ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

சாமு

இப்படி ஒரு இக்கட்டான நிலையை சாமு வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. உடம்பெங்கும் கசக்கி பிழிகின்ற காயத்தின் வலிகள். வலி நிவாரணி ஊசி போட்ட இரண்டு மூன்று மணிநேரத்திற்கு உணர்வில்லாமலிருக்கும். நேரம் செல்ல சிறுமூளையை துரத்தி பிடிக்கும் வலியென்ற கருநாகத்தின் நாவுகள். அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியோடு எதிர்கொண்ட வாழ்க்கையை, பற்றியெரியும் சோகத்தோடு கடந்திட யாருக்குத்தான் பிடிக்கும். நடந்த விபத்தில் உண்டான நெற்றிக்காயம் இரண்டு கண்களின் பார்வையையும் பாதித்திருக்க வேண்டும். காணுகின்ற காட்சிகள் எல்லாம், மேகத்தில் கரைந்த உருவங்களாய் "புகை மூட்டமாய்" இருந்தது. "கண்ணுக்கு மருந்து ஊத்துக்கோம்லாம்மா...நாலு நாளுல சரியாகிடும்னு" - நர்ஸு சொன்ன வார்த்தை, தெய்வ அசிரிரீயாய் காதுகளை நனைத்து நெஞ்சுக்குள் இனித்தது.
விழுந்த வேகத்தில் இடது பிஷ்டத்தில் பட்ட அடியின் வலி மட்டும் "விடுவேனா" என்பது போல், முதுகு தண்டு வரை எந்நேரமும் தொடர்ந்தது. காரின் பின் இருக்கையில் இருந்தபடி கண்ட விபத்தின் "கொடூரக்காட்சி" திரும்ப திரும்ப அடிமனத்திற்குள் தோன்றி மறைந்தது. கட்டிய கணவனும், பெற்ற மகளும் உடல் நசுங்கி இறந்த காட்சியின் "வலி" மனப்பரப்பை விட்டு போக மறுத்தது. கொடூரம்..!அப்பப்பா... கொடுமையின் உச்சம்... ரெத்த வெள்ளத்தில் இடுப்பு துண்டித்த நிலையில் கடைசியாக அவள் கணவன் அவளை பார்த்த பார்வை, உடல் நசுங்கி, காதுகளில் மூக்கினில் ரத்தம் வடிய தன்னை நோக்கி விரல் நீட்டிய மகளின் காட்சிகள் மாறி, மாறி அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது. வெடித்து அழுதால் சோகம் தீர்ந்து விடுமென்கிறார்கள். அழுதவுடன் தீர்கின்ற துயரமா அது. இருந்தும் அழுதழுது, கண்ணீர் வழி துயரம் கரைக்க முயன்று கொண்டிருந்தாள் சாமு. துடித்து வெடித்து அழுது கண்ணீர் வற்றி, வெதும்பி உறங்குகிறாளா அல்லது களைத்து மயங்குகிறாளா என்பது சாமுவுக்கே குழப்பமாக இருந்தது. சோகத்தின் மூர்க்கத்தில் நினைவறியாது உறங்கவோ, மயங்கவோ செய்து விடுகிறாள் சாமு.
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி - என்று மருத்துவரோ, நர்ஸோ, கூப்பிடும்போது மீண்டும் தூக்கம் கலைந்து நினைவு திரும்பும். சுயநினைவு திரும்பிய அடுத்த கணத்தில் மீண்டும் உடம்பெங்கும் வலியின் துயரம். மருந்தின் துணையில், அதை நிறுத்தும் வேளையில் உற்றவர்களை இழந்த ஆழ்மனதின் துயரம் பாடாய் படுத்தும்.
மனித வாழ்வில் சாவை நினைத்த பயம் எல்லோருக்கும் உண்டு. அந்த சாவு தண்ணீரில் கரையும் உப்பென, பட்டென்று நிகழ்ந்தால் வரமாகும். அது விடுத்து சாவின் விளிம்பில் நின்று கொண்டு, மருத்துவர் கரம் பற்றி வாழ்வை நோக்கி திரும்பும் கணங்கள் மிக மிக வேதனையானது. உற்றவர்களை இழந்த துயரமும், சிகிட்சையோடு கழியும் "மருத்துவமனையின் நாட்களும்" மரணத்தை விட கொடியதாக இருந்தது சாமுவுக்கு.
