சனி, 20 ஆகஸ்ட், 2016

கும்பாட்டக்காரி

அந்த ஊருக்குச் சென்ற நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி. ஒரு மன நிறைவு. சொல்லில் புரிய வைக்க முடியாத ஒரு புளகாங்கித மன நிலை. மகிழ்ச்சி என்பதற்கும், சந்தோசம் என்பதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டதாய் ஒரு பேரானந்தம்.  அடுக்கு மாடிக் குடியிருப்பு, ஜன நெருக்கடி, வாகனப் புகை வீச்சம், மருந்துக்குக் கூட சிரிக்க மறந்த அல்லது சிரிக்க முயலாத மனித முகங்கள், என ஒருமாதிரியான மரத்துப் போன வாழ்க்கையை அனுபவித்த எனக்கு, அந்த கிராமத்து வாழ்க்கை ஒரு அசாதாரண சந்தோசத்தைத் தந்துக் கொண்டிருந்தது. 
 
என் அப்பாவின் சொந்த ஊர் இதுதானாம்.  அவர் அந்த காலத்து பி.ஏ.  இருபத்திரெண்டாம் வயதில் டில்லியில் அரசாங்க வேலை கிடைக்க, அவரின் பணி நிமித்தம் காரணமாக, நான் டில்லியிலேயே பிறந்து வளர வேண்டியச் சூழ்நிலை. சிறிய வயதிலேயே அம்மாவை இழந்து, அப்பாவாலேயே வளர்க்கப்பட்டேன். எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஒரு வாழ்க்கை. 

காலச் சக்கரம் சுழல, எனக்கும் அரசு வேலைக் கிடைத்து, திருமணம் முடிந்து, வாழ்க்கையின் முற்பகுதி, முழுதும் அயலூரிலேயே கழிந்தாகி விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் அன்பிற்கும், ஆசைக்கும் குறைவில்லாதிருக்க, அதற்குச் சாட்சியான “குழந்தைப்பேறு” மட்டும் இல்லாமலேயே இருந்தது. நமக்குப் பிடித்த உணவை அருகிலிருந்து மற்றவர்கள் சாப்பிடும் போது ஒரு “உணர்வு” வருமே... அதே உணர்வின் ஆயிரம் மடங்கு,  எங்கள் முன்னால் பெற்றோர்கள், அவர்கள் குழந்தையைக் கொஞ்சும் போதும். 

சொல்லிமாளாத நரக வேதனை. செய்ய வேண்டிய எல்லா மருத்துவ சோதனைகள் செய்தும் பலனில்லை.  இருந்தும் சோகத்தை மறந்து, நாங்கள் மகிழ்ந்த நாட்களுக்கும் குறைவில்லை. எனக்கும் என் மனைவிக்கும், பணவசதிக்குக் குறைவில்லாத போதும், புதியவர்களைச் சந்திக்கும் போது எதிர்கொள்ளவேண்டியச் “சராசரி கேள்விகளை” நினைத்து “அசுர  பயம்”. 

“எத்தர குழந்தைக உங்களுக்கு?” –என்ற கேள்விக் கேட்கப்படும் போதெல்லாம்.... சுக்கு நூறாய் உடைந்திருப்பேன்.. மனைவியோ சில்லுச் சில்லாய் சிதறியிருப்பாள்.

அப்பா அடிக்கடி இந்த கிராமத்திற்கு வருவதுண்டு. குடும்பத்தாரின் திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என, என் இளமைப்பருவத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். எல்லா முறையும் வருவதற்குப் பிடிக்காமலேயே வந்திருக்கிறேன்.  இங்குள்ள சொத்துப் பத்துகளை நிர்வகிக்கும் வேலைக்காரன் வெள்ளையன் மட்டுமே பேசிப்பழக்கம்.  ஆறு, குளம், வாய்க்கால், வரப்பு, கோவில், தேரோட்டம் என்பவை நாலைந்து நாளில் முடிய,  மீண்டும் டெல்லி நகர வாழ்க்கை.

வீட்டுக்கு ஒரே பிள்ளையான என்னிடம், இறக்கும் தருவாயில் என் அப்பா கேட்டு கொண்டது இந்த ஒன்றை மட்டும் தான்.  
“கணேசா... நான் கடைசி காலத்துல நம்ம ஊரோட ஒதுங்கனும்னு நினைச்சேன்.. நடக்கல.. நீ அத செய்யணும் மக்கா”- என்று சொல்லிய மூன்றாவது நாளில் இறந்து போய் விட்டார்.  மனைவியும் நானும் ஒரு மட்டுப்பட்ட மகிழ்ச்சியுடன், வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதாயிற்று. ஒரு பௌர்ணமி நாளில் எதிர்பாராத விதமாக மனைவியும் இறக்க.. நாப்பத்தைந்தாவது வயதில், தாங்க முடியாத பாரத்துடனான “தனிமை” மட்டுமே என்னை ஆக்ரமித்துக் கொண்டது.  

“இளைமையில் வறுமை” எவ்வளவு கொடுமையோ.. அதை விட கொடுமை “முதுமையில் தனிமை”.  தனிமையின் வெறுமையில் எனக்கும் என் அப்பாவைப் போல் சொந்த ஊரின் ஞாபகம்.  ஞாபகம் வந்த கையோடு வீட்டு வேலையை ஆரம்பித்து, ஒரு நல்ல நாளில் குடியேறி, வருகின்ற வெள்ளிக் கிழமை வந்தால் நாலு மாதம் முடிந்து விடும்.  ஆரம்பத்தில் ஒரு வெறுமையோடு இங்கு வந்தாலும் இப்போது இந்த கிராமத்தின், இந்த கிராமத்து மக்களின் “ஒட்டு மொத்த ரசிகன்” ஆகியிருந்தேன்.

ஆரம்ப நாட்களில் இந்த கிராமத்து தெருக்களில் இறங்கி நடக்கும் போது, எதிர்வரும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் தூவிக்கொண்டே இருக்கும் அந்த “குசலம்” எனக்கு பிடித்திருந்தது.

“ஊருக்கு புதுசா.. யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க..”

“பரமசிவ பாட்டாக்கு மகன் வந்தாச்சுன்னு.. வெள்ளையன் சொன்னான்...  அதான் பாக்கலாம்னு வந்தோம்..”

“நம்ம டெல்லி பரமசிவத்துக்கு மகனா? சரியா போச்சு... நீ எனக்கு மருமவன் முறைடே...”

“மகளுக்கு கல்யாணம்.... கண்டிப்பா வந்திரணும்..உங்களுக்கு யாரும் இல்லைங்கிற நினைப்பு வேண்டாம்.. நாங்க இருக்கோம்..”

“மாமோய்... வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்க... கைவசம் ஆள் இருக்கு..”

“வெளியயே நின்னா எப்படி... உள்ள வந்து ஒரு காப்பி சாப்பிடுங்க... அப்பா வந்தா இங்க சாப்பிடாம போகவே மாட்டங்க...”

6000 ரூபா... முன்னாடி பரமசிவம் பாட்டா வந்த போது கைமாத்தா வாங்கியிருந்தேன்.. அவரு போயிட்டாலும்.. அத உங்கள்ட தரது தானே முறை.. அதான் கொண்டு வந்திருக்கேன்..”

“ஏழாம் கொடை மலர் அலங்கார உபயம் எல்லா வருசமும் அப்பாதான்..பண்ணுவாங்க.. இந்த வருஷம் நீங்க பண்ணனும்..”

சாம்பலும், புளியும் போட்டு தேய்த்த “செப்பு பாத்திரமாய்” ஜொலித்தார்கள் ஒவ்வொரு மனிதர்களும்.  கள்ளம் கபடமற்ற “வெள்ளை நிற” பேச்சுக்கள்.  அன்பான உபசரணைகள்.  ஆசையை தூண்டும் சம்பாஷனைகள்.  சுற்றம் சூழ சொந்த பந்தங்களுடன் வாழும், அந்த வாழ்வின் “சுவை” எனக்கும் நிரம்பப் பிடித்திருந்தது. 

ஆத்தங்கரைக் குளியல், அரச மரத்தடிப் பிள்ளையார், திண்ணைப் பேச்சுக்கள், திகட்டாதச் சிரிப்புகள், என வாழ்க்கை ஒருவாறு வசப்பட்டு விட்டது.  என் வீடானது “பெண்கள்” இல்லாத வீடாக இருப்பதால் வெட்டிப் பேச்சு பேச, ரெம்ப வசதியாக இருந்தது.  சில நாட்களில் அதிகாலைப் பொழுது வரை, பேச்சுக்கள் நீளும். 

பேசி முடித்து படுக்கையில் விழுந்ததும், மீண்டும் தனிமையின் தவிப்பில் மனைவியின் நினைப்பு வரும்.  அவளும் இந்த வீட்டில் இருந்திருந்தால்...... இரண்டு மூன்று பிள்ளைகளோடும், மனைவியோடும், அப்பாவோடும் இந்த வீட்டில் வாழ்ந்திருந்தால், எப்படி இருக்கும்?... என்ற நினைப்பு, ஒரு தாங்க முடியாத “ஏக்கத்தை” ஏற்படுத்தும்.  சட்டென்று  எழுந்து இரண்டு டம்ளர் விஸ்கியைக் குடித்து விட்டுப் படுத்தால் நிம்மதியான “போதைத் தூக்கம்” வாய்க்கும். 

