வியாழன், 5 செப்டம்பர், 2019

சடலச்சாந்தி

அந்த இடம் முழுதும் ஒரு “அமானுஷ்ய” தன்மை இருந்தது. காற்றில் அரளிப் பூக்களின் மணமும், சாம்பிராணி மணமும் வியாபித்திருந்தது. அடிக்கடிக் கேட்கும் சங்கு மற்றும் மணிகளின் ஒலியைத் தவிரப் பக்தர்கள் கமுக்கமாகப் பேசிக்கொள்ளும் ஹாஸ்ய பாஷையும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்ததது.
சிறிய அறைகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த நெய் விளக்குகள் சொற்ப வெளிச்சத்தையும், சீடர்கள் நடக்கும் போது பெரிய நிழல்களையும் உண்டாக்கியது. சுவரிலிருந்த “காளிதேவி உக்கிரமாக வதம் செய்யும் அரக்கர்களின் படங்கள்” தவிர்க்க முடியாத ஒரு பயத்தை உண்டாக்கியது. அமர்ந்திருக்கும் எல்லோர் முகத்திலும் கேள்விக் குறிகளும், அதற்கு “அம்மணச்சாமி” என்ன பதில் சொல்லும் என்ற பேராவலும், கலக்கமும் குடிக் கொண்டிருந்தது.
சாமியிடம் குறி கேட்க வந்திருந்த மிங்கூர் ஜமீன் சபாபதி கலக்கத்திலிருந்தார். முகமெங்கும் சோகத்தின் ரேகைப் படர்ந்திருந்தது. ஐம்பத்தைந்து வயது உடம்பு தொப்பையாலும், அணிந்திருந்த கதர் ஜிப்பாவினாலும் சற்றுப் பெரிதாகத் தெரிந்தது. நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தது. ஆடம்பர வாழ்க்கை உடலுக்கு வனப்பை கொடுத்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையால், கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கத்தைப் போல் வாடி, வதந்கியிருந்தார். தூக்கம் இல்லாத கண்கள் தீக்கங்காய்ச் சிவந்திருந்தது. தலையைக் குனிந்து, நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தார். கூட வந்திருந்த கணக்குபிள்ளை செல்வரெத்தினம் மட்டும் சீடர்களிடம் அம்மணச்சாமியின் வருகைப் பற்றிக் பேசிக்கொண்டிருந்தார். ஒரு சீடன் முன்பக்கமாய்க் குனிந்து பௌயமாகப் பதில் சொல்லிகொண்டிருந்தான்.
“சாமி எப்ப வரும்?”
“வர நேரம் தான்.. இன்னைக்கு அமாவாசைனால குளிச்சிட்டுப் பைரவப் பூஜை முடிச்சிட்டுதான் சாமி வரும்.”
“வந்ததும் உள்ள போயிரணும்.. விஷயம் வெளிய கசியப்பிடாது”.
“சரிதான்.... ஆண்டைக்குக் குடிக்க எதாவது?”
வேண்டுமா.... என்பதுபோல் செல்வரெத்தினம் ஜமீன் பக்கம் திரும்ப, தலையை நிமிர்த்தி, வேண்டாமெனச் சைகை செய்தார் ஜமீந்தார். சீடர்கள் போனதும் தவிர்க்க இயலாத ஒரு அசாதாரண மௌனம் அந்த இடமெங்கும் நிரம்பி வழிந்தது.
அம்மணச்சாமியார் வந்த பாடில்லை. அனைவரின் மனங்களும் அவர் வருவதையே ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தன. கட்டைப் பிரம்மசாரியான அம்மணச் சாமியார் ஆயுள் முழுதையும் காளிவழிபாட்டிற்கு அர்ப்பணித்தவர். கருத்த உடம்பும், நிறைத்த முடியும், வெளுத்த சந்தனமும், தியான நிலையுமாய் உலாவுபவர்.
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி – என்ற குதம்பைச் சித்தர் வழி வாழ்பவர்.
