வியாழன், 5 செப்டம்பர், 2019

சொல்லிக்கொடுங்கள்

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக செய்தி படித்தேன். என்னுடன் பணிபுரியும் அயல்நாட்டவன் ஒருவன் (நண்பன்தான்) இந்த செய்தியை உரக்க படித்து, என்னைப் பார்த்து சிரிக்கிறான். செய்தி உண்மையாயிருக்காது, என்று வாதாடினேன். ஆதாரங்களோடு நிரூபித்தான். உண்மைதான். “நாங்கெல்லாம் ஒருவனுக்கு ஒருத்தியாயிட்டு” வாழுற ஆட்களாக்கும்” – என்று அவனுடன் பீத்திக் கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது. உற்ற நண்பன் ஆதலால் பெரிதான அவமானம் இல்லை. இருந்தும் ஏதோ ஓன்று, இடுப்புக்கும் நெஞ்சுக்கும் இடையில் “குடைந்து” கொண்டேயிருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு, இங்கு வெளிநாட்டிற்கு என் குடும்பத்தை அழைத்துச் செல்ல போகிறேன் என்று கூறிய அடுத்தக் கணத்தில், என்னைச் சார்ந்தவர்களிடமிருந்து நான் எதிர் கொண்ட முதல் கேள்வி, “அங்க பொம்பளைக்கெல்லாம் பாதுகாப்பு” உண்டா? என்பதாகும். அதிலும் சிலர், “என்னதான் இருந்தாலும்... நம்ம ஊரு மாறி சுதந்திரமா, பாதுகாப்பா வாழ, அங்கு முடியாது” என்று அறுதியிட்டுக் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் இன்று நிலைமை தலை கீழ்.
“இந்தியனாலே... புடிச்சு கற்பழிச்சு விட்டிருவான்னு”- என்ற பேச்சை, இலைமறை காயாக உலமெங்கும் பரவச் செய்தததில் “நம் நாட்டு ஊடகங்களுக்கு” சிறப்பான(?) பங்குண்டு.
"கதறக் கதறக் கற்பழிப்பு"
"ஓடும் பஸ்ஸில் வன்புணர்வு"
"கூட்டத்தில் பாலியல் தீண்டல்கள்"
"சுற்றுலா பயணிகளுக்கு பாலியல் தொல்லை"
- படித்த மொழியறிவை இம்மாதிரியான விசயங்களில் “விரசமாகப்” பிரகடனப்படுத்தி, பிரபலப்படுத்தியதில் ஊடகங்கள் கொஞ்சம் தார்மீகச் சிந்தனைகளோடு செயல்பட்டிருக்கலாம். “அப்படியின்னா.. இம்மாதிரி நடந்த விசயங்களை ஊடகங்களில் போடக்கூடாது என்கீறீர்களா” -என்றால், என் பதில்... “இந்தியாவில் இதுமட்டும் தான் நடக்கிறது என்பது போல் போடாதீர்கள்” என்பதாகும்.
சற்று காமரசம் சொட்ட நான் எழுதிய “யோக்கியன்” சிறுகதை நினைவுக்கு வருகிறது. இணைப்பு முதல் கமெண்டில்.
பெண் என்பது யார்? ஆணைப் போன்ற சக மனிஷி. ஒரு உயிர். அவ்வளவே. ஒரு உயிரை ஒரு உயிராய் மதிக்க கூடவா நம் ஆண்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆண் இருக்கிறான். ஒரு பெண் இருக்கிறாள். இருவரும் பழகுகிறார்கள். ஆணின் ஒவ்வொரு நகர்வும், அவளிடமிருந்து காமத்தை எதிர்பார்க்கிறது. அது உண்மை. இயற்கை அவன் உடலை அப்படியே படைத்திருக்கிறது. காமம் அவன் இறுதிக் குறிக்கோளாக இருந்தாலும், இடையினில் அவள் மீது, மட்டற்ற அன்பை பொழிகிறான். பரிசுகள் கொடுக்கிறான். வார்த்தைகளின் மூலம், செய்கைகளின் மூலம் அவள் பாதுகாப்பை உறுதி செய்கிறான். பெண் தன் பாதுகாப்பு ஒன்றை பிராதானமாகப் பார்க்கிறாள். உரியவனை தேர்வு செய்ததும், அவள் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை வந்ததும், தன்னைக் கொடுத்து, அவன் தேவையை நிறைவு செய்கிறாள். உலகமெங்கும் இதுவே நடைமுறை. அதாவது ஆணாகப் பிறந்த உயிரினம் இணை சேர துடித்துக் கொண்டே இருக்கிறது. பெண்ணாகப் பிறந்த உயிரினம் தன்னை பாதுகாத்து நேசிக்கும் ஆணுக்கும் தன் உடம்பை பரிசாக்குகிறது. பச்சையாகச் சொன்னால், “இனப்பெருக்கமே” பிராதானம் எல்லா உயிர்களுக்கும்.