ஐ சி யூ விலிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகுதான் உள்நோயாளிகள் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள் சாமு. நாற்பத்தெட்டு வயது முதிர்பெண் இப்போது இரண்டு வயது குழந்தையை போல் மருத்துவமனை வராந்தாவில் நடைபயிலுகிறாள். உற்றவர்கள் யாருமில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்போது பொங்கி வந்தாலும், பிழைத்த வாழ்வை, வாழும் ஆசை எந்த உயிருக்குத்தான் இல்லை. தாங்கமுடியா துயரமானது, கடந்துபோன சோகங்களாக நெஞ்சுக்குள் புதைய, தன் முன் விரிந்திருக்கும் வாழ்க்கையை வாழ முடிவெடுத்தாள் சாமு. ஆருயிர் கணவன் சாரங்கபாணி அவளுடனேயே இருப்பதாக தோன்றியது. சில இரவுகளில் அவர் குரலும் அப்பட்டமாக காதுகளுக்குள் ஒலித்தது.
அவ்வளவு பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தினர் இருவரும். இந்தியன் வங்கியில் ஒன்றாக வேலைபார்க்கும் போது, காதலாகி அது கல்யாணத்தில் முடிந்தது. வீட்டிற்கு ஒற்றை பிள்ளையான இருவருக்கும் கல்யாணத்தின் போது உடனிருந்தது சுற்றம் சூழ் நண்பர்கள் மட்டுமே. சாமுவிற்கு அப்பா இல்லை. சாரங்கபாணிக்கு அம்மா இல்லை. சேர்த்து வைத்த அன்புப் பாளங்களை தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொண்டனர் ஜோடிகள் இருவரும். ஒற்றை மகளாய் பவித்ரா பிறந்த போது, அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. சிப்பிக்குள் அடைபட்ட முத்தாய், பெற்ற மகளை அன்பால் அடைகாத்து வளர்த்தனர். இருபத்திநான்கு வருட குடும்ப வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்ததெல்லாம் ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோசம் இவை மட்டுமே. சுற்றும் நாற்காலியாய் நாட்கள் நகர்ந்து, வருடங்களை உருட்டி தள்ள, பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் பேரழகோடு, பதினெட்டு வயது பருவமங்கையானாள் பவித்ரா. சாரங்கபாணி தோற்றத்தில் அண்ணனாக இருந்து, மாமாவாகி, தாத்தா என்ற முதிர்பதத்திற்குள் தாவியிருந்தார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாலோ என்னவோ சாமு மட்டும் மாறாத இளைமையோடு இருந்தாள். சாமுவையும், பவித்ராவையும் வெளியே பார்ப்பவர்கள் அம்மா, மகளென்று சொல்வதில்லை. உடை, உருவமைப்பு, பேச்சு முதற்கொண்டு எல்லாவுமே அவர்களை அக்கா தங்கையாகவே காட்டியது.
சொந்த பந்தங்களுக்காக ஏங்கிய நிலையில் மகளையாவது பெருங் கூட்டுக்குடும்பத்தில் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தனர் பெற்றோர்கள் இருவரும். அதற்கு எதிரியாய் பவித்ராவின் வாழ்க்கையில் வந்தான் மோகன். அசப்பில் நடிகர் மோகனைப்போலவே இருக்கும் அவனுக்கும், பவித்ராவிற்கும் காதல் பூத்தது கல்லூரியில். அழகான, அன்பான இருபத்தெட்டு வயது வாலிபன். பன்னாட்டு நிறுவனத்தில் சிவில் எஞ்சினீராக நிறைவான வேலை. ஆசை மகளின் உண்மையான காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பேதும் சொல்ல வில்லை. ஆனால் மோகனும் அம்மா, அப்பா இல்லாத அனாதை என்ற போது, அவர்களுக்குள் ஒரு உறுத்தல். மீண்டுமொரு ஏமாற்றம். இருந்தும் மகளின் ஆசையை பூர்த்தி செய்து மோகனை தங்கள் மகனாகவே ஏற்றுக் கொண்டனர். நண்பர்கள் புடைசூழ திருமணத்தை நடத்திக் கொடுத்தனர்.