ஆடைக்களைந்தவர். நிர்வாணமென்பது நிர்கதியின் அந்தமென்பவர். முற்றும் துறந்தவறேன்றும், முன்பின் நிலைகள் அறிந்தவறென்றும் அறியப்படுபவர். அம்மணச்சாமியாரின் ஆலோசனைகள் அங்குள்ளவர்களுக்கு, ஆக்கப் பூர்வமான அனுகூலங்களைத் தந்ததால் அல்லது அவ்வாறு தோன்றியதால் அவரை நம்புபவர்களுக்கு அவர்தான் ஆபத்பாண்டவன், அனாத இரட்சகன் எல்லாமே. வாக்குச் சித்தத்தினால் சில பேருக்குச் சாமியாராகவும், பல பேருக்குக் கடவுளாகவும் அருள் பாலித்துக்கொண்டிருந்தார் அம்மணச் சாமியார்.
மிங்கூர் ஜமீனுக்கு அம்மணசாமியின் மீது அபார நம்பிக்கை உண்டு. ஜமீனின் நல்லது கெட்டது தொடங்கி, ஏனைய அனைத்துக் காரியங்களுக்கும் நாள் குறிப்பது அம்மணச்சாமிதான். ஜமீன்குடும்பத் திருமணக் காரியங்கள், குலதெய்வ வழிபாடுகள், தானதர்ம காரியங்கள் முதற்கொண்டு, அடுத்த வாரிசு நியமிப்பது வரையிலான அத்தனை விசயங்களிலும் அம்மணச்சாமியின் தலையீடு இருக்கும். அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை அம்மணச்சாமி மீது வைத்திருந்தார் மிங்கூர் ஜமீன்.
ஜமீனின் நலனுக்காக, ஆயுள் அதிகரிக்கும் பொருட்டு, அரண்மனையிலிருக்கும் இளம் கன்னியை மணம் முடிப்பாய் – என அம்மணச்சாமி ஆலோசனைக் கூற, கழிந்த ஆண்டுதான் பதினாலுவயது பத்மாவதியை நான்காவதாகத் திருமணம் செய்திருந்தார் மிங்கூர் ஜமீன். பத்மாவதி இப்போது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறாள். அந்தத் திருமணத்திலிருந்து தொடங்கியதுதான், ஜமீன் இளவரசி மூத்த மகள் செந்தேவி நாச்சியாருக்கும், தந்தையார் ஜமீன்தார் சபாபதிக்கும் நடந்து கொண்டிருக்கும் தந்தை-மகள் பிரச்சனை.
உடனிருந்து விளையாடிய உற்றத் தோழியை, பெற்ற தந்தையே திருமணம் செய்து கொண்டால், யாருக்குத்தான் பிடிக்கும். பத்மா.. பத்மாவெனப் பாசத்தோடு அழைத்த சிநேகிதியை, “சித்தி” என்றழைக்கச் சிறு மனதிற்கு முடிய வில்லை. தோழிக்கு ஆதரவாய் தந்தையை எதிர்த்தாள். எதிர்த்தே மடுத்தாள் செந்தேவி. என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். அழுதாள்.. அடம் பிடித்தாள்.. ஆண்டவனிடம் முறையிட்டு மண்டியிட்டாள். பள்ளித்தோழியை ஜமீன் அரண்மனைக்குக் கூட்டி வந்ததை நினைத்துக் குற்றவுணர்வு கொண்டாள். ஏழையான பத்மாவதியின் பெற்றோர்கள், மனதிற்குள் வருத்தம் இருந்தாலும், பெரிதாக எதிர்க்கவில்லை. அல்லது அவர்களால் எதிர்க்க முடியவில்லை. அதிகாரத் தோரணைகளுக்கு முன்பு, அந்நாடம்காட்சிகள் என்ன செய்ய முடியும். செந்தேவி நாச்சியாரின் ஏகோபித்த எதிர்ப்பையும் மீறி, அம்மணச்சாமியார் குறித்த நாளில், சுற்றம் சூழ, பெருநரிக்குச் சிற்றெரும்புடன் திருமணம் முடிந்தது.
அந்நாளிலிருந்து ஒருவித அசாதார நிலைக்குச் சென்றாள் செந்தேவி நாச்சியார். யாருடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை. அலங்காரம் செய்து கொள்வதில்லை. வழக்கமான விளையாட்டுக்களில்லை. அறையை விட்டு வெளியே வருவதில்லை. எப்போது சாப்பிடுகிறாள்? எப்போது தூங்குகிறாள்? யாருக்கும்....எதுவுமே தெரிவதில்லை. அறைப்பணிப்பெண் ஆருத்ரா மட்டும் இளவரசியின் அருகிருந்து அத்தனையும் கவனித்துக் கொள்கிறாள். சில நாட்களில் சரியாகிவிடுவாளென ஜமீந்தாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்களாகி, வாரங்களாகி, மாதங்களாகி, ஒன்றரை வருடங்கள் முடியப் போகிறது. மண்ணுக்குள் புதைத்து வைத்த “கருங்கல்லை” போல், மட்காமல், மாறாமல் அப்படியே இருந்தாள் செந்தேவி நாச்சியார்.
