தங்களுடன் வாழும், அந்த வாழ்வின் “சுவை” எனக்கும் நிரம்பப் பிடித்திருந்தது. 

ஆத்தங்கரைக் குளியல், அரச மரத்தடிப் பிள்ளையார், திண்ணைப் பேச்சுக்கள், திகட்டாதச் சிரிப்புகள், என வாழ்க்கை ஒருவாறு வசப்பட்டு விட்டது.  என் வீடானது “பெண்கள்” இல்லாத வீடாக இருப்பதால் வெட்டிப் பேச்சு பேச, ரெம்ப வசதியாக இருந்தது.  சில நாட்களில் அதிகாலைப் பொழுது வரை, பேச்சுக்கள் நீளும். 

பேசி முடித்து படுக்கையில் விழுந்ததும், மீண்டும் தனிமையின் தவிப்பில் மனைவியின் நினைப்பு வரும்.  அவளும் இந்த வீட்டில் இருந்திருந்தால்...... இரண்டு மூன்று பிள்ளைகளோடும், மனைவியோடும், அப்பாவோடும் இந்த வீட்டில் வாழ்ந்திருந்தால், எப்படி இருக்கும்?... என்ற நினைப்பு, ஒரு தாங்க முடியாத “ஏக்கத்தை” ஏற்படுத்தும்.  சட்டென்று  எழுந்து இரண்டு டம்ளர் விஸ்கியைக் குடித்து விட்டுப் படுத்தால் நிம்மதியான “போதைத் தூக்கம்” வாய்க்கும். 

மறுநாள் காலையில் வெள்ளையனின் “சமையல் வாசம்” தூக்கத்தை கலைக்கும்.  எழுந்து,  குளித்து முடித்து, வாய்க்கால் வரப்புகளைச் சுற்றி, தெரியாத விவசாய நுணுக்கங்களை வெள்ளையன் உதவியோடு மேற்பார்வைச் செய்து, மீண்டும் வீட்டுக்கு வந்துச் சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு, விழித்தெழும் போது “வெட்டிப் பேச்சுக் கோஷ்டிகள்” திண்ணையில்  என் வருகைக்காகக் காத்திருக்கும்.  நாலைந்து மாத கிராமத்து வாழ்க்கையானது, இவ்வாறே போய் கொண்டிருந்தது.

ஒரு நாள் காலைப் பொழுதின் அயர்ந்த தூக்கத்தில்தான் அந்தப் பேச்சுக்குரல்கள் கேட்டது.  இடையிடையே  ஒரு பெண்ணின் குரலும்.

“என்ன வெள்ளையா...  வெள்ளம் வத்தி போச்சா.. உனக்கு.., இப்படி ஆயிட்ட...”

“ஒரு எரப்பு எறச்சு பாக்கியா... வெள்ளம் இருக்கா..வத்திட்டானு.. அப்ப தெரியும் உனக்கு..”

“எரச்சிட்டா போச்சு.. பல ஊரு தண்ணிய பார்த்தாச்சு... உனக்குள்ளத பார்க்க குறை வப்பானேன்..”

சில பேரின் சிரிப்பொலிகள்.. மீண்டும் வெள்ளையனின் பேச்சுக்குரல்.

“பத்து நாள்ல முடிஞ்சிருமா.. சம்முகம்.. சும்ம நாள இழுத்துடக்கூடாது....”

“அது முடிஞ்சுரும்.. ரெண்டு கையாளு மட்டும் கூட விடணும்.. மண்ணெல்லாம்  வெளிய செமக்கணும்லா..”

“ரெண்டோ.. மூணோ.. ஆளை விட்டுக்கோ..... முன்னாடி.. வீட்டுல ஆளுக கிடையாது... உன் இஷ்டத்துக்கு வேலை பார்த்த... இப்ப பண்ணையாரு வந்தாச்சு தெரியும்லா...”

படுக்கையில் இருந்து எழுந்து, முகம் கழுவி வெளியே வந்தேன்.  வெள்ளையன் ஓடி வந்தான்.

“காம்பௌண்டு செவரு குறை கிடக்குல்லா... அத முடிக்கிறதுக்கு ஆள் வந்துருக்கு...”