எல்லா உயிர்களும் இப்படி இயங்க, பகுத்தறிவு தேடுதல்களில், மனிதர்களுக்குள் “மதம்” புகுகிறது. பெரும்பாலும் எல்லா இந்திய மதங்களும் பெண்ணுடம்பை “புனிதம்” என்கிறது. அதிலும் கட்டுக்கடங்காத “கற்புக்கரசிகளின்” கதைகளை முன்னிறுத்தி, காமமுருவதை பாவம் என்றாக்கியது. அதிலும் நம் இந்திய சமூகத்தில் ஒரு பெண், நான் இந்த ஆணின்மேல் காமமாக இருக்கிறேன் என்று பகிரங்கமாக, வெளிப்படையாக கூறவே முடியாது.
இது எவ்வாறு நடந்திருக்கும்? ஒரு வீடு இருக்கிறது. 10 பேர்கள் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்ற சுதந்திரம் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். நாட்கள் செல்ல செல்ல அவ்வீட்டில் 500 பேர்கள் வாழ வருகிறார்கள் என்றால், குழப்பம் தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிப்பதைப்போல், மனிதருக்குள்
பேதமின்றி எல்லோருடன் உடலுறவு இருந்த போது ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க, “இவனுக்கு இவள்”, “இவளுக்கு இவன்” என்ற உறுதிப்பாட்டை நிலை நிறுத்த, கூடி வாழ்தலையும், குடும்ப கட்டமைப்பையும் பாதுகாக்க, இம்மாதிரியான கட்டுப்பாடுகளை “மதங்களின்” வழி நடைமுறை படுத்தியிருக்கலாம்.
சரி, விதிக்கப்பட்ட இக்கட்டுப்பாடுகளை ஆண் எளிதாக மீற முடிந்தது. அவன் மீறுவதால் பெரிதான பாதிப்புகளை அவன் எதிர்கொள்வதில்லை. ஐந்தாறு நிமிட ஆனந்தத்தை, அவனால் கட்டுப்பாடுகளை மீறி அனுபவிக்க முடிந்தது. பெண்ணின் நிலையோ, சுகித்தபின் பத்துமாதம் பிள்ளை சுமக்கும் கடமைக்குள், அவளை விழச் செய்தது. பிள்ளை பிறந்தபின் வரும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு, “பெண்களின்காமம்” சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு சற்று பின்னோக்கியது. அதனால்தான் சிறு தொடுதல்களிலேயே ஆண் தயாராகிவிடுகிறான். பெண்ணோ பாதுகாப்பை உணர்ந்த பின்புதான் தன்னிலை மறக்கிறாள்.
இவ்வாறாக புனிதம், கற்பு, பெண்மை என்ற அடையாளங்களால் பெண்கள் ஆண்களிடமிருந்து பெரிதும் தனிப்படுத்தப்பட, எதிர்பாலின ஈர்ப்பின் வேகம் மொத்த சமூகத்திற்குள்ளும் அதிகரிக்கிறது. அந்த உந்துதல் கட்டுபாடுகளை உடைக்கவோ, அல்லது வாய்ப்புக் கிடைத்தால் மீறவும் வழிவகைச் செய்கிறது.