மறுநாள் காலையில் வெள்ளையனின் “சமையல் வாசம்” தூக்கத்தை கலைக்கும்.  எழுந்து,  குளித்து முடித்து, வாய்க்கால் வரப்புகளைச் சுற்றி, தெரியாத விவசாய நுணுக்கங்களை வெள்ளையன் உதவியோடு மேற்பார்வைச் செய்து, மீண்டும் வீட்டுக்கு வந்துச் சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு, விழித்தெழும் போது “வெட்டிப் பேச்சுக் கோஷ்டிகள்” திண்ணையில்  என் வருகைக்காகக் காத்திருக்கும்.  நாலைந்து மாத கிராமத்து வாழ்க்கையானது, இவ்வாறே போய் கொண்டிருந்தது.

ஒரு நாள் காலைப் பொழுதின் அயர்ந்த தூக்கத்தில்தான் அந்தப் பேச்சுக்குரல்கள் கேட்டது.  இடையிடையே  ஒரு பெண்ணின் குரலும்.

“என்ன வெள்ளையா...  வெள்ளம் வத்தி போச்சா.. உனக்கு.., இப்படி ஆயிட்ட...”

“ஒரு எரப்பு எறச்சு பாக்கியா... வெள்ளம் இருக்கா..வத்திட்டானு.. அப்ப தெரியும் உனக்கு..”

“எரச்சிட்டா போச்சு.. பல ஊரு தண்ணிய பார்த்தாச்சு... உனக்குள்ளத பார்க்க குறை வப்பானேன்..”

சில பேரின் சிரிப்பொலிகள்.. மீண்டும் வெள்ளையனின் பேச்சுக்குரல்.

“பத்து நாள்ல முடிஞ்சிருமா.. சம்முகம்.. சும்ம நாள இழுத்துடக்கூடாது....”

“அது முடிஞ்சுரும்.. ரெண்டு கையாளு மட்டும் கூட விடணும்.. மண்ணெல்லாம்  வெளிய செமக்கணும்லா..”

“ரெண்டோ.. மூணோ.. ஆளை விட்டுக்கோ..... முன்னாடி.. வீட்டுல ஆளுக கிடையாது... உன் இஷ்டத்துக்கு வேலை பார்த்த... இப்ப பண்ணையாரு வந்தாச்சு தெரியும்லா...”

படுக்கையில் இருந்து எழுந்து, முகம் கழுவி வெளியே வந்தேன்.  வெள்ளையன் ஓடி வந்தான்.

“காம்பௌண்டு செவரு குறை கிடக்குல்லா... அத முடிக்கிறதுக்கு ஆள் வந்துருக்கு...”

வெளியே வந்து பார்த்த போது.. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். நல்ல அசலான கிராமத்து மனிதர்கள். அவர்களின் கையில் கட்டிட வேலைக்குத் தேவையான “தட்டு முட்டு சாமான்கள்”.  எண்ணை வழியத் தலைச் சீவிய ஒருவனை சுட்டிக் காட்டி, வெள்ளையன் கூறினான்.  
“இது நம்ம சம்முகம்.. கொத்தனார்.. நம்ம வீட்டு வேலையெல்லாம் பார்த்தவன்.. இவன்தான்”

சண்முகம் முன்னாடி  வந்து கும்பிட்டு விட்டு, சிநேக சிரிப்பு சிரித்தான்.  எல்லாரும் கும்பிட்டார்கள்.

“மொத்த வேலையும் முடிய எத்ர நாள் ஆகும்,,, சம்முகம்...”

“பத்து நாள்ல முடிச்சிரலாம்...பண்ணையார...”

“சரி ஆரம்பிங்க”.. என்றுச் சொல்லி விட்டு, நியூஸ் பேப்பர்  படித்து, பின்னர் குளித்து, சாப்பிட்டு முடித்து வெளிய வரும் போது, கட்டிட வேலை, வெகு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது. சண்முகம் கல்லெடுத்து அடுக்க, அந்தப் பெண்ணும், மற்ற ஒரு ஆளும் சேர்ந்து சிமெண்ட், மண், தண்ணீர்  கலவையைக் கிளறிக் கொண்டிருந்தனர். கடினமானக் கட்டிட வேலைக்கு நடுவிலும்.. இடைவிடாத சந்தோஷ உரையாடல்கள். அப்பெண்ணின் இரட்டை அர்த்த வசனங்கள். சிரிப்புகள்.

“சம்முகண்ணே... மத்தவன் மம்புட்டி போட, சரி வர மாட்டான்... உனக்கு இன்னைக்கு சாந்து கலவை கிடைச்ச மாரிதான்...”

சண்முகம் வாயில் வெற்றிலைச் சிவப்போடு உருமினார்..

முருகேசா.. வள்ளியம்மை... சொல்லுகது.. சரிதானடே.. நல்ல குத்தி கிளறி கலக்குடே... கல்லு கெட்டுக்குத்தான்... கொஞ்சம் மண்ணு கூடினாலும் பிரச்சனை இல்லை...

முருகேசன் முழு வலிமையையும் சேர்த்து, சாந்துக் கலவையை கலக்கினான். வள்ளியம்மை, சிரிப்போடு சொன்னாள். 

“ மாப்பிள்ளைக்கு.. இப்ப தான் வேகம் கூடுகு....”

வாசலில் நின்று கொண்டு, கதவு இடைவெளியில் அந்தப் பெண்ணைக் கவனித்தேன்.  நாப்பது வயதிருக்கலாம்.  நல்ல கருப்பான “நாட்டு உடம்பு”.  கருப்புன்னா கருப்பு இல்லை.  கருங்கல்ல நல்ல கழுவி, எண்ணைத் தேய்ச்சு விட்டா, ஒரு மினு மினுப்புக் கருப்பு வருமே, அந்த கருப்பு. முகம் முழுதும் சிரிப்பு.  கூடவே “முக பௌடரில்” நனைந்த வியர்வைத் துளிகள்.  நெற்றி நடுவே கால் இஞ்சு விட்டத்தில் சிவப்புப் பொட்டு.  வெற்றிலை ஒதுக்கிய மோவாய், வெற்றிலைக் கறைப் படிந்த பற்கள்.. “கல, கல” -வென இடைவிடாதப் பேச்சு.  இடையிடையே இரட்டை அர்த்த வசனங்கள்.  “பாக்கணும்னா... பாருங்கல” -என கவர்ச்சி அவயங்களைப் பட்டவர்த்ததனமாகக் காட்டும் “சேலைக் கட்டு”.  அக்குள் வியர்வையில் நனைந்த செம்பர் மேலாடை.  கழுத்தில் கருப்பு நிறத்தில் ஒரு பழுப்புக் கயிறு.  கால் தடம், செருப்பின் மேல் பதிந்த “லூனார்ஸ் செருப்பு”, காலை அலங்கரித்துக் கொண்டிருக்க, "நான் நடத்தையில் கொஞ்சம் அப்படியாக்கும்”- என்பதைச்,  சொல்லாமல் சொல்லும் உடல் மொழிகள்.  

நான் வெளியே வந்து நின்று பார்ப்பதை, வெள்ளையன் கவனித்து, அனைவரையும் மிரட்டினான்.

“ஏ...வள்ளியம்மை... அங்க என்ன பல்லைக் காணிச்சிட்டு இருக்க.., ஏல.....முருகேசா.. வெட்டி விடு டே... சாந்த.. வேலை நடக்கட்டும்பா..

புதிதாகப் பேட்டரிப் போட்ட விளையாட்டு பொம்மை போல் அனைவரும் மும்முரமாக இயங்கினர். வேலையை மேலோட்டம் பார்ப்பதுபோல் அனைவரையும் அருகில் சென்று கவனிக்கலானேன். 

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, வள்ளியம்மை வெள்ளையன் அருகில் சென்று.. கிசு கிசுத்தாள்.

“வெள்ளையா... பல்ல காணிக்க கூடாதுன்னா.... வேற எதாவது காணிக்கட்டா”

கொத்தனார் சண்முகத்திற்குச் சிரிப்பு தாங்கவில்லை. முருகேசன் குனிந்து சிரித்துக் கொண்டே மண்ணைக் கிளரிக்கொண்டிருந்தான்.  வெள்ளையன் நான்  நிற்பதால் வெக்கத்தில் நெளிந்தான்.  எனக்கும் சிரிப்பு வெளிப்பட, வீட்டிற்குள் சென்று சிரித்தேன்.

வெளியே கொஞ்சம் சத்தமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 
அன்று இரவில் வள்ளியம்மையைப் பற்றி வெள்ளையனிடம் கேட்டேன். 