வெளியே வந்து பார்த்த போது.. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். நல்ல அசலான கிராமத்து மனிதர்கள். அவர்களின் கையில் கட்டிட வேலைக்குத் தேவையான “தட்டு முட்டு சாமான்கள்”.  எண்ணை வழியத் தலைச் சீவிய ஒருவனை சுட்டிக் காட்டி, வெள்ளையன் கூறினான்.  
“இது நம்ம சம்முகம்.. கொத்தனார்.. நம்ம வீட்டு வேலையெல்லாம் பார்த்தவன்.. இவன்தான்”

சண்முகம் முன்னாடி  வந்து கும்பிட்டு விட்டு, சிநேக சிரிப்பு சிரித்தான்.  எல்லாரும் கும்பிட்டார்கள்.

“மொத்த வேலையும் முடிய எத்ர நாள் ஆகும்,,, சம்முகம்...”

“பத்து நாள்ல முடிச்சிரலாம்...பண்ணையார...”

“சரி ஆரம்பிங்க”.. என்றுச் சொல்லி விட்டு, நியூஸ் பேப்பர்  படித்து, பின்னர் குளித்து, சாப்பிட்டு முடித்து வெளிய வரும் போது, கட்டிட வேலை, வெகு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது. சண்முகம் கல்லெடுத்து அடுக்க, அந்தப் பெண்ணும், மற்ற ஒரு ஆளும் சேர்ந்து சிமெண்ட், மண், தண்ணீர்  கலவையைக் கிளறிக் கொண்டிருந்தனர். கடினமானக் கட்டிட வேலைக்கு நடுவிலும்.. இடைவிடாத சந்தோஷ உரையாடல்கள். அப்பெண்ணின் இரட்டை அர்த்த வசனங்கள். சிரிப்புகள்.

“சம்முகண்ணே... மத்தவன் மம்புட்டி போட, சரி வர மாட்டான்... உனக்கு இன்னைக்கு சாந்து கலவை கிடைச்ச மாரிதான்...”

சண்முகம் வாயில் வெற்றிலைச் சிவப்போடு உருமினார்..

முருகேசா.. வள்ளியம்மை... சொல்லுகது.. சரிதானடே.. நல்ல குத்தி கிளறி கலக்குடே... கல்லு கெட்டுக்குத்தான்... கொஞ்சம் மண்ணு கூடினாலும் பிரச்சனை இல்லை...

முருகேசன் முழு வலிமையையும் சேர்த்து, சாந்துக் கலவையை கலக்கினான். வள்ளியம்மை, சிரிப்போடு சொன்னாள். 

“ மாப்பிள்ளைக்கு.. இப்ப தான் வேகம் கூடுகு....”

வாசலில் நின்று கொண்டு, கதவு இடைவெளியில் அந்தப் பெண்ணைக் கவனித்தேன்.  நாப்பது வயதிருக்கலாம்.  நல்ல கருப்பான “நாட்டு உடம்பு”.  கருப்புன்னா கருப்பு இல்லை.  கருங்கல்ல நல்ல கழுவி, எண்ணைத் தேய்ச்சு விட்டா, ஒரு மினு மினுப்புக் கருப்பு வருமே, அந்த கருப்பு. முகம் முழுதும் சிரிப்பு.  கூடவே “முக பௌடரில்” நனைந்த வியர்வைத் துளிகள்.  நெற்றி நடுவே கால் இஞ்சு விட்டத்தில் சிவப்புப் பொட்டு.  வெற்றிலை ஒதுக்கிய மோவாய், வெற்றிலைக் கறைப் படிந்த பற்கள்.. “கல, கல” -வென இடைவிடாதப் பேச்சு.  இடையிடையே இரட்டை அர்த்த வசனங்கள்.  “பாக்கணும்னா... பாருங்கல” -என கவர்ச்சி அவயங்களைப் பட்டவர்த்ததனமாகக் காட்டும் “சேலைக் கட்டு”.  அக்குள் வியர்வையில் நனைந்த செம்பர் மேலாடை.  கழுத்தில் கருப்பு நிறத்தில் ஒரு பழுப்புக் கயிறு.  கால் தடம், செருப்பின் மேல் பதிந்த “லூனார்ஸ் செருப்பு”, காலை அலங்கரித்துக் கொண்டிருக்க, "நான் நடத்தையில் கொஞ்சம் அப்படியாக்கும்”- என்பதைச்,  சொல்லாமல் சொல்லும் உடல் மொழிகள்.  