அருமை மகளைச் சமாதானம் செய்ய ஜமீந்தார், பலவழிகளில் முயன்றும் முடியவில்லை. சினம் கொண்ட நாகமாய்ச் சீறிக்கொண்டேயிருந்தாள் செந்தேவி நாச்சியார். “மனம்” ஒரு வித்தியாசமான எந்திரம். மனித உடம்பால் செய்ய முடிந்ததெல்லாம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் மனித மனத்தால் செய்ய முடிந்ததை, முடியாததை வரையறுக்க முடியுமோ? எல்லையில்லா எண்ண ஆற்றல் கொண்டது “மனம்”. பழுதுப்பட்ட மனத்தைச் செம்மைப்படுத்துவது சிரமம். அதுவும் உணர்வுகளால் துயருற்ற பெண் மனதை சாந்தப்படுத்துவதென்பது, “கடந்தைகூட்டு”-க்குள் சென்று, கைத்தட்டுவதற்குச் சமமாகும். எந்தச் சமரசத்திற்கும் செவி சாய்க்காமல் செவிட்டு கற்சிலையாயிருந்தாள் செந்தேவி நாச்சியார்.
மகளின் பிடிவாதத்தால் மனம் வெதும்பியிருந்த மிங்கூர் ஜமீனுக்கு, அந்த முன்னிரவில் வந்த செய்தி, நெஞ்சை பிளந்து, தீக்கங்கை கொட்டியது போலிருந்தது.
இளவரசியின் பணிப்பெண் ஆருத்ரா தான் “அந்தச்செய்தியைச்” சொன்னாள்.
ஆம்...
அவர் எதை நினைத்து அனுதினமும் பயந்துக் கொண்டிருந்தாரோ?
அவர் எது நடக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டிருந்தாரோ?
அதுவே நடந்து விட்டது.
ஜென்ம விமோசனம் அடைய முடியா “பெரும்சாபம்” நிகழ்ந்திருந்தது.
செந்தேவி நாச்சியார் விஷமருந்தி, தற்கொலைச் செய்திருந்தார்.
அணு அணுவாய்ச் சிதறியிருந்தார் மிங்கூர் ஜமீன். எப்படி நடந்திருக்கும் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை. ஓடிச்சென்று மகளின் சடலத்தைப் பார்த்துத் துடிதுடித்துப் போனார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடம்பெங்கும் பதற்றம் தொற்றிக்கொள்ள, அரச வாரிசுகள் கன்னியாய் சாவது ஜமீனின் அழிவிற்கே காரணமாகுமென அம்மணச்சாமி கூறியது நினைவுக்கு வந்தது. ஒரு கணம் சிந்தித்தார். மரணச்செய்தியை ரகசியமாக்க முடிவு செய்தார்.
அம்மணச்சாமியின் ஆலோசனை வரும் வரை இறந்த செய்தி யாரும் அறியக்கூடாதென்று ஆருத்ராவுக்கு ஆணையிட்டார். காற்றென விரைந்து, இப்போது கணக்குபிள்ளை செல்வரெத்தினதுடன் அம்மணச்சாமிக்காகக் காத்திருக்................கிறார்.
….
சட்டென்று வந்த மணியோசை எல்லோர் உடம்பிலும் ஒரு அதிர்வை கொடுக்கத்தான் செய்தது. அதைத் தொடர்ந்து காற்றில் புதுச் சாம்பிராணியின் மணம். பைரவப் பூஜை முடிந்ததற்கான அறிகுறி.
சிறிது நேரத்திற்கெல்லாம் அம்மணச்சாமி வந்து கொண்டிருந்தார். மயிர் மண்டிய தலையின் நெற்றியில், பால் வெள்ளையில் திருநீற்றுத் தீட்டல். அதன் மத்தியில் பைரவரின் காலடியிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தச் சிவப்பு நிற, வட்ட குங்குமப் போட்டு. வியர்வையில் நனைந்து அது, அரக்கு கலருக்கு மாறிக் கொண்டிருந்தது. அம்மணமாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல், உடம்பெங்கும் சந்தனம், களபம், திருநீறு, மஞ்சனைப் பூச்சல்கள். வேகமாக நடந்து, காளிதேவியின் சொரூப சிலையிருக்கும், பூஜை அறைக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் மணியோசை, சாம்பிராணி, கற்பூரவாசனைகள்.