“வெள்ளையா.. யாரு அந்த பொம்பளை... ரெம்ப கேவலமா... என்னா பேச்சுப்...பேசுகா”

”யாரு வள்ளியம்மையா....! கேவலம்லா.... இல்ல மொதலாளி... நல்லவ தான்.... ஒரு காலத்துல “கும்பாட்ட காரியா” –யிருந்து, இங்கனோடி உள்ள அவ்வளவு ஆம்பிளைகளையும் ஆட்டி வச்சவ... ஆடாத ஊரு கிடையாது... அவ்வளவு பிரபலம்.. வள்ளியம்மை ஆடுகான்னு சொன்னாத்தான், கோவில் திருவிழாவிற்கே பெருமைன்னு இருந்த காலம்...! கருப்பா இருந்தாலும் அப்டி இருப்பா.. சும்மா.. சித்தூரு கோவில் குதிரை மாறி......”

வெள்ளையன் மூச்சு வாங்கிக்கொண்டான்.  பேச்சின் சுவாரஸ்யம் கூடியதால் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். 

“அம்சமா இருந்தப்போ ஆட விட்டு பார்த்தானுகோ...  கொஞ்ச நாளைக்கி அப்புறம், “அனுபவிச்சு” பார்த்தானுகோ... எல்லாம் முடிஞ்சு வயசானதுக்கப்புறம்.. எச்சிலை துப்புர மாறி துப்பிடானுகோ..’

கொஞ்சம் வருத்தமும், கொஞ்சம் வக்கிரமும், கொஞ்சம் அனுதாபமும் வெளிப்பட க் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சொந்த பந்தம் ஒண்ணும் இல்லையா... வெள்ளையா?”

“அம்மக்காரி சின்ன வயசுலேயே... போய் சேர்ந்துட்டா.. அப்பன்காரன்தான் இவள ஆட்டத்துல இறக்குனதே.. அஞ்சு வருஷம் முன்னாடி அவனும் செத்துட்டான்.  இது இப்ப கிடைக்குற வேலை செய்து காலம் கழிச்சிட்டு இருக்கு..” 

உண்மையான வருத்தத்தோடு வெள்ளையன் பேசினான். பின்னர் சிறிதாக சிரித்துக்கொண்டே கூறினான்.

“இப்பவும் பாட்டுன்னா செத்துருவா... பெரிய இளைய ராஜா ரசிகை.. நாகர்கோயில் பஸ் ஸ்டாண்டுல, பஸ்ஸ விட்டிட்டு “பாட்டு” கேட்டுட்டு நின்ன கட்சியாங்கும்... “பாட்டு கிறுக்கு” கூடுதல்.. என்னா.... கொஞ்சம் ஆம்பிளைகளே... வெக்கப் படுற மாதிரி “வாய்” மட்டும் பேசுவா..... அப்படி இல்லாட்டன்னாலும்... மொத்த பயக்களும் சேர்ந்து.....அவள பிச்சு தின்னு போடுவானுகள்ளா...,”

மிகத் தத்ரூபமாக அவள் வாழ்க்கை நிலைமையை வார்த்தையில் விளக்கினான் வெள்ளையன்.   

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு சராசரி ஆணுக்குள் தோன்றும் முதல் உணர்ச்சி “காமமாகவே” இருக்கிறது..  பத்து நிமிடம் அவளிடம் பழகியப் பின்பு, அவளின் நம்பிக்கையை பெற்று, அந்த பழக்கத்தை நீடிக்க முயற்சி செய்கிறது ஆணின் மனம். 

ஒரு பெண்ணின் சுகத் துக்கங்களை அறிந்த பின்பு, துக்கத்தில் அழுகின்ற பெண்களுக்கு ஆறுதல் சொல்ல, எந்த ஆணின் மனமும் தயங்குவதில்லை. ஆனால் துக்கத்தை வெளியில் காட்டாமல், அதை சிரிப்போடு ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை, எப்படி எதிர்க்கொள்வது என்றக் குழப்பம், எல்லா ஆண்களுக்கும் உள்ளதுதான். அதே மன நிலைமையில் தான் நானும் இருந்தேன்.

அன்றைய இரவு முழுவதும், புழுதித் தண்ணீரில் சிக்காத விலாங்கு மீனை போல், என் மனவோட்டத்திற்கு அகப்படாத “விசித்திர”மாகவே இருந்தாள் வள்ளியம்மை.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எல்லோரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எளியவர்களின் உழைப்பிலும், சிரிப்பிலும், வியர்வையிலும் காம்பவுண்ட் சுவர் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.  வெள்ளையன் அப்போது இல்லாததால், நானே “மேற்பார்வை” செய்து கொண்டிருந்தேன்.  “மேற்பார்வை” என்றால்  என்னுடையப் பாணியில் “நாற்காலியை” போட்டு உட்கார்ந்து கொண்டு, “பராக்கு, பராக்குப்” – பார்ப்பதாகும். 

சண்முகமும், முருகேசனும் வேலையில் கண்ணாய் இருக்க, அதிகப்படியான முக பவுடர், தலையில் “கனகாம்பர பூ” என மின்னினாள் வள்ளியம்மை.  அவளைப் பற்றி கேள்வி பட்ட விசயங்கள், அவள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. வேலையினூடே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.  எனக்கு தெரிந்தப் பாட்டுதான்.  எப்போதோ செல்போனில் அந்த பாட்டை பதிந்து வைத்ததாய் ஒரு ஞாபகம்.  செல்போனை எடுத்து பாட்டைத் தேடினேன். மிதமான ஒலியில் பாட்டை ஒலிக்க வைத்தேன். 

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ரசாத்திக்காக...”- என உச்ச ஸ்தாதியில் இளைய ராஜாவின் இசை, காற்றில் மிதந்து காதை நனைத்தது.  சண்முகமும், முருகேசனும் இசையில் லயிக்க, நூறு வோல்ட் மின்சாரம் முகத்தில் எரிய, பாட்டை ரசித்தாள் வள்ளியம்மை. சில நிமிடங்களில் பாட்டு முடிய வள்ளியம்மையிடமிருந்து அந்த அதிகார குரல்.

“பண்ணையாரே.. அந்த பாட்டை திருப்பி போடுங்க...”.

அந்த “அதிகார வேண்டுதல்” எனக்குப் பிடித்திருந்தது. பாட்டை மீண்டும் இசைக்க வைத்தேன். வெள்ளையன், எல்லோருக்கும் ஐயர் கடையிலிருந்து “டீ” வாங்கி வந்திருந்தான். 

“டீ” யைக் குடித்துக் கொண்டே வள்ளியம்மை பேசினாள்.

“சம்முகண்ணே...இந்த பாட்டை எப்படிக் கேக்கணும் தெரியுமா?”

“எப்படி..?”

“வேலை முடிஞ்சு.. நம்ம பழையாத்துல குளிச்சிட்டு..ராத்திரி ஆகாரதுக்கப்புறம்.. அம்மம்மாண்ணு.. உக்காந்து கேக்கணும்..”

“அட... அட... நீ எங்கயோ போய்ட வள்ளியம்மை..” -என்றான் வெள்ளையன். 

எனக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்பாக வந்தது.  ஆனால் வள்ளியம்மை அதை பற்றி கவலை பட்டதாக தெரிய வில்லை. அவள் தொடர்ந்து பேசினாள்.

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ராசாதிக்காக...”-னு அந்த பொம்பள பாடி முடிஞ்சதும், ஒரு புல்லாங்குழல் இசை வருமே......அது அப்படியே நம்மள எங்கயோ இழுத்துட்டுப்  போகும். அதுல லயிச்சு இருக்கும் போதே... “எங்க, எங்க, கொஞ்சம் நான் பாக்குறேன்”-னு பாடுவாரே.. இளைய ராசா... அப்படியே வார்த்தைகள்.... காது வழியா போய், நெஞ்சுகுள்ள  இறங்கும்... கேட்டயாண்ணே...” 

வெள்ளையன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“பண்ணையாரே... நான் நேத்தே சொன்னேன்லா “பாட்டு கிறுக்குன்னு” அது.. இதுதான்....”- வள்ளியம்மையும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தாள்.

“அதுக்கடுத்து வரும் வயலின் ஓசை....கொன்னே.....,போடும் என்னையே.  ஒவ்வொரு வார்த்தையும் இசையோடு சேந்து முதுகு தண்டில் இறங்கும் பண்ணையாரே... ரெம்ப நல்ல பாட்டு பண்ணையாரே”- மிக ரசனையோடுப் பேசினாள் வள்ளியம்மை.

“இவ்வளவு தீவிரமாகப் பாட்டை ரசிக்கும் ஒரு பெண்ணை முதல் முதலாகப் பார்க்கிறேன்”- என்றேன் நான்.

“இப்படி ஒரு பாட்டுக் கிறுக்கைனு  சொல்லுங்க முதலாளி...”- என வெள்ளையன்  கூற எல்லோரும் சிரித்தார்கள்.

“வாழ்க்கை ரெம்ப கஷ்டமாகும் போது...இந்த மாதிரி பாட்டை கடைசியா ஒருவாட்டி கேக்கணும்....... அந்தால... “பால்டால்” அடிச்சுச் சாகணும்னு”--- என்று சொல்லி வள்ளியம்மையும் சிரித்தாள்.

அன்றிரவு வள்ளியம்மை சொன்ன மாதிரிப் பாட்டை கேட்டுப் பார்த்தேன். தேன் கலந்த, கரும்புச்சாறாய் இனித்ததுப் பாட்டு. விஸ்கியின் துணையின்றி உறக்கமும் வாய்த்தது.