நான் வெளியே வந்து நின்று பார்ப்பதை, வெள்ளையன் கவனித்து, அனைவரையும் மிரட்டினான்.

“ஏ...வள்ளியம்மை... அங்க என்ன பல்லைக் காணிச்சிட்டு இருக்க.., ஏல.....முருகேசா.. வெட்டி விடு டே... சாந்த.. வேலை நடக்கட்டும்பா..

புதிதாகப் பேட்டரிப் போட்ட விளையாட்டு பொம்மை போல் அனைவரும் மும்முரமாக இயங்கினர். வேலையை மேலோட்டம் பார்ப்பதுபோல் அனைவரையும் அருகில் சென்று கவனிக்கலானேன். 

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, வள்ளியம்மை வெள்ளையன் அருகில் சென்று.. கிசு கிசுத்தாள்.

“வெள்ளையா... பல்ல காணிக்க கூடாதுன்னா.... வேற எதாவது காணிக்கட்டா”

கொத்தனார் சண்முகத்திற்குச் சிரிப்பு தாங்கவில்லை. முருகேசன் குனிந்து சிரித்துக் கொண்டே மண்ணைக் கிளரிக்கொண்டிருந்தான்.  வெள்ளையன் நான்  நிற்பதால் வெக்கத்தில் நெளிந்தான்.  எனக்கும் சிரிப்பு வெளிப்பட, வீட்டிற்குள் சென்று சிரித்தேன்.

வெளியே கொஞ்சம் சத்தமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 
அன்று இரவில் வள்ளியம்மையைப் பற்றி வெள்ளையனிடம் கேட்டேன். 

“வெள்ளையா.. யாரு அந்த பொம்பளை... ரெம்ப கேவலமா... என்னா பேச்சுப்...பேசுகா”

”யாரு வள்ளியம்மையா....! கேவலம்லா.... இல்ல மொதலாளி... நல்லவ தான்.... ஒரு காலத்துல “கும்பாட்ட காரியா” –யிருந்து, இங்கனோடி உள்ள அவ்வளவு ஆம்பிளைகளையும் ஆட்டி வச்சவ... ஆடாத ஊரு கிடையாது... அவ்வளவு பிரபலம்.. வள்ளியம்மை ஆடுகான்னு சொன்னாத்தான், கோவில் திருவிழாவிற்கே பெருமைன்னு இருந்த காலம்...! கருப்பா இருந்தாலும் அப்டி இருப்பா.. சும்மா.. சித்தூரு கோவில் குதிரை மாறி......”

வெள்ளையன் மூச்சு வாங்கிக்கொண்டான்.  பேச்சின் சுவாரஸ்யம் கூடியதால் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். 

“அம்சமா இருந்தப்போ ஆட விட்டு பார்த்தானுகோ...  கொஞ்ச நாளைக்கி அப்புறம், “அனுபவிச்சு” பார்த்தானுகோ... எல்லாம் முடிஞ்சு வயசானதுக்கப்புறம்.. எச்சிலை துப்புர மாறி துப்பிடானுகோ..’

கொஞ்சம் வருத்தமும், கொஞ்சம் வக்கிரமும், கொஞ்சம் அனுதாபமும் வெளிப்பட க் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சொந்த பந்தம் ஒண்ணும் இல்லையா... வெள்ளையா?”

“அம்மக்காரி சின்ன வயசுலேயே... போய் சேர்ந்துட்டா.. அப்பன்காரன்தான் இவள ஆட்டத்துல இறக்குனதே.. அஞ்சு வருஷம் முன்னாடி அவனும் செத்துட்டான்.  இது இப்ப கிடைக்குற வேலை செய்து காலம் கழிச்சிட்டு இருக்கு..” 

உண்மையான வருத்தத்தோடு வெள்ளையன் பேசினான். பின்னர் சிறிதாக சிரித்துக்கொண்டே கூறினான்.

“இப்பவும் பாட்டுன்னா செத்துருவா... பெரிய இளைய ராஜா ரசிகை.. நாகர்கோயில் பஸ் ஸ்டாண்டுல, பஸ்ஸ விட்டிட்டு “பாட்டு” கேட்டுட்டு நின்ன கட்சியாங்கும்... “பாட்டு கிறுக்கு” கூடுதல்.. என்னா.... கொஞ்சம் ஆம்பிளைகளே... வெக்கப் படுற மாதிரி “வாய்” மட்டும் பேசுவா..... அப்படி இல்லாட்டன்னாலும்... மொத்த பயக்களும் சேர்ந்து.....அவள பிச்சு தின்னு போடுவானுகள்ளா...,”

மிகத் தத்ரூபமாக அவள் வாழ்க்கை நிலைமையை வார்த்தையில் விளக்கினான் வெள்ளையன்.   