பூஜை முடிந்ததைக் குறிப்பாலுணர்ந்த ஜமீனும், கணக்கு பிள்ளையும், எழுந்திரிக்க, சிடனோருவன் வந்து, உள்ளே வருமாறு சைகை செய்தான்.
ஜமீனைக் கண்ட அம்மணச்சாமி இலேசாகச் சிநேகப் புன்னகைப் பூத்தார்.
ஜமீன் சிரிக்காமல் அழும் நிலையிலிருந்தார். அம்மணச்சாமி பேச ஆரம்பித்தார்.
“என்ன சபாபதி.. இளவரசி கடந்து விட்டாளா?”
பொட்டிப் பொடிந்து கரைந்து விட்டார் ஜமீன் சபாபதி. அழுகையின் விளும்பல்கள் அறையெங்கும் எதிரொலித்தது. சிறிது நேர சமாதானத்திற்குப் பின் அம்மணச்சாமி மீண்டும் பேசினார்.
“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே உன்பாதஞ் சேரேனோ..”
---- என்று பாடி, பின்பு பேசினார்.
“சபாபதி..... பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உலகின் நீயதி. செந்தேவி என்பவள் பிறந்தாள்... இறந்தாள்.. அவ்வளவே. அவள் கன்னியாய் இறந்த கலக்கம் மட்டுமே என்னுள்.” – என்றார்.
கண்கள் முழுதும் நீர்க்கோர்க்க சபாபதி கேட்டார்.
“மிங்கூர் ஜமீன் என் இன, ஜாதி மக்களுக்காவே நான் வாழ்கிறேன். அவர்கள் நலனே எனக்கு முக்கியம். மக்களைப் புரிந்து கொண்ட என்னால், என் மகளைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான் சாமி...”
“யாரை... யாரால்தான் புரிந்து கொள்ள முடியும். புரிதல் என்பது உன்னால் உனக்குள்ளே செய்யப் படுவது. உன்னை நீ முதலில் புரிந்து கொள்” – என்றார் அம்மணச்சாமி.
சிறிதுநேர இடைவெளிக்குப் பின் கலக்கத்தோடும், கண்ணீரோடும் பேசினார் சபாபதி..
“அரச வாரிசுகள் கன்னியாய் சாவது ஜமீனின் அழிவிற்கு வழி வகுக்குமென ஒரு முறை கூறினீர்களே சாமி..”
“...அந்த யோசனைதான் எனக்கும்.. கன்னியாய்.. பரிசுத்தமாய் வீழ்ந்தவள், கண்டிப்பாக மீள் வருவாள். அவள் கன்னித்தன்மை அவளுக்கு அசாதாரண சக்திகளை வாரி வழங்கும். கட்டுப்படுத்த முடியா காட்டாற்று.... பேயாய் அவள் தாக்குவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு வருடமாய் நெஞ்சமெங்கும் வெம்பி, விசும்பி.....இன்று இறந்திருக்கிறாள் செந்தேவி நாச்சியார். எனவே கொடும் பிசாசாய் துர்சக்தியுடன் மீண்டும் வருவாள்... கண்டிப்பாக.. மொத்த எதிர்வினையும், எதிர்கொள்ளத் தயாராகு சபாபதி.. – அம்மணச்சாமி ஆக்ரோசமாகப் பேசினார்.
சோகம் மறந்து, துக்கம் தொண்டையை அடைக்க, பயத்தில் அலறினார் ஜமீன் சபாபதி.
“சாமி அப்படிச் சொல்லாதீங்க.... ஏதாவது பண்ணுங்க”
தீவிர யோசனையிலிருந்தார் அம்மணச்சாமி.
துக்கமும். பயமும் சரிவிகிதத்தில் கலந்து மண்டையைப் பிழிய, கொசு பிடிக்கக் காத்திருக்கும் பல்லியைப் போல் அசையாமல், அம்மணச்சாமியின் பதிலுக்குக் காத்திருந்தார் மிங்கூர் ஜமீன்.
இரு நிமிட இடைவெளியில் சட்டென்று பேசினார் அம்மணசாமியார்.
“ஒரு வழி இருக்கிறது.. அதற்கு நீ ஒத்துக்கொள்வாயா?”
“எதுனாலும் செய்றேன் சாமி... சொல்லுங்கோ..”
“சடலச் சாந்தி”
அப்ப்டினா? – சபாபதியின் குரல் தழுதழுத்தது.
அம்மணச்சாமியார் அமைதியாக விவரித்தார்.
“சாந்தி முகூர்த்தம்” உயிருள்ள உடம்பிற்கானது. “சடலச்சாந்தி” உயிரில்லா உடம்பிற்கானது. பஞ்சபூதங்களான இந்த உடம்பிற்குத் தேவை மற்றொரு உடம்பு. ஆகோஷமாய், ஆர்பரிப்புடன் இவ்வுலகிற்கு வரும் உடலானது, மற்றொரு இணையோடு சேர, பிறந்தது முதல் துடித்துக்கொண்டே இருக்கிறது. அந்தத்துடிப்பே இந்த உலகத்தை இயக்குகிறது. அடுத்தடுத்து நகர்த்துகிறது.
சராசரியாய் நாம் இதற்குப் பல பெயர்கள் வைத்திருக்கிறோம். காதல், காமம், மோகம், இன்பமெனப் பல பெயர்கள். இணைச்சேரத் துடிக்கும் உடலுக்கு, மற்றொரு துடிக்கும் உடல் கிடைக்கும் போது, ஆக்ரோஷமாய் இணைந்து சுக்கிலமும், சுரோணிதமும், கலந்து ஜீவலிங்க சொரூப நிலையில் “சாந்தி” கொள்கிறது. இதைதான் நாம் “சாந்தி முஹுர்த்தம்” என்கிறோம்.
இவ்வாறு சாந்தி பெறாத, உடல் இறக்கும் போது, அத்தனை துடிப்பையும், தவிப்பையும் துர்சக்தியாக ஆத்மாவிற்கு வழங்குகிறது. அந்த ஆத்மா இறைவனடி சேராமல், கொடும்பேயாக, அதற்குக் காரணமானவர்களைத் துரத்துகிறது. செந்தேவிநாச்சியாரின் நிலையும் இந்நிலைதான். எனவே இந்நிலையிலுள்ள உடல்களை “சாந்தி” செய்யும் பொருட்டு யாரும் அறியா வண்ணம் “சடலச்சாந்தி” செய்வதுண்டு. அதாவது ஆண்மை மிக்க ஒரு இளம் வாலிபனைக் கொண்டு, இறந்த பெண் உடலைப் புணரச் செய்வது. அதுவும் இவன் விந்துச்சுக்கிலம் அவள் யோனித்தூறை நனைக்கும் வரை. இவ்வாறு இறந்த உடலின் கன்னித் தன்மை மாறும் போது, உடல் சாந்தி கொள்ளும், சக்தி குறையும், உயிரும் இறைவனடி இணையும் என்பது நம்பிக்கை.
அத்தனையும் கேட்டு ஆடிப்போய் விட்டார் மிங்கூர் ஜமீன். அவர் உடம்பெங்கும் அழுகையும் ஆச்சர்யமும் பயமும் ஒருங்கே கொப்பளித்தன. உதடு அனிச்சையாக மெதுவாக உளறியது......“சடலச்சாந்தி”..
அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை மிங்கூர் ஜமீன். பின் மண்டையில் ஆணியடித்தது போல் அசையாமல் இருந்தார்.
“சபாபதி... இம் மாதிரியான சூழ்நிலைகளில் இது வழி வழியாக, ரகசியமாக நடக்கும் பழக்கம் தான். வெளிக்கு வெளித் தெரியாமல், இறந்த உடலும், உயிரும் மோட்சமடைய நடக்கும் சடங்கு... அவ்வளவே. யோசிப்பதற்கு நேரம் இல்லை.. உடல் இறந்த பதினெட்டு நாழிகைக்குள் நடத்தப் படவேண்டிய சடங்கு இது” – அவசரமாகப் பேசிக்கொண்டே காளி தேவியின் காலடியிலிருந்து ஒரு கைப்பிடிக் குங்குமத்தை எடுத்து ஜமீனிடம் கொடுத்தார் அம்மணச்சாமி.