பின் வந்த நாட்களில் எல்லாரும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்கள்.  மனசு மிகவும் இலகுவாகி இருந்தது எனக்கு.  குறிப்பாக வள்ளியம்மையின் வெளிப்படையானப் பேச்சு.  

இத்தனை சோகங்களுக்கு நடுவே, அவளால் எப்படி... இப்படி இருக்க முடிகிறது என யோசித்தேன்.  விடைக் கிடைக்க வில்லை.  ஆனால் என்னுடையத் “தனிமை சோகங்களுக்காக” இப்போது நான் வருந்துவதே இல்லை.  காற்றில் பறக்கும் வாத்து இறகை போல மனசு இலேசாகி இருந்தது. 

சில நாட்களுக்குள் கரையான் கட்டும் கூட்டை போல், காம்பௌண்டு சுவர் வளர்ந்து நின்றது.  கூடவே எங்களுக்குள் உண்டானப் “பேச்சு நட்பும்”. 

அன்று அப்படிதான் வெள்ளையன், வள்ளியம்மையிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான்.

“அதான் கிழவியாயாச்சுல்லா.... இன்னும் என்ன அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு?”

“கிழவியோ... குமரியோ... வச்ச கண்ணு வாங்காம பாக்குற பயக்கதான... நீங்க எல்லோரும்.. ஒவ்வொரு சனிக்கிழமையும், திட்டுவிளை மஸ்தான் ஷாயிப்புக்கு, இப்பவும் நான் குமரிதான்... அதுவும் இல்லாம.. கண்ணாடில என் முகத்தை இப்படி பாக்குறதுதான்...., எனக்கும் புடிக்கும்.”
-      -வெடித்துச் சிதறினாள் வள்ளியம்மை.

“ஏன்  வள்ளியம்மை... இப்படி பச்சையா பேசுறதுல உனக்கு குறைச்சல் ஒண்ணும் இல்லையா?” – சற்றுத் தயங்கித்தான் நானும் கேட்டேன்.

“எனக்கென்ன குறைச்சல் பண்ணையாரே... இந்த ஆம்பிள்ளைக மேலுள்ள நம்பிக்கையும் போச்சு.. பயமும் போச்சு.. இந்த ஏரியாவுல பாதி பேருக்கு மேல்... ஆசை வெறியோட... குஞ்....... தூக்கிட்டு என் காலடில விழுந்து கிடந்தவனுகதான்...  அத்தனை பேராலையும்.. உடம்புல காயம் பட்டாலும்.... மரத்து போனது என்னவோ மனசுதான் பண்ணையாரே...”- என்று சொல்லிச் சிரிதாகச் சிரித்தாள். 

“இவனுகள... பார்க்கும்போதெல்லாம்...எனக்கு  இவனுகளோட “மத்த உணர்ச்சி மூஞ்சி” ஞாபகம் வந்து,  நல்லா சிரிப்பா வருகு... நான் என்ன செய்ய?” – என்று சொல்லி, “காம உணர்வு” வேகத்தில், ஆண்களின் முகம் எப்படி இருக்கும் என்பதை உடல் மொழியில் நடித்துக் காட்டினாள்.  அவளால் சிரிப்பை அடக்க முடிய வில்லை.

எல்லோரும் சிரித்து உருண்டார்கள். நானும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிரித்தேன். 

சில நாட்களில், காம்பௌண்டு சுவரின் பணி ஒருவாறாக முடிந்திருந்தது. கட்டுமான பொருட்களைக் கையோடு எடுத்து சண்முகமும், முருகேசனும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.   

சம்பளப் பாக்கியை கணக்குப் பார்த்து வெள்ளையன் கொடுத்தான். வள்ளியம்மை மட்டும், தேங்காய் சவரியைக் கொண்டு, சாந்து சட்டியைக் கழுவிக்கொண்டிருந்தாள்.

“வள்ளியம்மை..நாங்க போறோம்..எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு நீ போ... நாளைக்கி வேலை பார்த்தியாரு வீட்டிலையாக்கும்.. நேர்த்த வந்திரு..” – என்று முருகேசன் கூறிக்கொண்டே, சண்முகத்துடன் சைக்கிளில் கிளம்பினான்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன்.  ஏதோ கொஞ்சம் கவலையாக இருந்தது.  நாளை தொட்டு, இவர்கள் யாரும் இங்கு வரப் போவதில்லை – என்பது எனக்குக் கவலையாக இருந்தது.  எதை நினைத்துக் கவலைப் படுகிறேன்.. இவர்களை நினைத்தா? வள்ளியமையை நினைத்தா? போயும்.. போயும் ஒரு தேவ...யாளை நினைத்தா? நான் நினைத்தால் இவளைவிட வயதிலும், அழகிலும் அழகானப் பெண்களுடன் சல்லாபித்திருக்கலாமே...? பின்பு ஏன்....எனக்கிந்தக் கவலை?  வாழ்வில் என்னைப் போன்றே, யாருமே இல்லாதிருக்கும்,  இவள் மட்டும், கவலையை வெளியில் காட்டுவதில்லையே? அந்த உணர்வை வெளிக்காட்டாமல், இவளால் மட்டும் எப்படி நடிக்க முடிகிறது? மண்ணைக் கீறி முளைக்கும், நெல் நாற்றைப் போல்... பல கேள்விகள் நெஞ்சைக் கீறி முளைத்திருந்தன.

எல்லாவற்றையும் கழுவி முடித்து, வீட்டுக்குப் போகத்  தயாரானாள் வள்ளியம்மை.  அவள் சம்பளத்தைக் கையில் கொடுத்து விட்டு, வெள்ளையன் சொன்னான்.

“எப்படியோ வேலையை முடிசிட்டயோ..! கொஞ்சம் இரு... ஒரு வாய்க் காப்பியைக் குடிச்சிட்டு போ...”- சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போனான் வெள்ளையன்.

ஈரக் கையை முந்தானையில் துடைத்துக்கொண்டே, நமட்டு சிரிப்போடுச் சொன்னாள் வள்ளியம்மை..

“வெறும் காப்பி மட்டும் தானா வெள்ளையா.., “கடி” ஒண்ணும் இல்லையா?”

வெள்ளையன் திரும்பிப்  பார்த்துச் சொன்னான்.. 

“பண்ணையாரு இருக்கார்... இல்லாட்ட..சரியா... இதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்னு”..- என்று சொல்லி சிரித்து, சமையலைறைக்குள் நுழைந்தான்.

அதைக்கேட்டு அவள் “கல, கல” வெனச் சிரித்தாள்.  நான் சிறிதாகச் சிரித்தேன்.  பின்பு என்னை நோக்கி,

“என்ன பண்ணையாரே... என்னவோ மாறி இருக்கீங்க?”

“எனக்கென்ன வள்ளியம்மை.. நான் சும்மா தான் இருக்கேன்..!

“இல்ல பண்ணையாரே... முகம் ஏதோ கவலையா இருந்தமாறி இருந்தது... அதான் கேட்டேன்..”

“நமக்கென்ன... பிள்ளையா.. குட்டியா...வள்ளியம்மை.. கவலை படறதுக்கு... இதயம் துடிக்குற வரை வாழ்ந்திட்டு போய்ரவேண்டியதுதான்...”

“என்ன பண்ணையாரே..  இப்படிச்சொல்லிடேங்க.. இம்ம்ம்னு... சொன்னீங்கன்னா... நானே பிள்ளையைப் பெத்து தந்திட்டு போய்டுறேன்...” – என்று சொல்லி வழக்கமான இரட்டை அர்த்த மொழியுடன்,  நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

எந்த ஒரு சங்கோசமும் இல்லாமல் அவள் அப்படிக் கேட்டது எனக்குப் பிடித்திருந்தது.  சிரித்துக் கொண்டேன்.

“உடம்பு உரசி யாரு வேணும்னாலும் பிள்ளையைப் பெத்துக்கிடலாம் வள்ளியம்ம...,  ஆனால் வயசான காலத்துல.. மனம் விட்டு பேச ஒரு துணை வேணுமே.. அதுக்கு என்ன செய்ய..?  அந்த கவலைதான் எனக்கு...! உன்ன மாறி, உள்ளுக்குள் தீ பிடிக்கிற சோகத்தை வச்சிக்கிட்டு, வெளியச் சிரிச்சு பேச என்னால முடியாது.- சட்டென்று சொல்லி விட்டேன்.

அவள் சோகத்தை நான் அடையாளம் கண்டதாலோ, அல்லது அவள் நடிப்பை நான் அடையாளம் கண்டதாலோ, அல்லது அவள் பேச்சிற்கு சரியான மறுபடி பேசியதாலோ............. என்னவோ, அவள் கண்கள் கலங்கி இருந்தது. அழுதிருந்தாள்.

எனக்கு என்னவோ மாறி இருந்தது.  வெள்ளையன் காப்பிக் கோப்பைகளோடு வெளியே வருவதைப் பார்த்து, இருவரும் தன்னிலை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு ஒரு கோப்பையை நீட்டி விட்டு, மற்றொன்றை வள்ளியம்மையிடம் நீட்டினான்.