சரி.. அது இப்போது மட்டும் ஏன் இத்தனை அழுத்தமாக – என்று யோசிக்கும் போது “தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி” அதற்கான விடையைக் கொடுக்கிறது. இதற்கு முன்னால் ஆண் பெண்களுக்குள் தவறுகள் நடந்ததில்லையா? கண்டிப்பாக நடந்திருக்கும். “மறதி” என்ற மாமருந்து காலவோட்டத்தில் அவர்கள் “தவறை” மறைத்திருக்கும். ஆனால் இப்போதிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில், “காலங்களை” “நிகழ்வுகளை” நிலைநிறுத்தும் இயந்திரங்களான புகைப்படம், வீடியோ போன்றவை அவர்களுக்குள் நடந்தவைகளை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. இணையத்தில் புதைந்து கிடக்கும், மறை கேமராக்களின் வீடியோக்களே இதற்கு சான்று. புதிதாக பாலியல் உணர்ச்சி ஊற்றேடுக்கும், நம் பதின்ம பிள்ளைகள் இவற்றை பார்கிறார்கள். . “போலச் செய்தல்” என்பார்கள். அதாவது “Imitation”. காதல் செய்தால் இதுவெல்லாம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். முயற்சிக்கிறார்கள். முடியாதபோது மூர்க்கமாகிறார்கள். ஒரு பதினைந்து வயது பையனை, “பெண்” பாதிப்பது போல் வேறு எந்த விசயமும், பாதிக்காது என்கிறார்கள். உண்மைதான்.. பாலியல் விடியோக்களால், தாய் தந்தையரால் விளக்கப்படாத விஷயங்களால், சமூக கட்டமைப்புகளால், உந்தப்பட்ட “இளைஞர் சமூகம்” தன்னிலை அறியாது, ஏதேதோ செய்யத் துணிகிறார்கள்.
சரி.. வெளிநாட்டில் இந்த பிரச்சனை இல்லையா என்றால், அங்கு பெண்ணை, பெண்ணுடம்பை இத்தனைப் “புனிதமாகப்” பார்க்கும் மனோபாவம் இல்லை. மதங்கள் இல்லை. பெண் தெய்வங்கள் இல்லை. பெண் என்பவள் சக உயிர். ஆணை போன்ற ஒரு உடம்பு அவளுக்கும். ஒரு பெண் குளிப்பதை படமெடுத்து, இணையத்தில் போட்டு விடுவேன் என்று அங்கு அவளை மிரட்ட முடியாது. மேலாடையின்றி படமெடுத்து மிரட்டிய மோசமான காதலனுக்கு(?) பயந்து, தற்கொலை செய்யும் பெண்களை கொண்ட, இதே இந்திய சமூகத்தில்தான், பல கோடி ரூபாய் சம்பளம் பெரும் “பாலியல் நடிகையும்” வலம் வருகிறாள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
சரி இதற்கு என்ன செய்யலாம். ஒரே விசயம்தான்தான். தயக்கம் விடுத்து, வெட்கம் ஏதுமின்றி, குழந்தைகளோடு பேசுங்கள். தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். வெளிச்சமாக இருக்கிறது என்று வேறு இடத்தில் தேட முடியாது.
அம்மாவும், அப்பாவும் “இப்படிச் செய்ததால்தான்” நீ வந்தாய் என தெளிவாக விளக்குங்கள். உங்கள் குழந்தையின் குஞ்சுமணியை பிடித்து “ஒண்ணுக்கு” போவதை சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கினை உபயோகப்படுத்த சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். அதே போல் அவர்களுக்கு புரியும் வயதில், நேரடியாக சொல்லி விடுங்கள். முடியவில்லையென்றால் at least இலைமறை காயாக, அவர்களுக்கு விளங்கும் படி சொல்லுங்கள். அவர்களின் கேள்விகளுக்கு, தெளிவான பதிலளியுங்கள். உடல்ரீதியாக விளக்கி, உள்ளத் தேவையையும் புரிய வையுங்கள்.
அப்பாவைப் போல் உனக்கும் ஒருவன் வருவான். அவனுக்கு இதெல்லாம் இருந்தால் நீ வாழ்வில் மகிழ்வாக இருக்கலாம்மென நம்பிக்கையை மகளுக்கு ஏற்படுத்துங்கள். அம்மாவைப்போல் உனக்கும் ஒருத்தி வருவாள், அவளை நீ எவ்வாறெல்லாம் கவனிக்க வேண்டுமென்ற உறுதியை மகனுக்கு ஊட்டுங்கள். புறஅழகை கண்டு, infatuation – ல் விழும் “அந்த ஈர்ப்பு” காதலில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். உடலை பற்றி விளங்குங்கள். உள்ளம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. உண்மை வேறாகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks