திங்கள், 27 ஜூன், 2016

மே 1ம் தேதி , 2011. அதிகாலை மணி 3.12…..

மே 1ம் தேதி , 2011. அதிகாலை மணி 3.12..
நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.. இரவு முழுவதும் மனக்கலக்கத்தில் வெகு நேரமாக தூங்காமல் இருந்திருந்தேன்.  

என்னை சுற்றி பலபேர் சப்தம் எழுப்பிய படி பேசிக் கொண்டிருந்தனர்.  எப்படி தூங்க முடியும் என்னால்? ஒருவாறாக எல்லோரும் தூங்கி போயினர். நாளை நடக்க போவதை நினைத்து ஒரு கலக்கம் மனதிற்குள் உருத்தி கொண்டே இருந்தது.   

எப்போது தூங்கினேன் என்று இப்போதும் நினைவில் இல்லை.

நன்றாக அயர்ந்த தூக்கத்தின் போதுதான் அது நடந்தது. 

கட கடவென காதுக்குள் ஏதோ கரடு முரடாக ஏறுவது போல். அலறி அடித்து எழுந்து தூர விலகி நகர்ந்தேன். தூக்கம் தெளிந்து எழுந்தது, ஒருவித வெறுப்பாக இருந்தது.

வீடெங்கும் மல்லிகை பூவின் மணமும், வெந்நீர் அடுப்பு புகையும் கலந்து, ஒரு வித புளகாங்கித மூச்சு முட்டுதலை ஏற்படுத்தியது.

தூரத்தில் வீட்டு வாசலில் யாரோ இருவர் பேசிக்கொண்டிருந்தது போல் இருந்தது.  அரை குறையாக வார்த்தைகள் காதில் விழுந்தது.

இத புடில .. ஏய் இந்த பக்கம் டே...

நல்ல இருத்தி சேர்த்து கெட்டு டே.....

கயிறை இருக்கு அப்படிதான்... விடாத.... இறுக்கி கட்டு...

லேய்.... லேய்... வெட்டாதல... போதும்.. போதும்...

யேய்.... சத்தம் போடாதீங்கப்பா... மெதுவா பேசுங்க...
----------------- என்பது மாதிரியான வசனங்கள்...!!!

ஒருவிதமாக சமாளித்து எழுந்து, காதுக்குள் நுழைய முயன்றது எது என்பதை கண்டு பிடித்து விட்டேன்.  என்னுடையே தொலைபேசி தான்.  படுக்கும் போது தலை மாட்டில் வைத்திருந்தேன். இப்படிதான் பல நேரங்களில் தொல்லை பேசியாகி,  தான் அதிர்ந்து, என்னையும் அதிர வைத்து விடுகிறது. 

இந்த நேரத்தில் யார் அழைத்திருப்பார்கள்..ஒருவித யோசனையுடே ஆராய்ந்து.. அவசரமாக பார்த்ததில்.... தெரிந்து விட்டது.  இரவு முழுவதும் நான் எதிர்பார்த்த அதே எண்ணிலிருந்து அழைப்பு.  

மனமெங்கும் பதட்டம் தொற்றி கொள்ள ஓடினேன்.  தூக்கத்திலிருந்து யாரோ எழுந்து,  என்னை வித்தியாசமாக பார்த்தார்கள். 

ஓட்டமும் நடையுமாக மொட்டை மாடிக்கு சென்று அதே எண்னை அழைத்தேன்... வாசலில் வாழைமரத்தை கட்டி முடித்திருந்தார்கள்..

ஹலோ...

வழக்கமாக இரண்டு மூன்று நிமிடங்களில் எடுக்கப்படும் அழைப்பு உடனே எடுக்கப்பட்டது..

ஹலோ...

கூப்பிடிருந்தையா?

தூங்கிட்டேங்களா?

இல்ல... இல்ல... உன்னையே நினைச்சு தூங்காமலே இருந்தேன்......------ என்று உலகத் தரம் வாய்ந்த உன்னத பொய்யை சொல்லி, ஆரம்பித்த மண வாழ்க்கை ....

அள்ள அள்ள குறையாத அன்போடும்,

ஆசை ஆசையாய் பெற்றெடுத்த பிள்ளைகளோடும்,

சலிக்க சலிக்க மாறாத சண்டைகளோடும்,

சிரித்து அழுது மகிழ்ந்த கண்ணீரோடும்,

சின்ன சின்ன பொய்களோடும்,

உயிரோடு கலந்த பாசத்தோடும்,

காதலோடும், நேசத்தோடும்,

வெற்றிகரமாக இன்று 5வது ஆண்டில்..



திங்கள், 13 ஜூன், 2016

அப்பாவுக்கு.................

தடித்த மீசையும்
வெடித்த பார்வையும்
அழுக்கு கரங்களாக மட்டுமே
அப்பாவை பலபேருக்கு தெரியும்...