“குடி.. குடி.. குடிச்சிட்டு கிளம்பு.. இன்னைக்கு சனிக்கிழமைலா.. திட்டு விளைக்கு நைட் டுட்டிக்கு போகணும்லா..”- வள்ளியம்மையை வழக்கம்போல் வம்புக்கிழுத்தான் வெள்ளையன்.

அவள் சட்டென்று திரும்பி, யாரிடமும் எதுவும் பேசாமல், வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.  ஏ...வள்ளியம்மை.... ஏ...வள்ளியம்மை....னு எத்தனையோ தடவை வெள்ளையன் கூப்பிட்டும் அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை. காப்பிக் கோப்பையோடு என்னையும், அவளையும் மாறி, மாறிப் பார்த்தான் வெள்ளையன்.  நான் முகத்தைக் குனித்து வைத்திருத்தேன்.  அவள் உழைப்பால் கட்டி முடித்த “காம்பௌண்டு சுவர்” மட்டும் கம்பீரமாக “நிமிர்ந்து” நின்றுக் கொண்டிருந்தது.

வெள்ளி, 1 ஜூலை, 2016

தோசை

தெற்கேப் போய்விட்டு ஊருக்குத் திரும்பும் எவரும் பக்கீர் பாயின் கடையைத் தாண்டித்தான் வர வேண்டும்.  அந்த தோசைக்கடை அவ்வளவு பிரபலம்.  பக்கீர் பாயும்தான்.  தோசை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. அதன் சுவை எல்லாரும் அறிஞ்சதுதான்.  ஆனால் பக்கீர் பாயின் தோசைகளில் மட்டும் ஏதோ ஒரு விஷேசம்.  ஒரு தடவைச் சாப்பிட்டு, நாக்குக்கு அந்தச் சுவையைக் காட்டி விட்டால், அந்தக் கடையைக் கடக்கும் போதெல்லாம் “வாடே... வா... வந்து என்னைத் தின்னுட்டுப்  போ-ன்னு” தோசைக் கூப்பிடும்.  சுவை ஒருபுறம் இருக்க பக்கீர் பாயின் அணுகுமுறையும், ஹோட்டலின் சுத்தமான அமைப்பும் மற்றுமொரு காரணம். 

திட்டுவிளை இறக்கம் இறங்கி நன்றிக்குழித் தாண்டியதும் இடப்பக்கம் இருந்தது, ஓலை வேய்ந்த அந்தக்கடை. அங்கிருந்து மணத்திட்டைக்கு நடந்து போக வேண்டியிருப்பதால் எல்லோரும் அந்த பஸ் ஸ்டாப்பில்தான் இறங்கியாக வேண்டும். மணத்திட்டை ஊர்க்காரர்கள், முக்கடல் அணைக்கு வேலைக்கு செல்வோர், வாழை வயலுக்கு வேலைக்கு செல்லும் நாடாக்கமார்கள், என சொற்ப மனிதர்களே வர சாத்தியம் உள்ள இடத்தில் இன்று ஓரளவிற்கு கூட்டம் உள்ளதென்றால் அதற்கு பக்கீர் பாயின் கடைதான் காரணம்.  சிறுவாகனங்கள் தொடங்கி இரு சக்கர வாகனங்கள் வரை  வடமதியிலிருந்து தெற்கே செல்வோரும்,  தெற்கேயிருந்து உள்ளே வருவோரும் பக்கீர் பாயின் கடைக்குச் செல்லாமல் செல்வதில்லை. 

இத்தனைக்கும் கடை ஒன்றும் அத்தனை பெரிய மாட மாளிகை இல்லை. கடையின் வெளிப்புற முன் பக்கம் இரண்டு பெரிய படுப்பறைகள்.  நடுவே உள்ள பழைய மரக்கதவை திறந்து உள்ளே சென்றால் “ப” வடிவில் பெரிதும், சிறிதுமாய் மூன்று ஹோட்டல் பெஞ்சுகள்.  மறுபுற சுவரில் மூன்று மதக்கடவுள்கள் சங்கமிக்கும் ஒரு போட்டோவும், கரி படர்ந்த ஒரு சந்தன மாலையும்.  அதற்கு கீழே ஒரு மேஜையிட்டு, மூன்று ஆண்டுக்கு முந்தைய நியூஸ் பேப்பர் விரிக்கப்பட்டிருக்கும்.  பக்கீர் பாயின் கல்லாப்பெட்டி, அலமாரி, பணப்பெட்டகம், ஆவண காப்பகம் எல்லாம் அந்த மேஜைதான்.  அதைத் தொட்டு மேல் இருந்த செவ்வகத்திறப்பின் வழியாக “சுக்கு காப்பி” வியாபாரம்.  பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அலமாரியில் முறுக்கு, தட்டை, ஓமப்பொடி, மடக்குசா, முள்ளு முறுக்கு போன்ற உலகத்தரம் வாய்ந்த பலகாரங்கள் பத்திரப் படுத்தப்பட்டு  வியாபாரத்திற்குக் காத்திருக்கும்.  அதை தொட்டு அடுத்திருக்கும் கரி படர்ந்த சமையல்கட்டிற்கு, பக்கீர்பாய், வேலைக்காரன் வேலுவை தவிர, வேறு யாருக்கும் “கோடி ரூபாய்” கொடுத்தாலும் அனுமதி இல்லை.  நன்கு நெருக்கி முடையப்பட்ட தென்னம் கூரையாதலால், கடைக்குள் ஆடைக்கும் கோடைக்கும் ஒரே சீதோஷன நிலைதான்.

“பாய் நல்ல முறுவலா முறுக்கு மாறி…. ரெண்டு தோசை தாரும்...”

“பாய் நம்ம ஸ்பெஷல்தான் உமக்கு தெரியுமே..ரெண்டு கெட்டி தோசை போடும்...”

“கொஞ்சம் கரிசலா மூணு தோசை வையும். ரச வடை வைக்க மறந்துராதையும்..”

“நாலு மசாலா தோசை பார்சல் பண்ணும் பாய்..”  என - கதவை திறந்து ஆட்கள் உள்ளே வரும் போதே ஆர்டர்கள் பறக்கும்.  
ஒரே தோசைமாவை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பிடித்தமாதிரி தோசையின் ருசியை மாற்றியமைத்து கொடுப்பதில் இருக்கிறது, பக்கீர் பாயின் தொழில் ரகசியம். காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் பதினோரு மணி வரையிலும் கடை திறந்திருக்கும் நேரம்.  சாதா தோசை, கெட்டி தோசை, மசாலா தோசை, முறுவல் தோசை,  கரிஞ்ச தோசை, உள்ளி தோசை, ரவா தோசை, நெய் தோசைன்னு தோசைகளில், ஏகப்பட்ட வித்தியாசம் காட்டுவார் பக்கீர்பாய்.

“பாய்க்கு தோசையில மட்டும் ஏன் இவ்வளவு டேஸ்ட்னு தெரியுமா... தோசை மாவை அரச்சிட்டு,  கடைசியில கையை கழுவி ஊத்துவார் பார்த்துக்கோ... அதான் அதான் இவ்வளவு டேஸ்ட்ன்னு”- பத்து தோசை தின்னுட்டு, கையை நக்கிட்டே, சிரிச்சி  “தமாஷ்” அடிப்பான் ராமு அண்ணன்.

தோசைக்கு கூட காந்தாரி மிளகு வைத்து அரைத்த தேங்காய் சட்டினி, தண்ணி சாம்பார்.  கேட்டால் மட்டும் மிளகு பொடி.  கேட்காமல் இருந்தாலும் “ரச வடை” வைக்கப்படும்.  தண்ணீரில் ஊறிய பஞ்சு போலுள்ள கொவந்த ரசவடையை  ஒரு துண்டு பிய்த்து உள்நாக்கில் வைக்கும் போது, வடையின் சுவை நாக்கை நனைக்க, ரசத்தின் சுவை தொண்டையை கிறக்கும்.  ரசத்தில் மிதக்கும் வடை, நாவில் போட்டதும் கரையும்.  இதே கிறக்கத்தோடு தோசையை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் முக்கி வாயில் போட்டால், ருசியில் மூளை சிலிர்க்கும்.  இரண்டு தோசை சாப்பிட நினைத்தவர்கள் எல்லாம் நாலஞ்சு சாப்பிட்டு முடித்து விட்டு, இலையை நக்கிக் கொண்டிருப்பார்கள்.

பக்கீர் பாய்க்கு நல்ல ஐஸ்வர்யமான இஸ்லாமிய முகம்.  வெள்ளை நிற தொப்பி, கணுக்கால் தெரிய ஏற்றி கட்டின சாரக்கட்டு, கருத்த நேற்றிமேடு, நன்கு மழிக்கப்பட்ட மோவாய், கழுத்தை தாண்டாத தாடி - என பழுத்த பழமாக இருந்தார். நடையில் ஒரு வேகமும், பேச்சில் ஒரு நிதானமும் இருக்கும்.  பெரிய ஜோக்குகள், உலக மகா தமாசுகள் போன்றவற்றிக்குச் சிறிதாகத்தான் சிரிப்பார். புதிதாக பார்ப்பவர்களுக்கு அவருக்குள் ஏதோ மர்மம் இருப்பதாகத் தோன்ற வாய்ப்புண்டு.  ஆனால் மூன்றாம் முறை பார்பவர்களுக்குத் தெரிந்து விடும் “பக்கீர் பாயும், பச்ச குழந்தையும்” ஒன்றென்று.