“செந்தேவியின் உடம்பு முழுதும் இந்தக் குங்குமத்தைத் தேய்த்துச் சாந்திச்சடங்கை நடத்து. பின்பு சந்தனக் கட்டைகளை வைத்து உடம்பை எரித்து விடு. அரண்மனை தீ விபத்தில் செந்தேவி இறந்து விட்டதாய் ஊராரை நம்ப வைத்து விடு. ஜமீனின் நலனுக்காக, உன் நலனுக்காக, உன் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.. வேகமாய்ச் செய்து முடி” -எனக் கட்டளையிட்டார் அம்மணச்சாமியார்.
நடைப்பிணமாய் எழுந்து இயங்க ஆரம்பித்தார் சபாபதி. பெற்ற மகளை நினைத்துப் பெருந் துயரம் கொண்டார். ஆளும் அதிகாரவெறியும், ஜமீன் நலனும் அவர் கண் முன்னே தெரிந்தது. சாமி சொல்வதுபோலவே செய்து விடக் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினதிற்கு உத்தரவிட்டார்.
இரவோடு இரவாகப் பம்பரமாய்ப் பணிச்செய்தார் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம். நம்பத்தகுந்த ஜமீன் விசுவாசிகளைத் இருவரைத் தவிர விஷயம் வெளியே யாருக்கும் கசியவில்லை. செந்தேவி நாச்சியாரின் உடலைத் தண்ணீரால் கழுவி, பூக்களால் அலங்கரித்து, உடம்பெங்கும் குங்குமம் பூசப்பட்டது. அவர் கட்டிலுக்குக் கீழே சந்தன மரக்கட்டைகள் அடுக்கப்பட்டது. எரிவதற்கு வசதியாகப் பனங்கற்கண்டு கலந்த எரிஎண்ணெய் தயார் நிலையிலிருந்தது. அந்த அறையிலிருந்து மற்ற அறைக்கு “தீ” பரவாமலிருக்கத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாம் தயார்..
ஆனால் புணரும் ஆண் மகனுக்கு என்ன செய்ய?..
வா.. வந்து செத்த பிரேதத்தைப் புணர்ந்து விட்டு போ... என்று யாரைக் கூப்பிட?
கணக்குப்பிள்ளை யோசித்தார். யாரையல்லோமோ நினைத்துப் பார்த்தார். இருபதுவயது ஆண்மை மிக்க ஆடவன். அதுவும் பிணத்தைப் புணரும் மனஉறுதி கொண்டவனாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, இதுப்பற்றி வெளியே சொல்லாதவனாக இருக்க வேண்டும். பல்நிலைகளிலும் யோசித்துக் கடைசியில் ஒருவனைக் கண்டுப்பிடித்தார் செல்வ ரெத்தினம்.
ராயப்பன்.
குதிரை லாயத்தில் வேலைப் பார்ப்பவன். சுட்டுக் கொன்றாலும் ஏனென்று கேட்க ஆளில்லாதவன். குதிரையின் “கொள்”ளை தின்ற குற்றத்திற்காகக் கணக்குப்பிள்ளையால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவன். “கொள்”ளை தின்றதலோ என்னவோ, திகுதிகுவென்ற ஆஜானுபாகுவான உடம்பிற்குச் சொந்தக்காரன். கிறுக்கனில்லை. ஆனால் புத்திக்குறைந்தவன். என் கடன் “குதிரைக்கு லாடம் அடிப்பதும், சாப்பிட்டு தூங்குவதுமே” - என வாழ்பவன். அரை உறக்கத்திலிருந்தவனை எழுப்பிக், காரியத்தைக் கூறிக் கூட்டி வந்திருந்தார் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம்.
ஜமீன் சபாபதியின் முன்னால் பௌயமாக நின்று கொண்டிருந்தான் ராயப்பன். அவரை இத்துணை அருகிலிருந்து பார்ப்பது இதுதான் முதல்முறை. நாப்பந்தைந்து டிகிரிக்கு முதுகு வளைந்து நின்று கொண்டிருந்தது. கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம்தான் பேசினார்.
“ராயப்பா.. சொன்னது ஞாபகம் இருக்குல்லா...”
“ஆமாஞ்சாமி...”
“போனதும் “வேலை”யை முடிச்சிட்டு பட்டுன்னு வந்திரணும்”
“சரிங்க சாமி...”
“முழுசா முடிச்சிட்டு வரணும்..அரைகுறையா வந்திடப்பிடாது...”