முந்தின வாழ்கையில் குடித்த மதுவும்
பிந்தின வாழ்கையில் போட்ட 
சண்டைகளுமே 
அப்பாவுக்கான முகவரிகள்...

கல்லுக்குள் ஈரம் என்று
கவிஞர்கள் சொல்வது..
மற்றவர்களுக்கு எப்படியோ....
அப்பாவுக்கு மட்டும்
அப்படியே பொருந்தும். ..

அறியாத வயதில் 
அம்மாவை இழந்து 
அப்பா பட்ட கஷ்டம் கேட்டு 
அழுதிருக்கிறேன்....

சின்ன வயசிலேயே  
கடவுள் என்னை
சித்திரவதை  பண்ணிட்டாம்டே....என்று நீ 
வருத்தப்பட்டு தூங்கி போனாய்...
நானோ  அதை   நினைத்து 
தூக்கமின்றி ஏங்கி போனேன்......

நான் படிக்கும்
பாட புத்தகங்களை
இடவலமாக திருப்பி பார்த்து
அத்தனை புத்தகங்களையும்
ஆர்வத்துடன் தொட்டு பார்க்கும்
அறுபத்தி எட்டு வயது   
பள்ளி சிறுவன்  என் அப்பா....

நான் வெகுமானப்பட
அவமானம் பொறுத்தவரே...
உவமானம் ஏதப்பா...
உன் தன்மான உழைப்பிற்கு...

மண்ணையும் மாட்டையும் வைச்சு
என்னையும் வீட்டையும் காத்தவனே.... வெறும்  
பொன்னையும் பொருளையும் வைச்சு 
நான் உன்னைய விலை பேச முடியுமா..

வெறும் காசுக்கு ஆசைப்பட்டு
வெளி நாட்டுக்கு போகையில...
மக அழுக  மனைவி அழுக
தாய் அழுக தங்கை அழுக
தந்தை அழல்லையே...

ஏத்தி விடும் நேரம் வர...
என் கூடவே வந்து
அந்த கருப்பு புத்தகத்தை மட்டும் 
கவனமா பாத்துக்கோ மக்கான்னு  
பாஸ்போர்ட பார்த்து நீ
பரிதவிச்ச வேளையீல
பார்த்திட்டேன் பா...
பார்த்திட்டேன்.....
உனக்கும் அழ தெரியும்கிரத....

மண்ணையும் மம்பட்டியையும்
வச்சிக்கிட்டு
எனக்கு  
கல்வியும் கம்புயுட்டரும் 
கொடுத்தவனே...
உன் கால் கழுவி குடிச்சா கூட
கைம்மாறு தீராதப்பா.....