ஆறேழு ஆண்டு வெளிநாட்டு வாழ்கையில் சம்பாதித்தது, தற்போது ஹோட்டல் இருக்கும் இந்த இடம் மட்டும் தான். ஒரே மகன் குடும்பத்தோடு சவூதி அரேபியாவில் இருக்கிறான்.  பக்கீர் பாயின்  மனைவி இறந்த இந்த 13 ஆண்டுகளில், தன்னுடன் வந்து இருக்குமாறு பலமுறை கூப்பிட்டு விட்டான் மகன். அவருக்கென்னவோ இங்கு இருப்பதுதான் சௌகர்யம் என்று கூறி விட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெக்காவிற்கு “ஹஜ்” புனித பயணம் போய் வந்தததோடு சரி.  பின்பு ஹோட்டல், தர்கா, பள்ளி வாசல், ஹோட்டல்  வாடிக்கையாளர்கள், இதுதான் பக்கீர் பாயின் உலகம்.

அவசியம் ஏற்பட்டாலொழிய பக்கீர்பாய் மற்ற நேரங்களில் பேசுவதில்லை.  சொற்பமாக பேசினாலும் நியாயமாக பேசுவதால், ஊர் முழுவதும் அவர் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருந்தது. அவருடன் சற்று நெருங்கி உரையாடுவது அவருடைய பால்ய கால நண்பன் பிரம்மநாயகம் பிள்ளை என்ற பிரம்மா மட்டுமே.  1960-களில் இருவரும் பூதப்பாண்டி பள்ளியில் ஒன்றாகப் படித்த “பள்ளி தோழர்கள்”.  பத்திரஎழுத்தர் வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பெண்பிள்ளையை கரையேற்றி, பையனை எஞ்சினீரிங் படிக்க வைத்திருந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.  வேலையில்லா பொழுதுகளில் பக்கீர்பாயின் கடையிலமர்ந்து “கதை” பேசுவது பிரம்மநாயகம் பிள்ளைக்கு ஆனந்தம். பக்கீர்பாயிக்கும், கடை வேலைகளுக்கிடையில் அது “ஒரு ஆறுதல்”.

“ராமாயண காலத்துல “அயோத்தி” இவ்வளவு பிரபலமா இருந்துச்சோ? இல்லையோ? இந்த பயக்கோ ரெம்ப பிரபல படுத்திட்டானுகோ..?” - அன்றைய பேப்பரை புரட்டிக்கொண்டே பிரம்ம நாயகம் பிள்ளை பேச்சை ஆரம்பித்தார்.

“அத வச்சி தானே அரசியல் நடக்கு பிரம்மா.. இங்க எவனுக்கும் சாமில்லாம் வேண்டாம்.. மதப்பிரச்சனை மட்டும் தீராம இருக்கணும்.. ஒவ்வொரு அரசியல் வாதியும், அதுக்கு என்ன செய்யணுமோ அத மட்டும் செய்திட்டே இருக்கானுவோ...” – என்று சுக்கு காப்பியை ஆற்றிக்கொண்டே பதில் சொன்னார் பக்கீர் பாய்.

“அது சரிதான்... நீ என்ன சொல்லுக பக்கீரு.. அங்க கோவில் கட்டணுமா? அல்லது  மசூதி கட்டணுமா?”

ஒரு நிமிட யோசனைக்கு பின் “ரெண்டும் வேண்டாம் பிரம்மா....பாவப்பட்ட பிள்ளைக படிக்க ஒரு பல்கலைகழகம் கட்டிட்டா பிரச்சனை தீரும்லா”...

நடக்குமோ... நடக்காதோ.. பிரம்மநாயகம் பிள்ளை ஏற்றுக் கொள்ள கூடிய பதிலாக “அது”  இருந்தது..

இப்படி உலக நடப்புகள், உள்ளூர் செய்திகள்,பருவ கால மாற்றங்கள், சில குடும்ப விசயங்கள் என இருவரின் பேச்சுகளும் ஒரு வரையறையோடு செல்லும்.  “பெருசுக ரெண்டும் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சாச்சு டேய்... நம்ம கிளம்புவோம்” என்ற கிண்டல் பேச்சுடன் இளவட்டங்கள், அவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே, இடத்தை காலி செய்வார்கள்.

ஒரு முழுபௌர்ணமி நாளின் இரவில் இடியும் மின்னலுமாய் இருந்தது.  மழை வருமா? வராதா? என்பதை கணிக்க முடியாத ஒரு சீதோஷ்ண நிலை.  கருப்பு இருட்டில் பாலை ஊற்றியது போல் வெளிச்சமும், இதமான குளிரும் இடங்களை ஆக்ரமித்திருந்தது. பதினோரு மணியளவில் வியாபாரம் முடிந்து, வேலுவும் பக்கீர் பாயும் ஹோட்டல் வாசலை மூட எத்தனித்த போதுதான் வாசலில் அந்த சப்தம் கேட்டது.  இர்ர்ர்ரர்ர்ர்ர்...டம்ம்மம்ம்ம்ம்...க்ரிச்ச்......

“வேலு.. அது என்னடே சத்தம்.. நம்ம கூரைக்கு மேலத்தான் தாண்டே.. போய் பாரு..பாரு..”

கூரையின் மேற்புறத்திலும் பக்க வாட்டிலும் ஆராய்ந்துவிட்டு வேலு சொன்னான்.

“போஸ்ட் தூண்ல விரிசல் உழுந்துருக்கு பாய்... சரிச்சு கூரைல விழுந்துட பிடாது.. தீ... கீ... பிடிச்சிட்டுனா.. பிரச்சனைதான்..”

கொஞ்சம் பதறினார் பக்கீர்பாய்.. “அந்த லைன் மேன் தெறிப்பான்ண்ட அன்னைக்கே சொன்னேன்... ஒரு மயிரும் ஆகாதுன்னான்.  கிறுக்கு பயலுக்கு பொறந்த பய..”- பக்கீர் பாயிக்கு கோபமாக வந்தது.  

வெளியே சென்று அண்ணாந்து பார்த்து விட்டு மீண்டும் உள்ளே வந்தார்.

“அந்த மாந்தயன், இப்பம் எங்க இருப்பான் வேலு.. அவன போய் கூட்டிட்டு வராயா?”

“இப்பமா... அவன் மருந்த போட்டிட்டு உறங்கிருப்பான்.. நாளைக்கி காலைல தான் பாக்க முடியும்னு..”- வேலு சொல்லி முடிக்கவும் ஹோட்டல் வாசலில் அந்த  கேரளா ரிஜிஸ்ட்ரேசன் வண்டி வந்து நின்றது.

சிறு உதறலுடன் வண்டியை நிறுத்தி, வண்டியின் டிரைவர் மட்டும் இறங்கி பக்கீர் பாயின் கடைக்குள் நுழைந்தான். பக்கீர் பாயை பார்த்ததும்,
சலாம் அலைக்கும் பாய்..- என்றான்.
அலைக்கும் அஸ்.. லாம்...சொல்லுங்கோ – என்றார் பக்கீர் பாய்.

சுத்தமான உருது மொழியில் உரையாட ஆரம்பித்தார்கள்.  வேலு மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தான்.  சில நிமிட உரையாடலுக்குப் பின் அவன் சென்று விட.. பக்கீர் பாய் வேலுவிடம் கூறினார்.

வேலு... மூணு பேரு சாப்பிட வராங்களாம்.. தோசையை கல்லுல ஊத்துடே.. அடுப்புல தீயை குறைச்சு வை...ன்னு சொல்லி முடித்த அந்த கணத்தில் நெட்டையும் சிவப்புமாக இரு வாலிபர்களும், ஒரு பெண்ணும், கடைசியில் டிரைவரும் ஹோடல்லுக்குள் நுழைந்தனர். அழகாக இருந்த அந்த பெண்ணை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் வேலு.  அவர்களும் தங்களுக்குள் உருது மொழியில் பேசிக்கொண்டார்கள்.  சிரித்துக் கொண்டே தோசையை சாப்பிட்டார்கள்.  பக்கீர் பாயும் இடை இடையே ஏதேதோ பேசினார்.  வேலுவுக்கு ஒன்றும் புரியவில்லை.  சாம்பார், சட்னி ஊற்றும் சாக்கில் இரண்டு முறை அப்பெண்ணின் அருகில் சென்றான் வேலு.   பார்க்க கூடாத இடங்களை பார்த்துக்கொண்டே சாம்பாரை ஊற்றினான்.  இருபது முப்பது நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து விட்டு , பக்கீர் பாயுடன் சந்தோசமாக உரையாடி விட்டு, பக்கீர் பாயின் அலைபேசி எண்ணை கேட்டு, ஒரு டைரியில் குறித்து வைத்து கொண்டு, கிளம்பினார்கள்.  சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து விட்டு, பக்கீர் பாய் மீதி கொடுக்க, வேண்டாமென்று மறுத்து விட்டு விடை பெற்று சென்றனர்.  