வாழ்வு இத்தனை இனிமையானதா என வாழ்ந்து களித்தனர் நால்வரும். எல்லோரும் வேலைக்கு செல்வதால், வாரவிடுமுறை நாட்களையெல்லாம் அணுஅணுவாக ரசித்து கழித்தனர். மோகன், பவித்ராவின் பெற்றோரை அம்மா, அப்பாவெனவே அழைத்தான். பாவம் அனாதையல்லவா. அவர்களின் உண்மையான அன்பு அவனை பலநேரங்களில் உணர்ச்சிவசப்படச் செய்தது. உன்னை விட உன் பெற்றோரே எனக்கு முக்கியமென பவித்ராவிடமே கூறினான். அவளும் மனதிற்குள் மகிழ்ந்து "அப்ப.. நான் உனக்கு முக்கியமில்லையாவென" செல்ல கோபம் காட்டினாள்.
ஒருநாள் காலையில் சாரங்கபாணி மோகனை அழைத்து ஒரு பார்சலை கொடுத்தார்.
"இது என்னதுப்பா..." - ஆச்சர்யத்தோடு மோகன் கேட்டார்.
"பிரிச்சு பாருப்பா"-என்றார்.
அவன் ஆர்வத்தோடு பிரிக்கும் அந்த நிமிடத்தில் சாமுவும், பவித்ராவும் உடன் சேர்ந்து கொண்டனர். இருவர் முகத்திலும் மந்தகாசப் புன்னகையும், பெருமிதமும்.
பார்சலுக்குள் புதிதாக பதிந்த பத்திரக் கட்டு ஒன்றிருந்தது.
வாழ்நாளின் மொத்த சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை மோகன் பேருக்கு எழுதி வைத்திருந்தனர் சாமுவும், சாரங்கபாணியும்.
உணர்ச்சி உச்சத்தில் ஏறத்தாழ அழும் நிலையிலிருந்தான் மோகன்.
"அப்பா... உங்க சுவீகார புத்திரன் இப்ப அழப்போறாங்க ... அழுதாச்சு... அன்னா... கண்ணீர் வந்தாச்சு..." என சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தாள் பவித்ரா.
உணர்ச்சி போராட்டத்தின் உச்சத்திலிருந்த மோகன், சட்டென்று சாரங்கபாணியின் தோளில் சாய்ந்து கட்டிப்பிடித்து விசும்பினான்.
"இதுல்லாம் எதுக்குப்பா" - என விம்மினான்.
சாமுவும் சாரங்கபாணியும் மோகனை சமாதானப் படுத்த, பவித்ரா அவன் மேல் சாய்ந்து கொண்டு
"இது பொய் அழுகை தானேவென" கிண்டலடித்தாள்.
"இனி எங்களுக்கு எல்லாமே நீதானப்பா.." என சாமு சமாதானம் சொன்னாள். ஆழ்மனதின் ஆழத்திலிருந்து மோகன் சொன்னான்.
"நான் ரெம்ப லக்கிப்பா. என்னை பெத்தவங்க கூட ஏன் மேல இவ்வளவு அன்பா இருந்திருப்பாங்களான்னு சந்தேகம்" - என்று உணர்வு மிகுந்து பேசினான் மோகன்.
சந்தோச உணர்ச்சி பிரவாகங்களில் நான்கு மனதுகளும் ஒன்றோடொன்று மோதி அன்பை தங்களுக்குள்
வாரியிறைத்துக் கொண்டன.
அப்படியொரு சிறப்பான வாழ்வில் இப்படி ஒரு பேராபத்து வருமென யாருமே எதிர்பார்க்க வில்லை. அந்த சனிக்கிழமை மட்டும் விடியாமல் இருந்திருந்தால். அப்பாவும் மகளும் வற்புறுத்தி அந்த சினிமாவிற்கு தன்னை அழைக்காமல் இருந்திருந்தால், நான்தான் கார் ஒட்டுவேனென பவித்ரா சொல்லாமல் இருந்திருந்தால், வேலை இருப்பதால் வர முடியவில்லையென மோகன் சொல்லாமல் இருந்திருந்தால், எதிரே அந்த டிம்பர் லாரி வராமல் இருந்திருந்தால், சட்டென்று உள்புகுந்த நாயை பவித்ரா கவனிக்காமல் இருந்திருந்தால், அந்த விபத்து நிகழ்ந்திருக்காது. ஆமாம். இதில் ஏதேனும் ஓன்று நிகழ்த்திருந்தாலும் அந்த கொடூர விபத்து நிகழ்ந்திருக்காது. நம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு கணக்கை நாமிட்டுக் கொள்ளலாம். ஆனால் இறைவன் அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே. கோர விபத்தில் செத்து பிழைக்கும் கணக்கை சாமுவிற்கும், அற்பாயுளில் சாகும் கணக்கை பவித்ராவிற்கும், சாரங்கபாணிக்கும் விதித்திருந்தான் இறைவன்.
பத்து நாட்கள் தாடியோடு படிக்கட்டில் ஏறி வந்து கொண்டிருந்தான் மோகன். அள்ளி சாப்பிட நினைத்த சந்தோச சாப்பாடு, சாப்பிடும் போதே கைநழுவி சிந்தியது போலிருந்தது அவன் மனநிலை. யாருமில்லாத தனக்கு பவித்ராவே எல்லாவுமென நினைத்தான். காதலும் காமமும் எல்லாரும்தான் செய்கிறார்கள். ஆனால் யாருமே இல்லாத ஒருவருடைய தனிமையை போக்கவரும் மற்றோருவர் கடவுளுக்கு நிகரானவர். மோகனின் வாழ்வில் கடவுளாக வந்தவள் பவித்ரா. அவனுக்கென தன் குடும்பத்தை ஈந்த கடவுள். காதலியாய், மனைவியாய், தோழியாய் எல்லாவுமாய் இருந்த கடவுள் பவித்ரா. இனி எல்லாம் சுகமே - என்றிருந்த வாழ்க்கை இன்று கருங்கல் பட்ட கண்ணாடிக் குடுவையாய் சிதறிக் கிடக்கிறது. மூவருக்கும் நடந்த விபத்தை அறிந்து துடிதுடித்து போனான். உயிரற்று கிடந்த மனைவி, மாமனாரின் உடல்களை அடக்கம் செய்த தினங்கள், மூன்று நாட்களுக்கு பிறகு குற்றுயிராய் கிடந்த அத்தையிடம் அதை தெரிவித்த பொழுதுகள் - என கடந்து போக முடியா பொழுதுகளை கடந்து நிற்கிறான் மோகன். இந்த வாழ்விருக்கிறதே ஏதோ ஒரு பொழுதில் எல்லாவற்றையும் நகர்த்தி, கடத்தி விடுகிறது. வாழ்க்கையின் சக்தி அதுவே. "வாழ முடிந்த வரை வாழ்ந்து விடு" என்பதே ஒரு உயிரின் பெருந்தேவையாக இருக்கிறது. மொத்த கவலையையும் கடந்து வாழத் தொடங்கியிருந்தான் மோகன்.
மருத்துவமனை அறைக்குள் ஏ சி ஓடும் சப்தம் மெதுவாக கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மருந்தின் நெடி காற்றை ஆக்கிரமித்திருந்தது. கையிலிருந்த பழக்கூடையை ஆஸ்பத்திரி கப்போர்டில் வைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான் மோகன்.
"இப்ப எப்படி இருக்கும்மா"
"பரவாயில்லப்பா..." - சொல்லும் போதே சாமுவிற்கு அழுகை வந்தது. மோகனும் உணர்ச்சியை அடக்கி ஆதங்கப்பட்டான்.
"அம்மா.. இதுக்குதான் நான் உங்க பார்வையிலே படாம இருக்கேன். நடந்தது நடந்து போச்சு... உங்களுக்கு நான் இருக்கேன்.. கவலை பாடாதீங்கம்மா..." - என்றான்.
சாமு அழுகையை அடக்கி கொண்டாள்.
"பிளீஸ் மா... நீங்க இப்ப ரெம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாது... டாக்டர் ரெம்ப ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க.. பிளீஸ்..."
சாமு ஒரு பெருமூச்சு விட்டு, மொத்த அழுகையையும் நிறுத்த முயற்சித்தாள்.
"இப்ப வலி எப்படி இருக்கு?"
"பரவாயில்லை... மெடிசின்லாம் சாப்பிட்டிட்டு நாக்குதான் கசப்பவே இருக்கு..."- தொண்டை கமர பேசினாள்.
"இன்னையிலிருந்து ஜூஸ் குடிக்கலாம்னு சொல்லியிருக்காங்க... அதான் வாங்கிட்டு வந்திருக்கேன். இன்னும் ஒருவாரம் கழிச்சுதான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம்.. உங்கள பக்கத்துல இருந்து பாக்கிறதுக்கு எங்க ஆபீஸ் பியூனோட வொய்ப்ட சொல்லியிருக்கேன்... அவங்க பேரு மேரி... இன்னைக்கு வந்திருவாங்க... நான் நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்... எதுக்கும் கவலை படாதீங்கம்மா.. உங்களுக்கு நான் இருக்கேன்..." - உறுதிபடப் பேசினான் மோகன்.
மோகனின் நம்பிக்கை வார்த்தைகள், மீதியிருக்கும் வாழ்நாளின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த
சாமுவின் கண்களுக்குள் ஒரு புத்துயிர்ப்பு பிறந்தது.
காலம் எல்லா காயங்களுக்கும் ஏதாவது ஒரு மருந்திட்டு குணப்படுத்தி விடுகிறது. மோகன் அடுத்து வந்த மூன்று மாதத்தில் ஓரளவிற்கு சகஜமாயிருந்தான். தன் வேலையின் பளுவில் முற்றிலும் மூழ்கியிருக்க, கூடவே அத்தையாகிய அம்மா சாமுவையும், வேலைக்காரி மேரியின் துணையோடு நன்றாக கவனித்துக் கொண்டான். சாமுவும் மனதை தேற்றிக் கொண்டிருந்தாள். உடம்பு சரியாகிய நிலையில் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள் சாமு. சேர்ந்த மறுமாதத்தில் அவள் பலவருடங்களாய் எதிர்பார்த்த பணி உயர்வு பம்பாய் கிளையில் கிடைத்தது. உடல் நலத்தையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு வேண்டாமென மறுத்து விட்டாள் சாமு. பெரிதாக மகிழ்ந்து கொண்டாடாவிட்டாலும், வாழ்க்கை இருவருக்கும் மீண்டும் வசப்பட ஆரம்பித்திருந்தது.
இதற்கெல்லாம் மாறாக அவர்கள் எதிர்பாராத வேறொரு பேச்சு ஊருக்குள் உலவ ஆரம்பித்தது. அத்தையும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதை வைத்து, சமூக சீர்கெட்ட சிந்தனையாளர்கள் தங்கள் கதைகளை எழுத ஆரம்பித்தனர். எலும்பில்லாத நாக்கினை கொண்டு, வரம்பில்லா வார்த்தைகளை தரம் கெட்டுப் பேசத் தொடங்கினர்.
"ஐம்பது வயசிலையும் ஆளு எப்படி இருக்கா... அதான் பையன் மடிஞ்சிட்டான்"
"அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டே... கோழியையும் தின்னு... அதுக்கு குஞ்சையும் திங்கத்துக்கு..."
"என்னதான் தாயா.. பிள்ளையா... பழகினாலும், உடம்புக்கு அதெல்லாம் தெரியுமா?.."
"மேரிட்ட கேட்டா தெரியும்... ரெண்டு பேரும் அடிக்கக் கூடிய கூத்து..."
"முன்னாடியே இருந்திருக்கும்... இப்ப லெக்காலிகளுக்கு ரெம்ப வசதியா போச்சு..."
அமிலம் தோய்த்த வார்த்தைகளை ஊரார்கள் அள்ளி வீசினர். சில வார்த்தைகளை நேரடியாக பேசிவிட்டு, இன்ன பலவற்றை, பார்க்கும் கண்களின் கற்பனைக்கு விட்டு விடுவதை ஊராருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். களங்கமில்லா அன்பர்களுக்கிடையே காமம் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். கட்டிப் பிடித்ததாய் பேசிக் கொண்டனர். கட்டிலில் கிடந்ததாய் பேசிக் கொண்டனர். அவர்கள் ஒன்றாக கடந்து செல்லும்போது, தங்களுக்குள் கண்ணடித்து சிரித்துக் கொண்டனர்.
ஊராரின் பேச்சு உலையாக கொதிப்பதை, இருவரும் இலைமறை காயாக அறிந்தனர். அதுவரை பிழையில்லா அவர்கள் உறவில் ஏதோ ஒரு நெருடல். இருவருக்கும் இடையே இருந்த பேச்சு படிப்படியாக குறைந்தது. ஒருவர் முகம் பார்த்து மற்றவர் பேச ஒரு தயக்கம். வேலை பளுவை காரணம் காட்டி வீட்டிற்கு தாமதமாக வர ஆரம்பித்தான் மோகன். நேரம் விடிவதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்ப ஆரம்பித்தான். அம்மாவென்று அவன் அழைக்கும் ஓசை காதுகளில் விழுந்து இரண்டு மூன்று மாதமிருக்கும்.
சோகம் கலந்த தவிப்பில் வெகுண்டுருகினாள் சாமு. என்னவாயிற்று தனக்கு... மோகன் பேசாமல் இருந்தால் என்ன? மகன் தானே.. சரியாகச் சொன்னால் மருமகன் தானே... அவன் என்னோடு ஏன் பேச வேண்டும்... அம்மாவென்று ஏன் அழைக்க வேண்டும்... அவனை தவிர இப்போது எனக்கென்று யார் இருக்கிறார்கள்... என்னமாதிரியான மனநிலையிது... ஒரு வேளை ஊரார் சொல்வதைப்போல், உனக்கே தெரியாமல் அவன் மீது... சீ... அவன் என் மகன்... வயோதிகம் தழுவும் வேளையில் வேறென்ன வேண்டும்... அயரும்போதெல்லாம் சில நம்பிக்கை வார்த்தைகள்... தளரும் போதெல்லாம் சில ஆறுதல் செய்திகள்... வேறென்ன வேண்டும் இந்த வயதில்... அவனுக்கு வேறு கல்யாணம் பண்ணிவிட்டால் குழப்பம் தீருமே... செய்யலாம், ஆனால் வருபவள் இந்த அம்மா மகன் உறவை மதிப்பாளா... சுற்றியிருக்கும் உலகம்தான் அதை அனுமதிக்குமா... தற்போது பேசாமலிருக்கும் அவன், புது மனைவியோடு வேறு வீட்டிற்கு சென்று விட்டால்... மீண்டும் துரத்திவரும் தனிமையின் கொடுமையை நினைக்கையில்... அய்யோ... முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமை... உனக்கென்று சொந்த வீடு கூட இல்லையே... - மனப்போராட்டத்தில் நெஞ்சுக்குள் பல குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான மனப்போராட்டத்தில் வாழ முடியாது. வாழவும் கூடாது. எல்லாவற்றிற்கும் வரும் சனிக்கிழமை உறுதியாக ஒரு முடிவு எடுத்துவிட தீர்மானித்தாள் சாமு.