செவ்வாய், 7 ஜூன், 2016

இழப்பு

சட்டென்று அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
சார்..! சற்று அழுத்தமாக உரக்க கூப்பிட்டேன்..
யாருப்போ.......?
நெற்றி வகிட்டில் யோசிப்பின் அடையாளமாய் மூன்று, நான்கு வரிகள் தோன்றின.  நன்கு முற்றி காய்ந்த பேரித்தம் பழம் போல இருந்தார் என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்.
சார் நான் உங்கள்ட படிச்சேன்ம்லா.....
புருவம் உயர்த்தி கைகளால் என் தோளை தொட்டு சாய்த்து.....
அப்படியா..? எனக்கு தெரியலைப்போ.....! எப்ப படிச்சே..? எந்த வருஷம்?
அந்த நாட்களில் எல்லாம் அடி கொடுப்பதற்காக மட்டும் அவர் கைகள் என் மேல் பட்டதாக ஞாபகம்..! முதல் முறையாக ஒரு குழந்தையை அரவணைப்பது போல்.....
1988 – ல சார்..! என் பேரு சிவா...!
சிவாவா...  எம்பதேட்டுல நான் தெர்ச்னகோப்புல இருந்தேன்.. சிவா வா..?
அவருக்கு என்னை அடையாளம் தெரிய வில்லை...
சார்... நீங்க என் கைல அடிச்சு, ரத்தம் வந்து ஆசுத்ரிக்கு கூடிட்டு போனீங்களே..!  சிவந்த பெருமாளு சார்...!
ஏய்.. சிவந்த பெருமாளு... முழு பேரே சொல்லுடே.. சிவானு சொன்னா எனக்கெப்படி தெரியும்..!
முகமெங்கும் பிரகாசம் மின்ன பேசினார்....
என்னப்போ செய்ய இப்ப? நல்லா இருக்கியா? கல்யாணம் ஆயிட்டா..? அப்பெல்லாம் உனக்கு மீசை கிடையாது பார்த்தியா.. அதான் உன்னைய அடையாளம் தெரியலை...
சாக்லேட் கையில் கிடைத்த குழந்தையை போல் சந்தோசமாக பேசினார்.. இவன் என் மாணவன்... என்ற தோரணை அல்லது அதிகாரம் அவர் உடல், பேச்சு எல்லாவற்றிலும் பிரதி பலித்தது.
என்னை பற்றி, வேலை பற்றி, குடும்பத்தை பற்றி,.....எல்லாவற்றையும் பகிர்ந்தபோது கவனமாக கேட்டு கொண்டிருந்தார். என்னுடன் படித்த சில நண்பர்களை விசாரித்தார். அத்தனை பேரின் பெயரையும் மறக்காமல் வைத்திருந்தார்..!
அவரை பற்றி, அவர் குடும்பம் பற்றி விசாரித்தேன். ஏதோ ஒரு வெறுமை அல்லது ஒரு சோகம் அவர் பேச்சில் வெளிப்படுவதை உணர்ந்தேன்.. அவர் உணர்ச்சிவசப்படுவதாக தோன்றியதால், மேற்கொண்டு அதை பற்றி பேசாமல் வேறு திசையில் பேச்சை மாற்றினேன்.  பணிநிறைவு பெற்று பல வருடங்கள் ஆன போதிலும், கைகளில் சாக்பீஸ் பிடித்ததால் ஏற்பட்ட கறைவடு அப்படியே இருந்தது...
சரிப்போ.. நான் கிளம்புகேன்..  உன்ன பார்த்ததுல ரெம்ப சந்தோசம்போ... கண்ணாடியை சரி செய்து விட்டு நடக்க எத்தனித்தார்.
சரியென்று சொல்லி, கையை பிடித்து “ சார் உங்களுக்கு எதாவது செய்யணும் சார்...! என்றேன்..
சிரித்தார்... அவர் கண்களை உற்று நோக்கினேன். சிறிது கண்ணீர் பெருகுவது போல் தோன்றியது..
நீ எனக்கொண்ணும் செய்யாண்டாம்போ... உன் அம்மா அப்பாவ நல்லா பாரு.. உன் பிள்ளைல நல்ல படிக்க வை.. கவேர்மென்ட் ஸ்கூலுல படிக்க வைக்கணும் கேட்டயா..  வேற ஒன்னும் வேண்டாம்.. வரட்டா.. நல்லா இருப்போ.... – என்று சொல்லி என் கை விடுத்து, நடந்து போய் விட்டார். அவர் சோகமாக இருப்பதாக தோன்றியது. காரணம் தான் தெரியவில்லை.  அதைக் கேட்க தைரியமும் வரவில்லை.  பின்னாலிருந்து பார்த்தபோது,  அன்று பார்த்த அதே வேகமான நடை.  முன்னாலிருந்து பார்த்தால் ஒருவேளை அவர் கண்களில், சில கண்ணீர் துளிகள் இருந்திருக்கலாம்.
பணி நிமித்தமாக ஓரிரு நாளில் நான் வேலை செய்யும் ஊருக்கு வந்து விட்டேன். பின்னாளில் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சொன்னார்கள்.
முந்தாநாளு  .....................சார் செத்து போனாரு மக்கா.  நாலஞ்சு நாளா சோம்மில்லாம இருந்தாரு. ரெம்ப கஷ்ட பட்டிட்டு கிடந்தாரு.  பின்ன ஆசுத்ரிக்கு கொண்டு போகும் போதே சீவன் போயிருக்கு. என்னா கூட்டம் நேத்தைக்கு.  எல்லாம் அவர்ட படிச்ச பிள்ளைலாம். நல்ல மனுசன் போய் சேர்ந்திட்டாரு. 
கொஞ்சம் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.  சிறிதாய் வருத்த பட்டு மௌனமாக இருந்தேன்.
என்னைக்கு நம்ம ஊரு கவேர்மென்ட் ஸ்கூல மூட போராங்கன்னு சொன்னாங்களோ.. அன்னைக்கே மனுஷன் உடைஞ்சிட்டார்.  பிள்ளையோ இல்லேன்னா கவர்மென்ட் மூடத்தானே செய்யும். சாயங்காலமானா ஸ்கூல் வாசல்ல உக்காந்துதான் பேசிட்டு இருப்பாரு. இப்பம் அவரும் போய் சேர்ந்திட்டாரு.  நல்ல சாக்காலம் கேட்டயா... – அம்மா பேசிக்கொண்டிருந்தாள்.
எப்போது அனுபவித்திராத ஒரு வித அசாத்திய உணர்வு நிலையில் கேட்டு கொண்டிருந்தேன். போனை வைத்து சற்று நேரம் அமைதியாய் இருந்தேன்.  ஆழமான ஒரு பெருமூச்சை உடம்பு விரும்பியதால், பெருமூச்சு விட்டேன்.  ஒரு கன்னப்பரப்பில் மட்டும் கண்ணீர் துளியின் கோடு கீழ்நோக்கி பாய, கொஞ்சமாக அழுதிருந்தேன்.