அவர்கள் போவதையே வெறிக்க பார்த்து விட்டு யோசனையிலிருந்தான் வேலு.  சில நிமிட அமைதிக்குப் பின் பக்கீர்பாயிடம் கேட்டான்.

“யாரு பாய் இவங்க... ரெம்ப சின்ன பிள்ளைலா இருக்காங்க?” வேலுவின் 
மனம் முழுதும் அப்பெண்ணைப் பற்றிய காம கசடுகள்.

பாய்லர் அடுப்பை குறைத்துக்கொண்டே பக்கீர்பாய் சொன்னார்.  “முஸ்லிம் பிள்ளையோ.. படிப்பு விஷயமா கண்யாரிக்கு வந்தாங்களாம்.. இப்ப திருவந்த்ரத்திற்கு போறாங்களாம். நம்ம சாப்பாடு ரெம்ப புடிச்சிருக்காம்.  அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா வரோம்னு போன் நம்பெர வாங்கிட்டு போகுதுவோ.. இன்ஷா அல்லா.. படிச்சு பெரிய ஆட்களா வரட்டும்..”

வேலு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி.. போ.. போ... கடையைச் சாத்து.. உனக்கு நேராகலையா.. கிளம்பு டே..- என்று பக்கீர் பாய் சொல்ல, வேலு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.  தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டுக் கொண்டிருக்க மொத்த இடத்திலும் மயான அமைதி.

பொழுது விடிந்து காலை காட்சிகள் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.  அதிகாலை ஆறு மணிக்கு குளித்து முடித்து , ஈர வேஷ்டியை கொடியில் காய போட்டுக்கொண்டிருக்கும் போதுதான், பிரம்ம நாயகம் பிள்ளையின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்தது.

“பக்கீர் பாயை போலீஸ் பிடிச்சிகிட்டு போயிட்டாம்... அவரு தீவிரவாதியாம்.”- மூச்சிறைக்க வந்து சொல்லிக்கொண்டிருந்தான் ஆசாரி பொன்னையன்.

தீக்கம்பியை மிதித்தவர்போல் ஆடிப்போய் விட்டார் பிரம்ம நாயகம் பிள்ளை.

“என்னவே சொல்லுகேரு... ”

“ஆமா..பிரம்மா.... பக்கீரு கடையில ஒரே கூட்டம்.. நாலு நாலேகாலுக்கு வந்து அவர தூக்கிட்டு போய்டாங்களாம்.  வேலு கடையில இருந்திருக்கான்.  அன்னா.. வாரான் பாரு..”

வெளியே வேலு வந்து கொண்டிருந்தான்.. பிரம்ம நாயகம் பிள்ளை வேகமாக வெளியே வந்து விசாரித்தார்.

“என்னடே ஆச்சு வேலு”

“என்னன்னே தெரியல பாட்டா... அஞ்சரைமணி வாக்குல ஒரு போலீஸ் வேன் வந்து.. நேர போய் பாய்ட்ட “நீதான் பக்கீரா” னு கேட்டாங்க.. பாய்.. பயந்து போய்... ஆமான்னாரு.. நேத்து ராத்திரி கடையில சாப்பிட்ட மூணு பேர பத்தி கேட்டாங்க.. அவங்க போட்டோ கைல வச்சிருந்தானுவோ.. பாய் தெரியும்னு சொன்னதும்.. கொஞ்சம் விசாரிக்கணும்னு தூக்கிட்டு போய்டானுகோ..

பிரம்ம நாயகம் பிள்ளை ஆச்சர்யத்தோடும் ஒரு வித அவஸ்தையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.  எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க ஆசாரி பொன்னையன் வேலுவிடம் கேட்டார்.

“ஓண்ட ஒண்ணும் கேக்கலையாடே..”

“நேத்து வந்தவங்களை பத்தி கேட்டானுவோ.. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னேன்..”- மலங்க மலங்க விழித்து விட்டு பின்பு தயங்கி கூறினான்.

“பாய்கூடத்தான் வேற ஏதோ பாசையில பேசிக்கிட்டான்கன்னு சொன்னேன்.  இதுக்கு முன்னாடி அவங்க இங்க வந்திருக்காங்களான்னு கேட்டாங்க. நான் இல்லைன்னு சொன்னேன்..”

கூட நாலைந்து ஆட்கள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் வாயடைத்து வேலு சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

“எத்ர வருசமா வேலை பாக்கிறேனு கேட்டாங்க... பாய் எப்படி ஆளுன்னு கேட்டாங்க.. நான் நல்லவருன்னு சொன்னேன்.”- எச்சிலை விழுங்கிக் கொண்டான் வேலு.

“வேற யாராவது கடைக்கு வருவாங்களா.. கூட்டம் எதாவது நடக்குமானெல்லாம் கேட்டானுவோ.. அப்புறம்.. அட்ரஸ்..போன் நம்பர வாங்கிட்டு போக சொல்லிடானுகோ...”

சிறிது நேர யோசனைக்குப்பின் உண்மையான கவலையோடு பிரம்மநாயகம்பிள்ளை கேட்டார். “பாயை எங்க கொண்டு போயிருக்காங்கன்னு தெரியுமா..”

தெரியல... வந்த போலீஸ் காரங்க நம்ம ஊரு ஆட்கள் மாறியே இல்லை... வடக்க உள்ளவனுக மாறி இருந்தானுகோ..

எல்லோரும் வாயடைத்து நின்றார்கள்.  யாருக்கும் எதுவும் அவ்வளவாகப் புரிய வில்லை.  எதற்கு பக்கீர் பாயை கூட்டிக் கொண்டு போனார்கள்? அவரு தீவிர வாதியா? அவர எங்க கூட்டிட்டு போயிருக்கிறார்கள்?.....என பல கேள்விகள் எல்லோர் மனதிலும்.

“இன்னைக்குள்ள பேப்பர எடுத்து பாரும் வேய்... எதாவது போட்டிருக்காணான்ணுன்னு பாரும்.. – ஆசாரி பொன்னையன் தான் கூறினார். பிரம்ம நாயகம் பிள்ளைக்கும் அது சரியாகப்பட்டது.

வேகமா வீட்டிற்குள் சென்று பேப்பரை அங்குமிங்கும் புரட்டினார்.   

இரண்டாவது பக்கத்திலேயே அந்த செய்தி இருந்தது.  “களியக்காவிளை அருகே தீவிரவாதிகள் கைது...! நாகர்கோயில் டிசம்பர்: 5, களியக்காவிளை சோதனை சாவடியில் போலிசாரின் வழக்கமான வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான இரு ஆண், ஒரு பெண் உட்பட மூன்றுபேரை போலீசாரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையின் போது அவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகி உள்ளது.   ரகசிய விசாரணையில் கிடைத்த சில தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் மூலம், தமிழ் நாட்டில் அவர்கள் நுழைந்ததன் நோக்கம் மற்றும் அவர்களுக்கு இங்குள்ள தொடர்புகள் என்னென்ன? - என்ற ரீதியில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது”

பிரம்மா நாயகம் பிள்ளை படிக்க படிக்க அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.  எல்லோர் மனதிலும் பல கேள்விகள். கேள்வி பட்ட அனைவருக்கும் அதிர்ச்சி.  காய்ந்த நிலத்தில் விழுந்த மழை நீரை போல், கொஞ்ச நேரத்தில் மொத்த ஊரும் அந்த செய்தியால் நனைந்திருந்தது.

மூன்று நாட்களாக ஊரெங்கும் இதே பேச்சு.  இதற்கிடையே வேலு வீட்டிற்கும் போலீசார் வந்து விசாரித்து விட்டு சென்றிருந்தனர். பக்கீர்பாயைப் பற்றி பலபேர் பழித்தும், சிலபேர் பரிதாபபட்டும் வார்த்தைகளை விதைத்திருந்தனர்.

“நம்ம பாய்..அப்படி பட்டவர் இல்லைடே... அவரு பாவம்லா”

“நல்ல கமுக்கமா இருந்துட்டு எவ்வளவு பெரிய வேலை பாத்திருக்கான் பார்த்தியா”

“அவரு முழியும், நடையும் அப்பமே சரி இல்லடே.. எனக்கு முந்தியே சந்தேகம்”

“அன்னைக்கு ஒரு நாள் கடைக்கு போகும் போது உள்ளி கூடைக்குள்ள “பாம்” மாறி என்னவோ வச்சிட்டு இருந்தாரு.. என்ன பாத்ததும் பம்முனாரு... இப்பம்லா தெரியி... எம்மா...”

“பாய் பாவம் டே.. எவனோ அவரை மாட்டி விட்டிருக்கானுவோ..”

“வேணும்னா பாரு... இன்னும் ரெண்டு மூணு நாளையில... பிரம்மநாயகம் பிள்ளையும் போலீஸ் தூக்கும்.. இவர்தான  ரெம்ப குளோஸ் ப்ரெண்டு”

“பாரின்ல முன்னாடி இருக்கும் போதே அந்த க்ரூப்ல இருந்தாராமமே”

“ஊருக்கெல்லாம் தோசையைச் சுட்டு தந்திட்டு... பண்ணிருக்க வேலைய பார்த்தியா..”
-----------என பல தரப்பட்ட பேச்சுக்கள்.. பிரம்ம நாயகம் பிள்ளைக்கு கொஞ்சம் பயமாகவும், ரெம்ப வருத்தமாகவும் இருந்தது.  நம்ம பக்கீரா இப்படி? என்ற கேள்வி மட்டும் நெஞ்சுக்குள் மீண்டும்... மீண்டும்.. அவரால் நம்ப முடிய வில்லை.