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு சராசரி ஆணுக்குள் தோன்றும் முதல் உணர்ச்சி “காமமாகவே” இருக்கிறது..  பத்து நிமிடம் அவளிடம் பழகியப் பின்பு, அவளின் நம்பிக்கையை பெற்று, அந்த பழக்கத்தை நீடிக்க முயற்சி செய்கிறது ஆணின் மனம். 

ஒரு பெண்ணின் சுகத் துக்கங்களை அறிந்த பின்பு, துக்கத்தில் அழுகின்ற பெண்களுக்கு ஆறுதல் சொல்ல, எந்த ஆணின் மனமும் தயங்குவதில்லை. ஆனால் துக்கத்தை வெளியில் காட்டாமல், அதை சிரிப்போடு ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை, எப்படி எதிர்க்கொள்வது என்றக் குழப்பம், எல்லா ஆண்களுக்கும் உள்ளதுதான். அதே மன நிலைமையில் தான் நானும் இருந்தேன்.

அன்றைய இரவு முழுவதும், புழுதித் தண்ணீரில் சிக்காத விலாங்கு மீனை போல், என் மனவோட்டத்திற்கு அகப்படாத “விசித்திர”மாகவே இருந்தாள் வள்ளியம்மை.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எல்லோரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எளியவர்களின் உழைப்பிலும், சிரிப்பிலும், வியர்வையிலும் காம்பவுண்ட் சுவர் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.  வெள்ளையன் அப்போது இல்லாததால், நானே “மேற்பார்வை” செய்து கொண்டிருந்தேன்.  “மேற்பார்வை” என்றால்  என்னுடையப் பாணியில் “நாற்காலியை” போட்டு உட்கார்ந்து கொண்டு, “பராக்கு, பராக்குப்” – பார்ப்பதாகும். 

சண்முகமும், முருகேசனும் வேலையில் கண்ணாய் இருக்க, அதிகப்படியான முக பவுடர், தலையில் “கனகாம்பர பூ” என மின்னினாள் வள்ளியம்மை.  அவளைப் பற்றி கேள்வி பட்ட விசயங்கள், அவள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. வேலையினூடே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.  எனக்கு தெரிந்தப் பாட்டுதான்.  எப்போதோ செல்போனில் அந்த பாட்டை பதிந்து வைத்ததாய் ஒரு ஞாபகம்.  செல்போனை எடுத்து பாட்டைத் தேடினேன். மிதமான ஒலியில் பாட்டை ஒலிக்க வைத்தேன். 

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ரசாத்திக்காக...”- என உச்ச ஸ்தாதியில் இளைய ராஜாவின் இசை, காற்றில் மிதந்து காதை நனைத்தது.  சண்முகமும், முருகேசனும் இசையில் லயிக்க, நூறு வோல்ட் மின்சாரம் முகத்தில் எரிய, பாட்டை ரசித்தாள் வள்ளியம்மை. சில நிமிடங்களில் பாட்டு முடிய வள்ளியம்மையிடமிருந்து அந்த அதிகார குரல்.

“பண்ணையாரே.. அந்த பாட்டை திருப்பி போடுங்க...”.

அந்த “அதிகார வேண்டுதல்” எனக்குப் பிடித்திருந்தது. பாட்டை மீண்டும் இசைக்க வைத்தேன். வெள்ளையன், எல்லோருக்கும் ஐயர் கடையிலிருந்து “டீ” வாங்கி வந்திருந்தான். 

“டீ” யைக் குடித்துக் கொண்டே வள்ளியம்மை பேசினாள்.

“சம்முகண்ணே...இந்த பாட்டை எப்படிக் கேக்கணும் தெரியுமா?”

“எப்படி..?”

“வேலை முடிஞ்சு.. நம்ம பழையாத்துல குளிச்சிட்டு..ராத்திரி ஆகாரதுக்கப்புறம்.. அம்மம்மாண்ணு.. உக்காந்து கேக்கணும்..”