“ஆகட்டும் சாமி..”
“ஏமாத்திட பிடாது... அங்க உடம்புல உள்ள மொத்த குங்குமமும்.. இங்க.. உன் உடம்புக்கு வந்திருக்கணும்...”
“செஞ்சிரலாம் சாமி....”
“விஷயம் வெளிய தெரிஞ்சா.... தெரியுமுல்லா”
“அய்யோ... கழுத்தருத்தாலும்.. யார்ட்டையும் சொல்ல மாட்டேன் சாமி...”
ஜமீன் சபாபதியின் கண்களில் கண்ணீர் பனித்தது. அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம் கண்ணசைக்க, ராயப்பன் செந்தேவி நாச்சியாரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம், ஜமீனின் கலங்கிய மனநிலைமையை உணர்ந்தவராய்,
“ஐயா... இத நினைச்சு வருதப்படப்பிடாது.. நாம....பிள்ள நல்லதுக்குத்தான் செய்யோம்... நாளைக்குப் பேய், பிசாசுன்னா.. நமக்குத்தான் கஷ்டம்.. ஏற்கனவே உசிரு போயாச்சு... உடம்பும் சாந்தியடையட்டுமே... ஆண்டை எல்லாத்தையும் பொறுத்துக்கணும்...”
சற்று நேரம் அமைதியாக இருந்த ஜமீன் சபாபதி, ஏதோ ஒரு யோசனையில் மெதுவாகக் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினத்திடம் கேட்டார்.
வே.. கணக்கு... இவன் என்ன சாதியாக்கும்???
.....................................
கதவைத் திறந்து உள்ளே வந்த ராயப்பனுக்குச் சிறிது சிறிதாய் பயம் வர ஆரம்பித்தது. சற்றுக் கற்பனைச் செய்யுங்கள். ஆடம்பர மாளிகையின் அழகான பெரிய அறை. அறையெங்கும் உச்சிக்குளிரும் இனிய மணம். அதன் மையத்தில் பூக்களாலும் சந்தனக் கட்டையாலும் அலங்கரிக்கப்பட்ட கட்டில். அதனுள் இளமையும், அழகும், வனப்பும் மிகுந்த பேரழகு பெண். ஆனால் உயிரில்லை. ஆண்மையைத் தட்டி எழுப்பும் அத்தனை விசயங்கள் இருந்தும், அவள் உடம்பில் “உயிர்” இல்லாததால், இவன் சுத்தியில் உணர்வில்லை.
பதுங்கிப், பதுங்கி மெதுவாக நடந்தான். கட்டிலை நெருங்க, நெருங்க உடல் உதறல் கூடியதாகத் தோன்றியது. பத்துப்பதினைந்துச் சடலங்களை அள்ளியெடுத்து, எரிக்கச் சொன்னால், ஒற்றை ஆளாகப் பயமின்றிச் செய்யும் மனஉறுதி கொண்டவன்தான் ராயப்பன். ஆனால் ஒரு இளவரசியை. அதுவும் பேரழகியை, உயிரில்லா நிலையில் புணர வேண்டுமென்பது எப்படி? மடையைத் திறந்ததும் “வெள்ளம்” வழிகின்ற காரியமா அது. மனமெங்கும் பயமிருக்க, “இவளைப் புணர்வது”... இல்லை... இல்லை.. “இதனைப் புணர்வதென்பது” நடக்கவே இயலாத காரியமென்பதை உணர்ந்து கொண்டான். கட்டிலுக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளிகள் குறைந்துக் கொண்டேயிருந்தன. பளபளப்பான செந்தேவியின் கால்கள், அதன் நகங்கள், பளிங்கு கைகள், பால் மார்புகள், கரிய கூந்தலென ஒவ்வொன்றாக ராயப்பனின் பார்வைக்குக் கிடைத்தன.
அஞ்சி, அஞ்சி, கட்டிலை அடைந்து மொத்த உடலையும் கண்டான் ராயப்பன். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, குங்குமம் தடவப்பட்ட நிர்வாண உடல். இறந்த செந்தேவி நாச்சியாரின் முகத்தில் ஒரு சிறு சலனம் கூட இல்லை. பேரழகும், பெருங்கருணையும் கொட்டிக் கிடக்கும் முகம். ராயப்பனுக்குப் பயம் போயிருந்தது. என்றாலும் புணரும் அளவிற்குத் துணிவில்லை. அவன் உடம்பிலும், அதற்கான உணர்வில்லை.