நான்காம் நாள் மதிய வேளையில் வேலு, பிரம்ம நாயகம் பிள்ளையின் வீட்டிற்கு ஓடி வந்தான்..

“பாட்டா.. பாயை விட்டிட்டாங்களாம்.  அவருக்கு மேல குத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்..”

ஒரு வித புளகாங்கித மனநிலையில் சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு பக்கீர்பாயின் கடைக்கு விரைந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.

ஞாயிற்றுகிழமை வெறிச்சோடிக் கிடக்கும் பள்ளிக்கூடத்தை போல் ஆள் அரவமற்று இருந்தது பக்கீர் பாயின் கடை.  கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் கதவை திறந்து உள் சென்றார் பிரம்ம நாயகம் பிள்ளை. முதலறையில் யாருமில்லை.  அடுப்படியை தாண்டி பக்கீர்பாயின் படுக்கை அறைக்கு சென்றார்.  அரைகுறை வெளிச்சத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து, முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் “நமாஸ்” செய்து கொண்டிருந்தார் பக்கீர் பாய்.  ஆறேழு நிமிடங்கள் காத்திருந்த போது வெளியே வந்தார்.  வெளியில் பிரம்ம நாயகம் பிள்ளை இருப்பதை கண்டு, அடுக்களையைக் கடந்து மெதுவாக மேஜை நாற்காலியில் அமர்ந்தார்.

போலீஸ் காரன் அடிக்க,கிடிக்க செய்திருப்பானோ என்று பக்கீர் பாயை கூர்ந்து கவனித்தார் பிரம்மநாயகம் பிள்ளை.  தளர்ந்து போயிருந்தார் பக்கீர் பாய்.  இருவர் முகத்திலும் ஒரு வித தயக்கமும், வெப்ராளமும் நிரம்ப, பக்கத்துத் தோட்டக் கால்வாயில் தண்ணீர் பாயும் சப்தம் மட்டும் முழுஅறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சட்டென்று பிரம்ம நாயகம் பிள்ளைதான் ஆரம்பித்தார்.

“வேலு வரலையா பக்கீரு?”

இல்லை என்று தலை அசைத்து, தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கீர் பாய். 

“கடைய நடத்து டே.. பக்கீரு...சும்மா நடந்தையே நினைச்சிட்டு இருந்தா எப்படி டே...”

நேருக்கு நேராய் பிரம்ம நாயகம் பிள்ளையின் முகத்தைப் பார்த்தார் பக்கீர்பாய்.

“எதை மறக்க சொல்லுக பிரம்மா? ராத்திரியில குண்டு கட்டா தூக்கிட்டு போனாங்களே... அதையா.. அல்லது கேள்வி மேல கேள்வி கேட்டாங்களே...அதையா...?”

“ஏய்...விடு டே... சந்தேகப்பட்டு கூடிட்டு போனானுவோ.. இப்ப ஒண்ணு மில்லைன்னு விட்டாச்சுல்லா... நடந்ததை விடு....”

“முடியலை பிரம்மா...  அங்க சவுதில, யான் மகன்ட்டலாம் போன் போட்டு விசாரிச்சிருகானுவோ...இரண்டு மூணு நாளா எங்க பார்த்தாலும் இதே பேச்சுதலா... டிவி, கம்பியுட்டர்லேலாம் வந்திட்டாமே..”- என்று சொல்லும் போதே மனதளவில் வெதும்பினார் பக்கீர் பாய். பிரம்ம நாயகம் பிள்ளைக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. பின்னர் பக்கீர்பாயிக்கு ஆறுதலாக பேசும் பொருட்டு, கொஞ்சம் கோபமாக கொந்தளித்து பேசினார்..

“அந்த எரப்பாளிகளுக்கு வேற வேலை இல்லடே.... நாளைக்கே... எவளாவது, எவனுக்கு கூடயாவது, போய்ட்டானா.... மொத்த ஊரும் அந்த நியூஸ் பக்கம் போயிரும்...  அத விடு பக்கீரு... பேசாம கொஞ்ச நாளைக்கி உன் மகன் கூட இருக்கப்பாரு...”

“என்னய இங்க விட்டு போக சொல்லுகையா பிரம்மா..?”

“பைத்யாரன் மாறி பேசாத டே... கொஞ்ச நாள் அங்க இங்க போயிட்டு வந்தா... உனக்கு இந்த வெப்ராளமும், குறைச்சலும் கொஞ்சம் தீரும்லா..”

“என்ன இங்க வீட்டு போக சொல்லாத பிரம்மா.... இனி இங்க விட்டு போனா.... நேரா.. படைச்சவன்ட தான்...”—வார்த்தையை சொல்லி முடிக்கும் போதே பக்கீர் பாயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து  குரல் கமுறியது.

நண்பனின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் நிலை குலைந்து போனார் பிரம்மநாயகம் பிள்ளை.  ஆண் முன்னால் ஆண் அழுவதும், ஆண் அழுவதை மற்றொரு ஆண் பார்ப்பதும் கொடுமையிலும் கொடுமை. இருவரும் அக்கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தனர். நிலைமையை சீராக்கும் நோக்கத்தோடு...

“விடு டே பக்கீரு... உன்னைய தீவிரவாதின்னு சொன்னதும் எனக்கு சிரிப்புதான் வந்ததுடே..” லேசாக சிரித்தார் பிரம்மா. பக்கீர் பாயையும் சிரிக்க வைக்க முயற்சித்தார்.

ஏதோ ஒரு வெறுமையுடன் உச்சிக்கூரையை பார்த்துக் கொண்டிருந்தார் பக்கீர் பாய். சற்று நேர அமைதிக்குப் பின் ... கன்ன பரப்பில் கண்ணீர் வடியக் கேட்டார் பக்கீர்பாய்..

“ஒரே ஒரு கேள்விதான் பிரம்மா... நான் இருந்த இதே இடத்துல... நெத்தியில பட்டையோட.. வேற ஒரு ஆளு இருந்திருந்தா... இந்த பயக்கோ இதே மாதிரிதான் பண்ணிருப்பானுகளா..”

வார்த்தையின் வீரியத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார் பிரம்மா.

“சந்தேகம்னு வந்துட்டா எல்லாவனையும் தூக்கிட்டுப் போகத்தான் செய்வானுகோ..” – என்று சொல்லி சமாளிக்க பார்த்தார் பிரம்மா.

“நாங்கன்னா மட்டும் சந்தேகம் கொஞ்சம் கூடுதலா இருக்கும் பார்த்தியா பிரம்மா...”—பக்கீர் பாயின் கண்கள் மீண்டும் கலங்கியது.

கேள்வியின் தீவிரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் நெளிந்தார் பிரம்மா.

“நடந்ததையே நினைக்காத பக்கீரு..  போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதெல்லாம்  இப்ப பேஷனாயிட்டுடே...  ஊர் பணத்தை கொள்ளையடிச்சவன், பொம்பளை பொறுக்கிகள், ஊழல் பேர்வழிகள்னு ...ஆயிரம் பேரு  சிரிச்சிட்டே.. ஜெயிலுக்கு போயிட்டு... மூணு நாளையில சிரிச்சிட்டே, வெளிய வர்ற காலமிது. நீ என்னனா....?”

பக்கீர் பாய் லேசாக உதட்டை பிரித்து சிரித்தார்.

“அவனுகளும் நானும் ஒண்ணா.. பிரம்மா..?”

கொஞ்சம் எரிச்சல் பட்டுக் கொண்டு எழுந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.

“பக்கீரு இப்படி நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா... எதுவும் நடக்காது.  எல்லாத்தையும் மறந்திட்டு... வேலுவ வர சொல்லி..நடக்க வேண்டிய வேலையை பாரு... நாறோயில் வரைக்கும் போயிட்டு சாயங்காலம் வாறேன்”

கடையை விட்டு வெளியே வந்து நாகர்கோயில் பஸ்சில் ஏறினார்.  பக்கீர்பாயை பற்றிய கவலை மனதை ஆக்ரமித்திருந்தது. திட்டுவிளை தர்க்காவை கடக்கும் போது.. பக்கீர் பாயின் கேள்வி மீண்டும் நெஞ்சை உறுத்தியது.  பற்பல எண்ணங்கள் நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க... பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தார்.

வேலையை முடித்துக்கொண்டு கடுக்கரை பஸ் ஏறி ஊர் வந்து இறங்கியதுமே.... வேலு அதிர்ச்சியோடு சொன்னான்.

“கூரையில..... போஸ்ட் தூண் சரிஞ்சு விழுந்து... ஷாக்கடிச்சு..பாய் செத்து போனாரு...பாட்டா...”


பின் மண்டையில் ஆணியடித்ததுபோல் அதிர்ச்சியில் ஆடிப்போனார் பிரம்மநாயகம் பிள்ளை.