“அட... அட... நீ எங்கயோ போய்ட வள்ளியம்மை..” -என்றான் வெள்ளையன். 

எனக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்பாக வந்தது.  ஆனால் வள்ளியம்மை அதை பற்றி கவலை பட்டதாக தெரிய வில்லை. அவள் தொடர்ந்து பேசினாள்.

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ராசாதிக்காக...”-னு அந்த பொம்பள பாடி முடிஞ்சதும், ஒரு புல்லாங்குழல் இசை வருமே......அது அப்படியே நம்மள எங்கயோ இழுத்துட்டுப்  போகும். அதுல லயிச்சு இருக்கும் போதே... “எங்க, எங்க, கொஞ்சம் நான் பாக்குறேன்”-னு பாடுவாரே.. இளைய ராசா... அப்படியே வார்த்தைகள்.... காது வழியா போய், நெஞ்சுகுள்ள  இறங்கும்... கேட்டயாண்ணே...” 

வெள்ளையன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“பண்ணையாரே... நான் நேத்தே சொன்னேன்லா “பாட்டு கிறுக்குன்னு” அது.. இதுதான்....”- வள்ளியம்மையும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தாள்.

“அதுக்கடுத்து வரும் வயலின் ஓசை....கொன்னே.....,போடும் என்னையே.  ஒவ்வொரு வார்த்தையும் இசையோடு சேந்து முதுகு தண்டில் இறங்கும் பண்ணையாரே... ரெம்ப நல்ல பாட்டு பண்ணையாரே”- மிக ரசனையோடுப் பேசினாள் வள்ளியம்மை.

“இவ்வளவு தீவிரமாகப் பாட்டை ரசிக்கும் ஒரு பெண்ணை முதல் முதலாகப் பார்க்கிறேன்”- என்றேன் நான்.

“இப்படி ஒரு பாட்டுக் கிறுக்கைனு  சொல்லுங்க முதலாளி...”- என வெள்ளையன்  கூற எல்லோரும் சிரித்தார்கள்.

“வாழ்க்கை ரெம்ப கஷ்டமாகும் போது...இந்த மாதிரி பாட்டை கடைசியா ஒருவாட்டி கேக்கணும்....... அந்தால... “பால்டால்” அடிச்சுச் சாகணும்னு”--- என்று சொல்லி வள்ளியம்மையும் சிரித்தாள்.

அன்றிரவு வள்ளியம்மை சொன்ன மாதிரிப் பாட்டை கேட்டுப் பார்த்தேன். தேன் கலந்த, கரும்புச்சாறாய் இனித்ததுப் பாட்டு. விஸ்கியின் துணையின்றி உறக்கமும் வாய்த்தது.

பின் வந்த நாட்களில் எல்லாரும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்கள்.  மனசு மிகவும் இலகுவாகி இருந்தது எனக்கு.  குறிப்பாக வள்ளியம்மையின் வெளிப்படையானப் பேச்சு.  

இத்தனை சோகங்களுக்கு நடுவே, அவளால் எப்படி... இப்படி இருக்க முடிகிறது என யோசித்தேன்.  விடைக் கிடைக்க வில்லை.  ஆனால் என்னுடையத் “தனிமை சோகங்களுக்காக” இப்போது நான் வருந்துவதே இல்லை.  காற்றில் பறக்கும் வாத்து இறகை போல மனசு இலேசாகி இருந்தது. 

சில நாட்களுக்குள் கரையான் கட்டும் கூட்டை போல், காம்பௌண்டு சுவர் வளர்ந்து நின்றது.  கூடவே எங்களுக்குள் உண்டானப் “பேச்சு நட்பும்”. 

அன்று அப்படிதான் வெள்ளையன், வள்ளியம்மையிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான்.

“அதான் கிழவியாயாச்சுல்லா.... இன்னும் என்ன அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு?”

“கிழவியோ... குமரியோ... வச்ச கண்ணு வாங்காம பாக்குற பயக்கதான... நீங்க எல்லோரும்.. ஒவ்வொரு சனிக்கிழமையும், திட்டுவிளை மஸ்தான் ஷாயிப்புக்கு, இப்பவும் நான் குமரிதான்... அதுவும் இல்லாம.. கண்ணாடில என் முகத்தை இப்படி பாக்குறதுதான்...., எனக்கும் புடிக்கும்.”
-      -வெடித்துச் சிதறினாள் வள்ளியம்மை.

“ஏன்  வள்ளியம்மை... இப்படி பச்சையா பேசுறதுல உனக்கு குறைச்சல் ஒண்ணும் இல்லையா?” – சற்றுத் தயங்கித்தான் நானும் கேட்டேன்.

“எனக்கென்ன குறைச்சல் பண்ணையாரே... இந்த ஆம்பிள்ளைக மேலுள்ள நம்பிக்கையும் போச்சு.. பயமும் போச்சு.. இந்த ஏரியாவுல பாதி பேருக்கு மேல்... ஆசை வெறியோட... குஞ்....... தூக்கிட்டு என் காலடில விழுந்து கிடந்தவனுகதான்...  அத்தனை பேராலையும்.. உடம்புல காயம் பட்டாலும்.... மரத்து போனது என்னவோ மனசுதான் பண்ணையாரே...”- என்று சொல்லிச் சிரிதாகச் சிரித்தாள். 

“இவனுகள... பார்க்கும்போதெல்லாம்...எனக்கு  இவனுகளோட “மத்த உணர்ச்சி மூஞ்சி” ஞாபகம் வந்து,  நல்லா சிரிப்பா வருகு... நான் என்ன செய்ய?” – என்று சொல்லி, “காம உணர்வு” வேகத்தில், ஆண்களின் முகம் எப்படி இருக்கும் என்பதை உடல் மொழியில் நடித்துக் காட்டினாள்.  அவளால் சிரிப்பை அடக்க முடிய வில்லை.

எல்லோரும் சிரித்து உருண்டார்கள். நானும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிரித்தேன். 

சில நாட்களில், காம்பௌண்டு சுவரின் பணி ஒருவாறாக முடிந்திருந்தது. கட்டுமான பொருட்களைக் கையோடு எடுத்து சண்முகமும், முருகேசனும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.   

சம்பளப் பாக்கியை கணக்குப் பார்த்து வெள்ளையன் கொடுத்தான். வள்ளியம்மை மட்டும், தேங்காய் சவரியைக் கொண்டு, சாந்து சட்டியைக் கழுவிக்கொண்டிருந்தாள்.

“வள்ளியம்மை..நாங்க போறோம்..எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு நீ போ... நாளைக்கி வேலை பார்த்தியாரு வீட்டிலையாக்கும்.. நேர்த்த வந்திரு..” – என்று முருகேசன் கூறிக்கொண்டே, சண்முகத்துடன் சைக்கிளில் கிளம்பினான்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன்.  ஏதோ கொஞ்சம் கவலையாக இருந்தது.  நாளை தொட்டு, இவர்கள் யாரும் இங்கு வரப் போவதில்லை – என்பது எனக்குக் கவலையாக இருந்தது.  எதை நினைத்துக் கவலைப் படுகிறேன்.. இவர்களை நினைத்தா? வள்ளியமையை நினைத்தா? போயும்.. போயும் ஒரு தேவ...யாளை நினைத்தா? நான் நினைத்தால் இவளைவிட வயதிலும், அழகிலும் அழகானப் பெண்களுடன் சல்லாபித்திருக்கலாமே...? பின்பு ஏன்....எனக்கிந்தக் கவலை?  வாழ்வில் என்னைப் போன்றே, யாருமே இல்லாதிருக்கும்,  இவள் மட்டும், கவலையை வெளியில் காட்டுவதில்லையே? அந்த உணர்வை வெளிக்காட்டாமல், இவளால் மட்டும் எப்படி நடிக்க முடிகிறது? மண்ணைக் கீறி முளைக்கும், நெல் நாற்றைப் போல்... பல கேள்விகள் நெஞ்சைக் கீறி முளைத்திருந்தன.

எல்லாவற்றையும் கழுவி முடித்து, வீட்டுக்குப் போகத்  தயாரானாள் வள்ளியம்மை.  அவள் சம்பளத்தைக் கையில் கொடுத்து விட்டு, வெள்ளையன் சொன்னான்.

“எப்படியோ வேலையை முடிசிட்டயோ..! கொஞ்சம் இரு... ஒரு வாய்க் காப்பியைக் குடிச்சிட்டு போ...”- சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போனான் வெள்ளையன்.