ஆனால் மீண்டும் மீண்டும், அந்தக்கேள்வி மட்டும், நெற்றி முன்பே சுற்றிக் கொண்டிருந்தது. வெளியே போனால் கேள்வி கேட்பார்களே? புணர்ந்தாயே? என்று கேட்டால் என்ன பதில் சொல்ல? நேரம் கடந்து கொண்டிருந்தது. துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தான். செந்தேவி நாச்சியாரின் உடம்பிலிருந்து குங்குமத்தை எடுத்துக் கை, கால் உடம்பெங்கும் தேய்க்கத் தொடங்கினான். குங்குமம் தானே புணர்ந்ததற்கான அடையாளம். மொத்தமாக உடம்பெங்கும் பூசிக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். வேகமாகச் செயல்பட்டான். அந்த உடம்பிலிருந்து குங்குமத்தை, இந்த உடம்பிற்கு மாற்றிக் கொண்டிருந்தான். செந்தேவியின் கழுத்துப் பக்கத்திலிருந்து குங்குமம் எடுத்து, அவன் நெஞ்சுப் பகுதியில் தேய்க்கும் போதுதான் கவனித்தான், செந்தேவியின் கண்ணிமைகள் சிறிதாக அசைவதை.
ஆடிப்போய் விட்டான் ராயப்பன். மீண்டும் சோதித்தான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. ஒருவாறு யுகித்திருந்தான் ராயப்பன். விஷமருந்தி மயங்கிய நிலையிலிருந்த செந்தேவி நாச்சியாரை, தவறாக இறந்தாக முடிவு செய்திருந்தனர்...
உண்மைதான்.. உண்மைதான்....
இளவரசிக்கு உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
பதறினான். ஓடி வெளியேறினான். உடம்பெங்கும் குங்குமத்தோடு கணக்குப் பிள்ளையிடம் கூறினான்.
“இளவரசிக்கு உயிர் இருக்கிறது”.
பதட்டம் மேலோங்க கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம், உடனடியாக ஜமீன் அறைக்குச் சென்று விஷயத்தைக் கூறினார்.
விஷயமறிந்து ஜமீன் வேகமாக ஓடி வந்தார். வழியில் உடம்பெங்கும் குங்குமத்தோடு ராயப்பனைக் கண்டார். வைத்த கண் வாங்காமல் அந்தக் குங்கும தீட்டல்களைக் கண்டு கொண்டிருந்தார். மகள் பிழைத்த செய்தியை விட, ராயப்பன் செந்தேவியைப் புனர்ந்திருப்பானோ என்ற சந்தேகமே அவர் மனமெங்கும் மேலோங்கியிருந்தது. என்ன நினைத்தாரோ என்னவோ, கணக்கு பிள்ளையின் காதில் ஏதோ சொன்னார். பின்பு அமைதியாய் கண்கலங்க அவர் அறைக்கு நடந்தார்.
சிறிது நேரத்தில் ஜமீன் விசுவாசி காவலர்கள் இருவர், ராயப்பனைக் குத்திக் கொன்று, செந்தேவி நாச்சியாரின் அறைக்குள் வீசி, தயார் நிலையிலிருந்த எரிஎண்ணெயை ஊற்றித் தீயிட்டனர்.
கீழ்ஜாதி ராயப்பனும், மேல்ஜாதி செந்தேவி நாச்சியாரும் “தக” “தக” “தக”-வென எரியத் தொடங்கினர்.

6 கருத்துகள்:

  1. கண் முன்னே காட்சிகள் தெரியும் அளவிற்கு துல்லியமான வர்ணனை சிறப்பு..

    பதிலளிநீக்கு
  2. உருக்கமான கதை ஐயா...
    அப்பாவிகள் பலிகடா...

    பதிலளிநீக்கு
  3. அருமை.தொடர்ந்து பயனிக்கவும்.
    அ.நாகராசன்.

    பதிலளிநீக்கு
  4. பக்குன்னு ஆகிடுச்சு படித்து முடித்ததும்

    பதிலளிநீக்கு
  5. உயிரை பிய்த்தெடுப்பது போல் இருக்கிறது.. மனம் ஓடவில்லை கொஞ்ச நேரம் ..

    பதிலளிநீக்கு

Thanks