அந்த சனிக்கிழமையின் இரவில் கையில் ஒரு பார்சலோடு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சாமுவின் முன் நின்றான் மோகன். வழக்கத்துக்கு மாறாக அவனே முன் வந்து நின்றது சாமுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை நம்மை போல் அவனும் ஏதோ ஒரு முடிவோடு வந்திருப்பானோவென பலவாறு எண்ணிக் கொண்டிருக்கையில் மோகன் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தான்.
"ரெம்ப சாரி அத்தை..." சாமுவை முதன் முதலாய் அத்தை என்றழைத்தான்.
அவன் சொன்ன அந்த அத்தை அவளுக்கு அசாதாரண வார்த்தையாகப் பட்டது. அவளும் கோப மிகுதியில் "சொல்லுங்க மருமகனே" என்றாள். பார்சலை பிரித்துக் கொண்டே தயங்கி தயங்கி பேசினான் மோகன்.
"இதுல அப்பாவோட, அவளோட இன்சூரன்ஸ் அமௌண்ட் அப்ரூவ் ஆன செக் இருக்கு... இந்த வீட்டை உங்க பேர்ல மாத்தி எழுதுன பாத்திரமும் இருக்கு..." - சாமுவின் கையில் கொடுத்தான்.
"சோ... எல்லாம் முடிச்சுது... நான் கிளம்புறேன்னு சொல்ற..." - சிறிதான அதட்டலுடனே கேட்டாள் சாமு.

அவள் பேச்சின் கோபத்தை உணர்ந்து கொண்டவனாய், "அம்மா பிளீஸ் நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க... இந்த ஊரு நம்மள பத்தி பேசுறது போதாதா?" - என்றும் கெஞ்சும் குரலில் பேசினான் மோகன்.
"ஊரு என்ன பேசுது... சொல்லு மோகன்..."
"ஏம்மா... என்ன அழ வைக்கிறீங்க..."

"இதுல அழறதுக்கு என்ன இருக்கு... ஊரு ஏதாவது சொன்னா... ஆமா... எங்க அத்தையை நான் வச்சிருக்கேன்னு நீ சொல்ல வேண்டியதுதானே... அத விட்டிட்டு நீ ஏன் ஏன்ட பேசாம இருக்க..." - தெளிவான குரலில் உறுதியாகப் பேசினாள் சாமுண்டீஸ்வரி.
மோகன் கண் கலங்கி இருந்தான்.
"காருக்குள்ள மொத்த குடும்பமா நாங்க உயிருக்கு போராடிட்டு இருந்தப்ப... சுற்றி நின்னு வீடியோ எடுத்த கூட்டம்ப்பா இந்த ஊரு... அவங்க பேசுறத வச்சு... என்னைய நீ பிரிஞ்சு போக நினைக்குற..." - பொட்டிக் கரைந்தாள் சாமு. எங்கிருந்துதான் வந்ததோ அவ்வளவு கண்ணீர்.
"மோகன்... உனக்கெப்படியோ... எனக்கு நீதான் மகன்... உனக்கு கொடுத்த வீடு, இந்த பணம் எல்லாம் உனக்குத்தான்... நான் இன்னைக்கே பம்பாய் கிளம்புறேன்... அங்க எனக்கு டிரான்ஸ்வர் கன்பார்ம் ஆயிடுச்சு... நீ என்னைய விட்டிட்டு போறத என்னால தாங்க முடியல... அதுனால நானே உன்ன விட்டிட்டு போறேன்... நல்ல ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு..." - கையிலிருந்த பார்சலை மீண்டும் மோகனின் கையில் திணித்து விட்டு, வீட்டுக்குள் சென்று ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பெட்டிப் படுக்கைகளுடன் வெளியே வந்தாள்.
"என் புருஷனையும், பொண்ணையும் தூக்கி போட்ட மாதிரி, நான் செத்தா... என்னையும் தூக்கி போட்டிடு... என் மகனா அத மட்டும்தான் நான் உன்ட கேக்குறதுன்னு" - சாமு கண்ணீர் நிரம்ப கூறித் திரும்புவதற்கும், அவள் புக் செய்த ஓலா டாக்ஸி வருவதற்கும் சரியாகயிருந்தது.