ஈரக் கையை முந்தானையில் துடைத்துக்கொண்டே, நமட்டு சிரிப்போடுச் சொன்னாள் வள்ளியம்மை..

“வெறும் காப்பி மட்டும் தானா வெள்ளையா.., “கடி” ஒண்ணும் இல்லையா?”

வெள்ளையன் திரும்பிப்  பார்த்துச் சொன்னான்.. 

“பண்ணையாரு இருக்கார்... இல்லாட்ட..சரியா... இதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்னு”..- என்று சொல்லி சிரித்து, சமையலைறைக்குள் நுழைந்தான்.

அதைக்கேட்டு அவள் “கல, கல” வெனச் சிரித்தாள்.  நான் சிறிதாகச் சிரித்தேன்.  பின்பு என்னை நோக்கி,

“என்ன பண்ணையாரே... என்னவோ மாறி இருக்கீங்க?”

“எனக்கென்ன வள்ளியம்மை.. நான் சும்மா தான் இருக்கேன்..!

“இல்ல பண்ணையாரே... முகம் ஏதோ கவலையா இருந்தமாறி இருந்தது... அதான் கேட்டேன்..”

“நமக்கென்ன... பிள்ளையா.. குட்டியா...வள்ளியம்மை.. கவலை படறதுக்கு... இதயம் துடிக்குற வரை வாழ்ந்திட்டு போய்ரவேண்டியதுதான்...”

“என்ன பண்ணையாரே..  இப்படிச்சொல்லிடேங்க.. இம்ம்ம்னு... சொன்னீங்கன்னா... நானே பிள்ளையைப் பெத்து தந்திட்டு போய்டுறேன்...” – என்று சொல்லி வழக்கமான இரட்டை அர்த்த மொழியுடன்,  நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

எந்த ஒரு சங்கோசமும் இல்லாமல் அவள் அப்படிக் கேட்டது எனக்குப் பிடித்திருந்தது.  சிரித்துக் கொண்டேன்.

“உடம்பு உரசி யாரு வேணும்னாலும் பிள்ளையைப் பெத்துக்கிடலாம் வள்ளியம்ம...,  ஆனால் வயசான காலத்துல.. மனம் விட்டு பேச ஒரு துணை வேணுமே.. அதுக்கு என்ன செய்ய..?  அந்த கவலைதான் எனக்கு...! உன்ன மாறி, உள்ளுக்குள் தீ பிடிக்கிற சோகத்தை வச்சிக்கிட்டு, வெளியச் சிரிச்சு பேச என்னால முடியாது.- சட்டென்று சொல்லி விட்டேன்.

அவள் சோகத்தை நான் அடையாளம் கண்டதாலோ, அல்லது அவள் நடிப்பை நான் அடையாளம் கண்டதாலோ, அல்லது அவள் பேச்சிற்கு சரியான மறுபடி பேசியதாலோ............. என்னவோ, அவள் கண்கள் கலங்கி இருந்தது. அழுதிருந்தாள்.

எனக்கு என்னவோ மாறி இருந்தது.  வெள்ளையன் காப்பிக் கோப்பைகளோடு வெளியே வருவதைப் பார்த்து, இருவரும் தன்னிலை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு ஒரு கோப்பையை நீட்டி விட்டு, மற்றொன்றை வள்ளியம்மையிடம் நீட்டினான்.

“குடி.. குடி.. குடிச்சிட்டு கிளம்பு.. இன்னைக்கு சனிக்கிழமைலா.. திட்டு விளைக்கு நைட் டுட்டிக்கு போகணும்லா..”- வள்ளியம்மையை வழக்கம்போல் வம்புக்கிழுத்தான் வெள்ளையன்.

அவள் சட்டென்று திரும்பி, யாரிடமும் எதுவும் பேசாமல், வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.  ஏ...வள்ளியம்மை.... ஏ...வள்ளியம்மை....னு எத்தனையோ தடவை வெள்ளையன் கூப்பிட்டும் அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை. காப்பிக் கோப்பையோடு என்னையும், அவளையும் மாறி, மாறிப் பார்த்தான் வெள்ளையன்.  நான் முகத்தைக் குனித்து வைத்திருத்தேன்.  அவள் உழைப்பால் கட்டி முடித்த “காம்பௌண்டு சுவர்” மட்டும் கம்பீரமாக “நிமிர்ந்து” நின்றுக் கொண்டிருந்தது.